சவுக்கு சங்கர் மீது கஞ்சா பதுக்கியதாக வழக்கு.. மதுரை கோர்ட்டில் 25ம் தேதி தீர்ப்பு
மதுரை: பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர், பெண் போலீசார் குறித்து அவதூறு கருத்துகளை தெரிவித்ததாக கோவை சைபர் கிரைம் போலீசாரால் கடந்த மே மாதம் கைது செய்யப்பட்டார். அப்போது சவுக்கு சங்கர் வந்த காரில் கஞ்சா இருந்ததாக புகார் எழுந்தது. இந்த குற்றச்சாட்டின் பேரில் சவுக்கு சங்கர் மீது தேனி பழனிசெட்டிப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த கஞ்சா வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரி சவுக்கு சங்கர் தொடர்ந்த வழக்கில் வரும் 25ம் தேதி தீர்ப்பு அளிக்கப்பட உள்ளது.
தனியார் யூடியூப் சேனலில் ஒளிபரப்பான நேர்காணல் நிகழ்ச்சியில் பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர், பெண் போலீசார் குறித்து அவதூறாக பேசியதாக புகார் எழுந்தது. இந்த புகாரின் பேரில் சவுக்கு சங்கர் மீது கோவை சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தேனியில் தங்கியிருந்த சவுக்கு சங்கரை கடந்த மே மாதம் 14ம் தேதி கோவை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை கோவை சிறையில் அடைத்தனர்.

இதற்கிடையே அதே சம்பவம் தொடர்பாக திருச்சி மாவட்டம் முசிறி போலீஸ் டிஎஸ்பி யாஸ்மின் கொடுத்த புகாரின் பேரில், திருச்சி மாவட்ட சைபர் கிரைம் போலீசாரும், சவுக்கு சங்கர் மற்றும் அவருடைய பேட்டியை ஒளிபரப்பிய யூடியூப் சேனலின் தலைமை செய்தி ஆசிரியர் பெலிக்ஸ் ஜெரால்டு ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இதனிடையே திருச்சி, பெரம்பலூர், சென்னை, மதுரை, திண்டுக்கல், விழுப்புரம், ராணிப்பேட்டை, சிவகங்கை, தாம்பரம், சேலம், நாகப்பட்டினம், நெல்லை, நீலகிரி ஆகிய நகரங்களில் 16 காவல் நிலையங்களில், சவுக்கு சங்கருக்கு எதிராக வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
இந்நிலையில் பெண் காவலர்களை அவதூறாக பேசியதாகக் கைது செய்யப்பட்ட யூ டியூபர் சவுக்கு சங்கரை, பொது அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதாக கூறி குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்து, சென்னை மாநகர காவல் ஆணையர் கடந்த மே மாதம் உத்தரவு பிறப்பித்தார். இதனிடையே கரூரில் பண மோசடி வழக்கிலும் யூடியூபர் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டார். கரூர், காந்திகிராமம் பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணன் என்பவர் பிரியாணி கடை நடத்தி வருகிறார். இவரிடம் 7 லட்சம் மோசடி செய்ததாக புகார் எழுந்தது. இதற்காக கைது செய்யப்பட்ட சவுக்கு சங்கருக்கு ஜாமீன் கிடைத்தது. இதேபோல் கோவை சைபர் கிரைம் வழக்கிலும் ஜாமீன் கிடைத்தது. அத்துடன் டெல்லியில் உச்ச நீதிமன்றமும் சவுக்கு சங்கருக்கு குண்டாஸ் வழக்கில் இடைக்கால ஜாமீன் வழங்கியது. அடுத்தடுத்து பல்வேறு வழக்குகளில் ஜாமீன் கிடைத்த நிலையில்,தேனியில் கஞ்சா வைத்திருந்த வழக்கில் மீண்டும் சவுக்கு சங்கர் மீது குண்டாஸ் போடப்பட்டிருந்தது.
இந்நிலையில் சவுக்கு சங்கர் மீது போடப்பட்ட குண்டர் தடுப்புச் சட்டத்தை உச்சநீதிமன்றம் ரத்து செய்ததுடன், சவுக்கு சங்கர் மீது வேறு வழக்குகள் எதுவும் நிலுவையில் இல்லையெனில் அவரை ஜாமீனில் விடுவிக்கவும் உத்தரவிட்டு ஆள்கொணர்வு மனு மீதான விசாரணையை முடித்து வைத்து உச்சநீதிமன்றம் கடந்த செப்டம்பர் மாதம் உத்தரவிட்டது. இதன்படி கடந்த மே மாதம் 14ம் தேதி முதல் சிறையில் இருந்து வந்த சவுக்கு சங்கர், மதுரை மத்திய சிறையில் இருந்து ஜாமீனில் கடந்த செப்டம்பர் 25ம் தேதி வெளியே வந்தார். ஜாமீனில் வெளியே வந்த சவுக்கு சங்கர் பல்வேறு காவல் நிலையங்களில் கையெழுத்து போட்டு வந்தார். இந்நிலையில் பல்வேறு காவல்நிலையங்களில் உள்ள வழக்கிற்கு சென்னையில் உள்ள ஒரு காவல் நிலையத்தில் கையெழுத்திட அனுமதிக்க வேண்டும் என்று கோரி சவுக்கு சங்கர் உயர்நீதிமன்றத்தில் முறையிட்டார். இதற்கு உயர்நீதிமன்றமும் அனுமதி அளித்தது.
இதற்கிடையே யூடியூபர் சவுக்கு சங்கர் தேனி பழனிசெட்டிபட்டி போலீஸ் நிலையத்துக்கு உள்பட்ட பகுதியில் தங்கி இருந்த போதுதான் கடந்த மே மாதம் கைது செய்தனர். அப்போது அவர் கஞ்சா பதுக்கியதாகவும் பழனிசெட்டியபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர். இந்த கஞ்சா வழக்கிற்காக போடப்பட்ட குண்டாஸ் ரத்து செய்யப்பட்ட போதும், அவர் மீதான கஞ்சா வழக்கு மதுரை போதைப்பொருள் தடுப்பு சிறப்பு கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. இந்த வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க வேண்டும் என்று சவுக்கு சங்கர் அதே கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதி செங்கமலச்செல்வன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது சவுக்கு சங்கர் கோர்ட்டில் ஆஜரானார். பின்னர் நடந்த வாதங்களை பதிவு செய்து கொண்ட நீதிபதி, இந்த வழக்கின் தீர்ப்பை வருகிற 25-ந்தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications