சாத்தான்குளம் வழக்கில் அதிரடி.. சிபிசிஐடிக்கு ஹைகோர்ட் மதுரை கிளை பாராட்டு
மதுரை: சாத்தான்குளம் வழக்கில் நேற்று ஒரே நாளில் விசாரணை, தேடுதல் வேட்டை, கைது என துரிதமாக செயல்பட்டு தீவிரமாக கண்காணித்து வரும் சிபிசிஐடி போலீஸுக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை பாராட்டு தெரிவித்துள்ளது.
சாத்தான்குளத்தில் தந்தை மகன் ஆகியோர் சித்ரவதை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை தாமாக முன் வந்து விசாரணையை முடுக்கிவிட்டுள்ளது.

கொலை வழக்குப் பதிவு செய்ய உத்தரவு முதல் போலீஸார் கைது வரை உயர்நீதிமன்ற கிளை பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை பிறப்பித்துள்ளது. நேற்று நீண்ட தேடுதல் வேட்டைக்கு பிறகு எஸ்ஐ ரகுகணேஷ், பாலகிருஷ்ணன், காவலர்கள் முருகன், முத்துராஜ் ஆகியோரும் கங்கைகொண்டான் சென்ற இன்ஸ்பெக்டர் ஸ்ரீதரும் கைது செய்யப்பட்டனர்.
இந்த நிலையில் இந்த வழக்கு இன்று உயர்நீதிமன்ற மதுரை கிளையில் விசாரணைக்கு வந்தது. அப்போது சாட்சி கூறிய ரேவதிக்கு உரிய பாதுகாப்பையும் வேலைக்கு உரிய சம்பளத்தையும் வழங்குமாறும் தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளார்கள்.
காணொலி காட்சி மூலம் நடத்தப்பட்ட இந்த விசாரணையின் போது இதுவரை இந்த வழக்கில் எத்தனை பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள், எத்தனை பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது, கைதானவர்களின் விவரங்களை தெரிவிக்குமாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மேலும் கைதானவர்களை எந்த நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போகிறீர்கள் என்பது குறித்து நீதிபதிகள் கேள்வி எழுப்பினார்கள். பின்னர் வழக்கை நேரடியாக கண்காணித்து வரும் சிபிசிஐடிக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் பாராட்டு தெரிவித்தார்கள்.












Click it and Unblock the Notifications