''கோபப்படக் கூடாது.. கோபப்படகூடாது..'' பி.எஸ்.ஓ.வுக்கு மதுரையில் புத்திமதி சொன்ன ஸ்டாலின்!
பொதுமக்களிடம் கோபப்படக் கூடாது என பாதுகாப்பு அதிகாரிகளுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுரை.
மதுரை: தன்னிடம் மனு அளிக்க வந்த பொதுமக்களிடம் கெடுபிடி காட்டிய பாதுகாப்பு அதிகாரியிடம் ''கோபப்படக் கூடாது.. கோபப்படகூடாது..''என முதலமைச்சர் ஸ்டாலின் புத்திமதி கூறிய நிகழ்வு மதுரையில் நடந்துள்ளது.
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு முதல்வர் ஸ்டாலின் ஆய்வு நடத்தச் சென்ற போது அவரிடம் நேரடியாக மனு அளிக்க மக்கள் அலைமோதினர்.
அப்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர்களும், பி.எஸ்.ஓ.க்களும் பொதுமக்களிடம் கெடுபிடி காட்டியதை ஸ்டாலின் பார்த்துவிட்டு இந்த அறுவுரையை வழங்கினார்.

கள ஆய்வில் முதல்வர்
வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மற்றும் திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டு வரும் அரசுத் திட்டங்கள் குறித்து கடந்த பிப்ரவரி 1 மற்றும் 2 ஆகிய தேதிகளில் முதல்வர் ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அதன் பின்னர், சேலம், கிருஷ்ணகிரி, தருமபுரி மற்றும் நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் "கள ஆய்வில் முதலமைச்சர்" திட்டத்தின் கீழ் கடந்த மாதம் 15 மற்றும் 16 ஆம் தேதிகளில் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

மதுரையில் ஸ்டாலின்
அதன் தொடர்ச்சியாக, மதுரை, இராமநாதபுரம், திண்டுக்கல், சிவகங்கை மற்றும் தேனி மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டு வரும் அரசுத் திட்டங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்வதற்காக இன்று காலை மதுரை மாவட்டத்திற்கு வருகை தந்தார் முதல்வர் ஸ்டாலின். விமான நிலையத்தில் அவருக்கு திமுகவினர் உற்சாகமிகு வரவேற்பு கொடுத்தனர். அதைத் தொடர்ந்து மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சென்ற அவர் 5 மாவட்ட கலெக்டர்களை வரவழைத்து ஆய்வு செய்தார்.

கோபப்படக் கூடாது
முன்னதாக முதல்வர் ஸ்டாலினிடம் கோரிக்கை மனுக்களை நேரில் கொடுப்பதற்காக பொதுமக்கள் அலைமோதினர். அவர்களிடத்தில் மனுவை பெற்றுக் கொண்டிருந்த போது லேசான தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து பாதுகாப்பு அதிகாரிகள் கறாராக கெடுபிடி காட்டினர். இதை அந்த பரபரப்புக்கு மத்தியிலும் பார்த்துவிட்ட முதல்வர் ஸ்டாலின், ''கோபப்படக் கூடாது.. கோபப்படகூடாது..'' என அறிவுரை வழங்கினார். இதையடுத்து பொதுமக்கள் நேரடியாக முதல்வரிடம் மனு கொடுத்தனர்.

மக்கள் சந்திப்பு
முதலமைச்சர் ஸ்டாலினை பொறுத்தவரை மக்கள் சந்திப்பு, சுற்றுப்பயணம், ஆய்வு, என்றால் அவருக்கு சலிப்பே ஏற்படாது என்பது குறிப்பிடத்தக்கது. இன்று காலை மதுரை மாவட்ட நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட முதல்வர் ஸ்டாலின், மாலை சிவகங்கை மாவட்டம் கீழடியில் அருங்காட்சியகம் தொடங்கி வைக்கிறார். நாளை கன்னியாகுமரி மாவட்டத்துக்கு செல்கிறார்.












Click it and Unblock the Notifications