மதுரையில் கல்யாணம் முடிந்த மறுநாளே நகை, பணத்துடன் கம்பி நீட்டிய புதுப்பெண்.. கலங்கிய மாப்பிள்ளை
மதுரை: மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே டிரைவரை 2-வது திருமணம் செய்வது போல நடித்து மோசடி செய்துவிட்டு நகை, பணத்துடன் புதுப்பெண் ஓட்டம் பிடித்ததாக புகார் எழுந்துள்ளது..
திருமணம் என்ற பெயரில் மோசடி செய்யும் பெண்கள், ஆண்கள் குறித்து எவ்வளவு தான் விழிப்புணர்வு இருந்தாலும், அவர்களால் பல குடும்பங்களில் சிக்கல்கள் ஏற்படுகிறது. ஏமாற்றுவதை அவர்கள் விடுவது இல்லை.. ஏமாற்றிக்கொண்டே தான் இருக்கிறார்கள்.

திருமணம் ஆகாமல் இருக்கும் 90ஸ் கிட்ஸ்களை குறிவைத்து ஏமாற்றுவது பல பகுதிகளில் அதிகமாக இருக்கிறது. அவர்கள் வெளியில் சொல்லவும் முடியாமல் பரிதாபத்துக்குரிய நிலையில் இருக்கிறார்கள். ஆணுக்கோ அல்லது பெண்ணுக்கோ திருமணம் என்ற பெயரில் மோசடி நடந்தால் வாழ்நாள் முழுவதும் வலி தரக்கூடிய மோசமான அனுபவமாக இருக்கும். அந்த வகையில் மதுரையை சேர்ந்த ஒருவர் ஏமாற்றப்பட்டுள்ளார்.
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த ஒருவர் டிரைவராக வேலை செய்து வந்தார். இவருக்கு திருமணமாகி, குழந்தை இல்லாததால் முதல் மனைவியை விவாகரத்து செய்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் பெண் புரோக்கர் மூலம் 2-வது திருமணத்துக்கு பெண் பார்த்து வந்தார்.
அதன்படி அவருக்கு 2-வது திருமணம் அண்மையில் நடந்திருக்கிறது. திருமணம் முடிந்த மறுநாள் கணவன்-மனைவி இருவரும் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சென்றிருக்கிறார்கள். அப்போது டிரைவருக்கு செல்போனில் அழைப்பு வந்தது. இதனால் அவர் மனைவியிடம் இருந்து சிறிது தூரம் தள்ளி நின்று போனில் பேசியிருக்கிறார்.
திரும்பி வந்து பார்த்தபோது புதிதாக திருமணம் செய்த 2-வது மனைவியை காணவில்லை. அக்கம்பக்கத்தில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. 2-வது மனைவிக்கு டிரைவர் தனது சொந்த செலவில் தங்க நகை வாங்கி அணிவித்து இருந்தார். ரொக்கப் பணத்தையும் அவரிடம் கொடுத்திருக்கிறார்.
அந்த நகை, பணத்துடன் புதுப்பெண் தப்பி ஓடிவிட்டதாக புகார் எழுந்துள்ளது. இதனால் தனக்கு 2-வது திருமணம் செய்து வைத்த பெண் புரோக்கரை செல்போன் மூலம் டிரைவர் தொடர்பு கொள்ள முயன்றார். ஆனால் புரோக்கருடைய செல்போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது.
அப்போது, புரோக்கரும், அந்த பெண்ணும் தன்னை திருமணம் செய்வது போல நடித்து ஏமாற்றி விட்டார்களோ என விரக்தி அடைந்த அந்த டிரைவர், போலீசில் இதுவரை புகார் எதுவும் தெரிவிக்கவில்லையாம்.. இந்த விவகாரம் சோழவந்தான் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications