ஆர்.கே.நகர் தொகுதியிலேயே இரட்டை இலை சின்னம் தோல்வி... டிடிவி தினகரன் சுளீர்
மதுரை: இரட்டை இலை சின்னத்தை கொண்டு மக்களை ஏமாற்றி விடலாம் என்று சிலர் பகல் கனவு காண்கிறார்கள் என்று அமமுக பொதுச்செயலாளர் தினகரன் தெரிவித்துள்ளார்.
திருப்பரங்குன்றம் தொகுதியில், அமமுக வேட்பாளர் மகேந்திரனை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபட்ட அவர் இதனை தெரிவித்தார். முன்னாள் முதலமைச்சர், ஜெயலலிதா வென்ற ஆர்.கே.நகர் தொகுதியிலேயே, இரட்டை இலை சின்னம் தோற்கடிக்கப்பட்டதாகவும், மக்கள் சக்தி முன்பு துரோகம் வெல்ல முடியாது எனவும் தினகரன் கூறினார்.

மேலும், தேர்தலுக்குப் பின்னர் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கண்டிப்பாக ராஜினாமா செய்துவிடுவார் என்று கூறிய டிடிவி தினகரன், தற்போது அ.தி.மு.க-விடம் தொண்டர்களுடைய பலமானது இல்லை என்றார். அவர்களிடம் பண பலம் மட்டும் தான் உள்ளது. அதை நம்பிதான் உள்ளனர் என்றும் விமர்சனம் செய்தார்.
22 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வருவோம் எனவும் நம்பிக்கை தெரிவித்தார். அ.தி.மு.க கொடியுடன் காவி நிற, தாமரை சேர்த்துக்கொண்டால் பொருத்தமாக இருக்கும் என்றும் டிடிவி தினகரன் பேசினார்.
பன்னீர்செல்வத்தை பதவி விலக சொல்லிவிட்டு மீண்டும் போடி தொகுதியில் நிற்க சொல்லுங்கள் பார்ப்போம் என்று சவால் விடுத்த டிடிவி தினகரன், பாஜகவின் ஏஜெண்டாக இருந்ததால் தான் பன்னீர்செல்வத்தை பதவியில் இருந்து இறக்கினோம் என்றும் விளக்கமளித்தார்.












Click it and Unblock the Notifications