மத்திய அரசுக்கு முன் மாதிரியாக இருக்கனும்; சொன்னதை செய்யனும்.. மதுரை நூலகம் மீது முதல்வர் தனிக்கவனம்
மதுரை: மதுரையில் ரூ.70 கோடி திட்ட மதிப்பில் பிரம்மாண்ட நூலகம் அமைக்கும் பணியில் முதலமைச்சர் ஸ்டாலின் தனிக்கவனம் செலுத்தி வருகிறார்.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பிறந்தநாளின் போது முக்கிய அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையில் பிரம்மாண்ட நூலகம் அமைக்கப்படும் எனத் தெரிவித்திருந்தார்.
இதையடுத்து இதற்கான இடத்தேர்வு பணிகள் கூட முடிவடைந்துவிட்டன. கடந்த 10 நாட்களுக்கு முன்னர் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி மதுரைக்கே சென்று நேரில் ஆய்வு செய்தார்.
இதனிடையே மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என மத்திய அரசு அறிவித்ததோடு மட்டுமல்லாமல் அடிக்கல்லும் நாட்டியது. ஆனால் அதற்கு அடுத்தக்கட்டமாக அங்கு எந்த ஒரு பணியும் நடக்கவில்லை. இந்நிலையில் அதே மதுரையில், மத்திய அரசுக்கு முன்மாதிரியாக செயல்பட்டு மக்களின் மனதை கவர விரும்புகிறார் ஸ்டாலின்.
அதாவது எய்ம்ஸ் பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளதை போல் இல்லாமல், சொன்னதை செய்வோம் என்பதற்கேற்ப எய்ம்ஸ் கட்டுமானப் பணிகளுக்கு முன்பாகவே பிரம்மாண்ட நூலகத்தின் கட்டுமானப் பணிகளை முடிக்க திட்டமிட்டுள்ளார்.
ஆகஸ்ட் 2-ம் தேதி தமிழக சட்டப்பேரவையில் கருணாநிதியின் படத்திறப்பு விழாவுக்கு வரும் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், அன்றைய தினமே மதுரையில் கட்டப்படவுள்ள நூலகத்திற்கான அடிக்கல்லையும் நாட்டுகிறார்.
சென்னை கோட்டூர்புரத்தில் அமைந்துள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தை போலவே 2 லட்சம் சதுர அடியில் ரூ.70 கோடி திட்ட மதிப்பீட்டில் நவீனமயமாக்கப்பட்ட நூலகம் அமையவிருப்பது மதுரை மக்களை மகிழ்ச்சியடையச் செய்துள்ளது.
மதுரையில் கட்டப்படும் நவீன நூலகம் அறிவின் அடையாளமாக திகழும் என தமிழறிஞர்களும், எழுத்தாளர்களும், வரவேற்பு தெரிவித்திருக்கிறார்கள்.












Click it and Unblock the Notifications