நடுநிலையாக இருக்க மாட்டார்.. டிஜிபியை மாற்ற வேண்டும்.. மதுரை வக்கீல் வழக்கு
டிஜிபி ராஜேந்திரனுக்கு எதிராக மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.
மதுரை: டிஜிபி ராஜேந்திரனை எப்படியாவது பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று மதுரை வக்கீல் கண்ணன் உறுதியாக இருக்கிறார்... இப்போது டிஜிபி ராஜேந்திரனை மாற்ற கோரி மீண்டும் மதுரை ஐகோர்ட்டில் கண்ணன் முறையீடு செய்துள்ளார்.
காவல்துறை உயரதிகாரிகளில் கடந்த வருடத்தில் அதிகமாக உச்சரிக்கப்பட்ட பெயர் டிஜிபி ராஜேந்திரன்தான். குட்கா விவகாரத்தில் சிக்கிய டைரியில் இவரது பெயரும் அடக்கம்.
அதனால்தான் தமிழக வரலாற்றிலேயே முதல்முறையாக சிட்டிங் டிஜிபி ராஜேந்திரன் வீட்டில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். நாளெல்லாம் நடைபெற்ற சிபிஐ ரெய்டு பார்த்து தமிழக மக்களே அதிர்ந்தனர்.
ஏன் அந்த சிங்கம்?.. மோடி ஷேர் செய்த ஒரு டிவிட்.. பெரிய விவாதம்.. காரணம் என்னவோ?
பணி மாற்றம்
ஏனென்றால், ஏற்கெனவே 2 ஆண்டு பணி நீட்டிப்பில்தான் டிஜிபியாக ராஜேந்திரன் இருந்துவருகிறார். பிறகு குட்கா விவகாரம், சிபிஐ ரெய்டு என அடுத்தடுத்து நடந்ததால், எப்படியும் ராஜேந்திரனை பணி மாற்றம் தமிழக அரசு செய்யும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்படி எதுவுமே இதுவரை நடக்கவில்லை.
நோட்டீஸ்
இதனிடையே டிஜிபி டி.கே.ராஜேந்திரன் பணி நியமனத்தை சட்ட விரோதம் என அறிவிக்கக்கோரி மதுரை வழக்கறிஞர் கண்ணன் என்பவர் ஏற்கனவே மதுரை ஐகோர்ட்டில் வழக்கு ஒன்றினை தாக்கல் செய்தார். இதையடுத்து, மத்திய, மாநில அரசுகள், முன்னாள் தலைமை செயலர், சசிகலா ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிமன்றமும் உத்தரவிட்டது.
மேல் முறையீடு
தொடர்ந்து இந்த வழக்கு நடைபெற்று வந்த நிலையில், கடந்த ஜனவரி மாதம், டிஜிபி ராஜேந்திரன் பதவி நீட்டிப்புக்கு இடைக்காலத்தடை விதிக்க மதுரை ஐகோர்ட் மறுப்பு தெரிவித்தது. இந்நிலையில், ராஜேந்திரனுக்கு பதிலாக வேறு ஒருவரை டிஜிபியாக நியமிக்க வேண்டும் என்று வழக்கறிஞர் கண்ணன் திரும்பவும் மதுரை ஐகோர்ட்டில் முறையீடு செய்துள்ளார்.
நாளை விசாரணை
குட்கா வழக்கில் சிக்கியவர் என்பதால் நடுநிலையாக இருக்க மாட்டார் என்றும், மக்களவை தேர்தலின் போது தமிழக டிஜிபி மத்திய, மாநில அரசுகளுக்கு ஆதரவாக செயல்படுவார் என்பதால் ராஜேந்திரன் பணி செய்ய தடை விதிக்க வேண்டும் என அவர் தனது மனுவில் கூறியுள்ளார். இதையடுத்து, மனுவாக தாக்கல் செய்தால் நாளையே விசாரிப்பதாக நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.