பஞ்சாப் துயர்.. சொந்த ஊர் வருகிறது தமிழக வீரர்களின் உடல்கள்.. ராணுவ மரியாதையுடன் இறுதிசடங்கு - அஞ்சலி
மதுரை: பஞ்சாப் மாநிலத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் பலியான தமிழ்நாட்டை சேர்ந்த இரண்டு ராணுவ வீரர்களின் உடல்கள் இன்று சொந்த ஊர் கொண்டுவரப்பட்டு ராணுவ மரியாதையுடன் அடக்கம் செய்யப்படுகிறது.
பஞ்சாப் பதிண்டா ராணுவ முகாமில் கடந்த 12ம் தேதி அதிகாலை சுமார் 4.35 மணியளவில் துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டது. இதனையடுத்து உஷாராண ராணுவ படையினர் உடனடியாக முகாமை சுற்றி வளைத்தனர். பின்னர் தேடுதல் வேட்டையில் இறங்கினர். அப்போது நான்கு பேர் ரத்த வெள்ளத்தில் சடலமாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களை உடனடியாக மீட்ட ராணுவத்தினர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மறுபுறம் முகாமில் நடந்த தேடுதல் வேட்டையில் யாரும் பிடிபடவில்லை.

எனவே இது தீவிரவாத தாக்குதலாக இருக்கலாம் என்று முதலில் சந்தேகிக்கப்பட்டது. ஆனால், இது தீவிரவாதிகளின் தாக்குதல் இல்லை என்று காவல்துறையினர் விளக்கமளித்தனர். அதாவது, "கடந்த 2 நாட்களுக்கு முன்னர் இந்த முகாமிலிருந்து இன்சாஸ் ரக துப்பாக்கி ஒன்றும் 28 புல்லட்டுகளும் காணாமல் போயின. எனவே இதற்கும் இந்த சம்பவத்திற்கும் தொடர்பு இருக்கலாம் என்று தெரிகிறது. எனவே ராணுவத்தினரும், பஞ்சாப் போலீசாரும் இணைந்து விசாரணையை மேற்கொண்டு வருகிறோம்" என்று அம்மாநில ஏடிஜிபி பர்மர் கூறியுள்ளார்.
மறுபுறம் உயிரிழந்தவர்கள் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. உயிரிழந்த 4 பேரும் ராணுவ வீரர்கள் என்றும், அவர்கள் அனைவரும் பீரங்கி படையை சேரந்தவர்கள் என்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. அதில் 2 வீரர்கள் தமிழ்நாட்டை சேர்ந்தவர்களாவார்கள். ஒருவர் தேனி மாவட்டம் தேவாரத்தை அடுத்த தே.மூணாண்டிபட்யை சேர்ந்த யோகேஷ்குமார்(23) ஆவார். பிஎஸ்சி பட்டதாரியான இவர் கடந்த 2020ம் ஆண்டு ராணுவத்தில் சேர்ந்தார். பல ராணுவ தளங்களில் பணியாற்றிய அவர் கடைசியாக பஞ்சாப் பதிண்டா ராணுவ முகாமில் பணியாற்றி வந்துள்ளார்.
அப்போதுதான் நேற்று முன்தினம் வத்தலகுண்டுவை சேர்ந்த ராணுவ வீரர் ஒருவர் யோகேஷ்குமாரின் குடும்பத்தினருக்கு தொடர்பு கொண்டு தங்களது மகன் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்துவிட்டதாக கூறியுள்ளார். இதனை கேட்ட யோகஷ்குமாரின் பெற்றோர் கதறி அழுதுள்ளனர். இதனையடுத்து இன்று காலை 5.30 மணியளவில் டெல்லி விமான நிலையத்திலிருந்து ராணு மரியாதையுடன் யோகேஷ்குமாரின் உடன் விமானம் மூலம் புறப்பட்டு மதுரை விமான நிலையத்தை இன்று காலை வந்தடைகிறது.
பின்னர் உடல் முழு ராணுவ மரியாதையுடன் இன்று மாலை அவரது சொந்த ஊரில் தகனம் செய்யப்படுகிறது. யோகேஷ்குமாரின் மரணம் மாவட்டம் முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல இந்த துப்பாக்கிச்சூட்டில் பலியான மற்றொரு வீரர் சேலம் மாவட்டம் நங்கவள்ளி அருகே உள்ள சானார்பட்டியை சேர்ந்த கமலேஷ் (24) ஆவார். இவரது உடலும் இன்று சொந்த ஊருக்கு கொண்டுவரப்படுகிறது. கமலேஷ் குடும்பத்தில் இவருக்கு இரண்டு சகோதரிகள் ஒரு அண்ணன் உண்டு.
விவசாயி மகனான கமலேஷுக்கு சிறு வயதிலிருந்து ராணுவ வீரராக வேண்டும் என்று ஆசை இருந்துள்ளது. கல்லூரி படிக்கும் போது ராணுவ வீரராக தேர்வாவதற்கு உரிய அனைத்து பயிற்சிகளையும் மேற்கொண்ட கமலேஷ் அனைத்து மாணவர்களுக்கும் முன் மாதிரியாக இருந்ததாக சக மாணவர்கள் கூறுகின்றனர். இவரது மறைவு ஒட்டுமொத்த சேலம் மாவட்டத்தையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.












Click it and Unblock the Notifications