கருணாநிதிக்கு 6 அடி நிலம் தரலையா? ரூ300 கோடி நிலம் தந்தோமே: ஸ்டாலினுக்கு எடப்பாடி பதிலடி
திருப்பரங்குன்றம்: கருணாநிதியின் உடலை அடக்கம் செய்ய 6 அடி நிலம் கூட ஒதுக்கவில்லை என திமுக தலைவர் ஸ்டாலின் பச்சை பொய் பிரசாரம் செய்து வருகிறார்; கருணாநிதிக்காக ரூ300 கோடி மதிப்பில் 3 ஏக்கர் நிலம் கொடுக்க முன்வந்தோம் என அதிரடியாக பதிலளித்துள்ளார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.
சென்னை மெரினா கடற்கரையில் கருணாநிதி உடலை அடக்கம் செய்ய முதல்வர் எடப்பாடி நிலம் ஒதுக்கவில்லை என்பது ஸ்டாலினின் தொடர் பிரசாரம். இதனால் அதிமுக அரசை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்றும் ஸ்டாலின் பேசி வருகிறார்.

இதற்கு பதிலடி தரும் வகையில் திருப்பரங்குன்றத்தில் இன்று நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:
எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரசாரத்தில் ஏராளமான வாக்குறுதிகளை அளிக்கிறார். ஒரு எதிர்க்கட்சித் தலைவர் எப்படி வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியும்?
தேர்தல் களத்தில் மக்களின் பிரச்சனைகளை, தேவைகளை பேச வேண்டும். அப்படி பேசாமல் ஸ்டாலின், தந்தைக்கு அதிமுக அரசு 6 அடி நிலம் கூட ஒதுக்கவில்லை என பொய்யை பேசி வருகிறார்.
கருணாநிதிக்காக அதிமுக அரசு ரூ300 கோடி மதிப்பில் 3 ஏக்கர் நிலம் கொடுக்க முன்வந்தது. அதை மறைத்துவிட்டு ஸ்டாலின் பச்சை பொய் பேசுகிறார்.
முன்னாள் முதல்வர் மகன் மு.க.ஸ்டாலின். அதனால் செல்வச் செழிப்போடு வளர்ந்தவர். ஆனால் நான் அடிமட்டத் தொண்டன். கட்சி தொண்டனாக, விவசாயியாக இருந்து இன்று முதல்வராகி இருக்கிறேன். இது அதிமுகவில்தான் நடக்கும்.
இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.












Click it and Unblock the Notifications