பல்லை பிடுங்கிய போது.. சிசிடிவி கேமராவை ஆப் செய்ய சொன்ன பல்வீர் சிங்.. ஹைகோர்ட் கிளையில் ஷாக் தகவல்
மதுரை: காவல் நிலையத்தில் பற்களை பிடுங்கிய போது சிசிடிவி கேமரா ஏஎஸ்பி பல்வீர் சிங் உத்தரவின் பேரில் ஆஃப் செய்யப்பட்டதாக சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது.
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் பகுதியில் விசாரணை கைதிகளின் பற்களை ஏஎஸ்பியாக இருந்த பல்வீர் சிங் பிடுங்கிய விவகாரம் விஸ்வரூபம் எடுத்து வருகிறது. இது தொடர்பான விசாரணை நடந்து வருகிறது. சிறு சிறு வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்ட நபர்களை பல்வீர் சிங் மற்றும் போலீஸார் பற்களை பிடுங்கி சித்ரவதை செய்ததாக வீடியோக்களை பாதிக்கப்பட்டவர்கள் வெளியிட்டனர். இந்த சம்பவத்தில் விசாரணை அதிகாரியாக அமுதா ஐஏஎஸ் நியமிக்கப்பட்டிருந்தார்.

இந்த நிலையில் இந்த வழக்கு உயர்மட்ட விசாரணை குழுவின் பரிந்துரையின் பேரில் சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது. மேலும் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அத்துடன் பல்வீர் சிங் மீது 3 பிரிவுகளின் கீழ் 4 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. பல்வீர் சிங் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
இந்த நிலையில் ஐபிஎஸ் அதிகாரி பல்வீர் சிங்கால் பற்கள் பிடுங்கப்பட்டு பாதிக்கப்பட்ட அருண்குமார் மற்றும் சந்தோஷ் ஆகியோர் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் இழப்பீடு கோரி மனுதாக்கல் செய்தனர். குறைந்தபட்ச இழப்பீடு வழங்க வன்கொடுமை சட்டத்தில் இடம் உள்ளது என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். இந்த மனு மீதான விசாரணையில் மாவட்ட ஆட்சியர் மற்றும் நெல்லை ஆதிதிராவிடர் நலத் துறை அதிகாரி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டு வழக்கு விசாரணையை டிசம்பர் முதல் வாரத்திற்கு ஒத்தி வைத்துள்ளது.
இதனிடையே பற்களை பிடுங்கும் போது கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்த காட்சிகள் எங்கே என்றும் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் கேள்வி எழுப்பியிருந்தார். மேலும் அந்த காட்சிகளை வழங்குமாறும் உத்தரவிட்டிருந்தார். இந்த வழக்கு விசாரணையின்போது அம்பாசமுத்திரம் காவல் நிலையத்தில் பற்களை பிடுங்கிய போது சிசிடிவி செயல்படவில்லை.
ஏஎஸ்பி பல்வீர் சிங்கின் உத்தரவின் பேரில் சிசிடிவி கேமரா அணைத்து வைக்கப்பட்டது என தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications