புதுக்கோட்டையில் கோயில் நிலங்களுக்கு பெற்ற பட்டா ரத்து! மதுரை ஹைகோர்ட்டில் தமிழக அரசு உறுதி
மதுரை: புதுக்கோட்டையில் கோவில் நிலங்களுக்கு பெற்ற பட்டா ரத்து செய்யப்படும் என இந்து அறநிலைய துறை தரப்பில் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் உறுதியளிக்கப்பட்டுள்ளது.
புதுக்கோட்டையை சேர்ந்த சேதுபதி என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த வழக்கில், புதுக்கோட்டை மாவட்டம் பெருங்களூர் கிராமத்தில் மலையாமருங்கர் திருகோயில், உருமநாதர் திருகோவில் சொந்தமான நிலங்கள் ஸ்ரீரங்கப்பட்டி, கொம்பியன்வீதி, உடையாளபட்டி, உள்ளிட்ட பகுதிகளில் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலங்களை அக்கோவிலியின் பூசாரியாக இருக்கும் முத்துக்கருப்பன் படிமாத்தார் என்பவர், கோவிலின் செயல் அதிகாரியுடன் சேர்ந்து விற்பனை செய்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும் பெருங்களூர் கிராமத்தில் கோவிலுக்கு சொந்தமான நிலத்தை கோவில் பூசாரி முத்துக்கருப்பன் தன் பெயரில் முறைகேடாக பட்டா பெற்றுள்ளதாக மனுவில் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அளித்த புகாரில் தஞ்சாவூர் மாவட்ட இந்து அறநிலைய துறையின் இணை ஆணையர் கோவில் நிலத்திற்கு பட்டா போட்ட பூசாரி மீது நடவடிக்கை எடுத்து கோவில் நிலத்தை மீட்க கடந்த 2018 ம் ஆண்டு செயல் அலுவலருக்கு உத்தரவிட்டிருந்தார்.
ஆனால் இது வரை பூசாரி மீது நடவடிக்கை எடுக்காமல், கோவில் நிலங்களும் மீட்கப்படாமல் இருப்பதாக தெரிவித்திருந்தார்.
இந்த மனு நீதிபதி, முகமது சபீக் முன் விசாரணைக்கு வந்தது அப்போது மனுதாரர் தரப்பில், வழக்கறிஞர் சரவணக்குமார் ஆஜராகி, தனி நபரில் பெயரில் பெற்ற கோவில் நிலங்கள் தொடர்பான பட்டாக்களை ரத்து செய்து, கோவில் நிலங்களை மீட்க வேண்டுமென வாதிட்டார்.
இந்து அறநிலைய துறை தரப்பில், தனி நபர் பெயரில் உள்ள மலையாமருங்கர் திருகோயில், உருமநாதர் திருகோவில் நிலங்கள் தொடர்பான பட்டாக்களை ரத்து செய்ய புதுக்கோட்டை மாவட்ட வருவாய் அலுவலருக்கு, கோவில் செயல் அலுவலர் தரப்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
மேலும் இது தொடர்பாக சம்பந்தப்பட்ட நபருக்கு நோட்டீஸ் அனுப்பி விசாரணை நடத்தி 3 மாதத்தில் உரிய கோவில் நிலத்தை மீட்பதற்கான உத்தரவுகள் பிறபிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதி, வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications