சென்னை ஐஐடி இயக்குனர் காமகோடிக்கு புதிய பொறுப்பு.. மதுரை எய்ம்ஸ் நிர்வாக உறுப்பினர் குழுவில் இடம்
மதுரை: மதுரை எய்ம்ஸ் நிர்வாக உறுப்பினர் குழுவில் சென்னை ஐஐடி இயக்குனர் காமகோடிக்கு இடம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் மதுரை மாவட்டம் தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்ட மத்திய அரசு முடிவு செய்தது. இதையடுத்து கடந்த 2019ம் ஆண்டில் மதுரை தோப்பூரில் 'எய்ம்ஸ்' மருத்துவமனை அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டது.

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். சுமார் 224.24 ஏக்கரில் ரூ.1,264 கோடியில் மருத்துவமனை அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
அதன்பிறகு சுற்றுச்சுவர் கட்டும் பணி நடந்தது. இந்த பணியை தொடர்ந்து விரைந்து மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டி முடிக்கப்படும் என கருதப்பட்டது. ஆனால் கட்டுமான பணி முடங்கியது. கொரோனா பரவல், ஜப்பான் நாட்டின் ஜைக்கா நிறுவனத்திடம் கடன் கிடைப்பதில் தாமதம், தமிழக அரசு நிலம் கையகப்படுத்துவதில் தாமதம் உள்ளிட்ட காரணங்களால் பணி முடங்கியது.
இதுதொடர்பாக மத்திய, மாநில அரசுகள் மாறி மாறி குற்றம்சாட்டி வருகின்றன. தேர்தல் வேளையில் எய்ம்ஸ் மருத்துவமனை தொடர்பாக பாஜக மற்றும் திமுக அதன் கூட்டணி கட்சிகள் இடையே கடும் கருத்து மோதல்கள் வெடித்து வருகின்றன. இதற்கிடையே மதுரை எய்ம்ஸ் கட்டுமானத்துக்கான தொகை என்பது ரூ.1977.80 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது.
பொதுவாக எய்ம்ஸ் மருத்துவமனையை பொறுத்தமட்டில் 750 படுக்கைகள் தான் இருக்கும். ஆனால் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையில் 900 படுக்கைகள் அமைக்கப்பட உள்ளது. கூடுதலாக 150 படுக்கைகள் ஏற்படுத்தப்பட உள்ளது. இதற்கிடையே தான் சில வாரங்களுக்கு முன்பு எய்ம்ஸ் கட்டுமானத்துக்கான ஆயத்த பணிகள் தொடங்கியது. சுற்றுச்சூழல் அனுமதி கிடைத்தவுடன் பணி விரைந்து தொடங்கப்பட்டு 2026க்குள் மதுரை எய்ம்ஸ் கட்டி முடிக்கப்படும் என மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தான் மதுரை எய்ம்ஸ் நிர்வாக உறுப்பினர் குழுவில் சென்னை ஐஐடியின் இயக்குனர் காமகோடி நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதுதொடர்பாக மத்திய அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், ‛‛மதுரை எய்ம்ஸ் நிர்வாக உறுப்பினர் குழுவில் சென்னை ஐஐடி இயக்குனர் காமகோடி நியமிக்கப்பட்டுள்ளார். அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவன சட்டம் 1956 பிரிவு 6ல் உள்ள விதிகளின்படி இந்த நியமனம் செய்யப்பட்டுள்ளது. இவர் மத்திய கல்விக்குழு உறுப்பினராகவும், மதுரை எய்ம்ஸ் நிர்வாக உறுப்பினராகவும் செயல்படுவார்'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை எய்ம்ஸ் நிர்வாக உறுப்பினர் குழுவில் நியமனம் செய்யப்பட்டுள்ள காமகோடி பல்வேறு அரசு நிறுவனங்களில் முக்கிய பொறுப்புகளில் செயல்பட்டுள்ளார். சென்னை ஐஐடியில் கம்ப்யூட்டர் சயின்ஸ் துறையில் முதலில் பேராசிரியராக பணியாற்றி வந்தார். அதன்பிறகு சென்னை ஐஐடியின் இயக்குனராக நியமனம் செய்யப்பட்டார். இதுதவிர அவர் தேசிய பாதுகாப்பு ஆலோசனை குழு உறுப்பினராக உள்ளார். அந்த குழுவில் காமகோடி கம்ப்யூட்டர் ஆர்க்கிடெக்ட்ச்சர், செக்யூர் சிஸ்டம்ஸ் என்ஜினியரிங், விஎல்எஸ்ஐ டிசைன் உள்ளிட்டவற்றை கவனிக்கிறார்.
மேலும் காமகோடி பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார். அதன்படி அப்துல்கலாம் டெக்னாலஜி இனோவேஷன் நேஷனல் பெலோஷிப் 2020, ஐஇஎஸ்ஏ டெக்னோ விஷனரி விருது 2018, ஐபிஎம் ஃபேக்கல்டி விருது 2016, டிஆர்டிஓ அகாடமி எக்சலன்ஸ் விருது 2013, ஐஐடிஎம் யங் ஃபேக்கல்டி ரெக்கனைஷன் விருது (ஒய்எஃப்ஆர்ஏ) 2007, வாஸ்விக் ஆராய்ச்சி விருது (எலக்ட்ரிக்கல் அண்ட் லெக்ட்ரானிக்ஸ் சயின்சஸ் அண்ட் டெக்னாலஜி பிரிவு) பெற்றுள்ளார். மேலும் அட்வான்ஸ் கம்ப்யூட்டிங் அண்ட் கம்யூனிகேஷன் சொசைட்டியின் வாழ்நாள் சாதனையாளர் விருதையும் அவர் வென்றுள்ளார்.












Click it and Unblock the Notifications