திடீரென வந்த வெடிகுண்டு சத்தம்! தனுஷ் பட ஷூட்டிங்கில் பரபர.. கேப்டன் மில்லருக்கு மீண்டும் எதிர்ப்பு
மதுரை: நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் கேப்டன் மில்லர் திரைப்படம் இப்போதும் திடீரென சர்ச்சையில் சிக்கியுள்ளது. ஊர் மக்கள் படப்பிடிப்பிற்குத் தடை விதிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
தமிழ் சினிமாவில் முக்கிய நடிகர்களில் ஒருவர் தனுஷ்.. தமிழ் மட்டுமின்றி இவர் இந்தி, ஹாலிவுட் எனப் பல மொழி படங்களிலும் நடித்துள்ளார். இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் வாத்தி.
பள்ளிகளைத் தனியார் மயமாக்குவது குறித்து உருவாக்கப்பட்டிருந்த இந்த படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் இந்தப் படத்திற்கு மிகப் பெரிய வரவேற்பு கிடைத்தது.

கேப்டன் மில்லர்: தனுஷ் அடுத்து இப்போது 'கேப்டன் மில்லர்' படத்தில் நடித்து வருகிறார். அருண் மாதேஸ்வரன் இயக்கும் இந்தப் படத்தில் பிரியங்கா அருள் மோகன் கதாநாயகியாக நடித்து வருகிறார். சுதந்திரத்திற்கு முன்பு நடந்த நிகழ்வு போல இந்தப் படத்தைப் படமாக்கி வருகிறார்கள். இந்தாண்டு இறுதிக்குள் இந்தப் படம் வெளியாகும் எனக் கூறப்படுகிறது. இதற்கான படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
இதன் படப்பிடிப்பு தென்காசி மாவட்டத்தில் தீவிரமாக நடந்து. கடந்த மாதம் இதன் படப்பிடிப்பு மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் நடந்த போது சர்ச்சையானது. அதாவது அங்குள்ள மத்தளம்பாறை அருகே உள்ள களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்தில் அனுமதி இல்லாமல் கால்வாயில் மரப்பாலம் அமைத்து கரைகளை சேதப்படுத்தியும் விலங்குகளுக்கு இடையூறாகவும் படப்பிடிப்பு நடப்பதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இது அப்போதே சர்ச்சையானது.
குற்றச்சாட்டு: இதனிடையே இப்போது கேப்டன் மில்லர் படம் மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளது. கேப்டன் மில்லர் படப்பிடிப்பு இப்போது மதுரை மாவட்டம் அரிட்டாப்பட்டியில் நடந்து வருகிறது. அங்கு அனுமதியில்லாமல் குண்டு வெடிப்பு காட்சிகள் படமாக்கப்படுவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இது குறித்து எவ்வித அறிவிப்பும் சுற்றியுள்ள கிராம மக்களுக்கு இல்லை. திடீரென பலத்த சத்தம் அதுவும் குண்டு வெடிப்பது போல எழுவதால் அவர்கள் அச்சமடைந்துள்ளனர்.
இது தொடர்பாக அரிட்டாபட்டி பாதுகாப்புச் சங்கம் புகார் அளித்துள்ளதாகக் கூறப்படுகிறது. 7 மலைகளைக் கொண்ட பகுதியை பல்லுயிர் வாழும் பகுதியாக அறிவித்து தமிழக அரசு பாதுகாத்து வருகிறது. அங்கே சில நாட்களாக படப்பிடிப்பு நடக்கும் நிலையில், அதிக ஒலி எழுப்பும் கருவிகளைக் கொண்டு படப்பிடிப்பு நடத்தப்படுவதால், பல்லுயிர் பகுதியில் வாழும் பறவைகள், விலங்குகளுக்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
எனவே, இந்தப் படத்தின் ஷூட்டிங்கிற்கு தடை விதிக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மீண்டும் மீண்டும் கேப்டன் மில்லர் படம் இப்படி சர்ச்சையில் சிக்குவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications