மதுரையில் இந்த ஏரியாவில் டிராபிக்கே இருக்காது.. நீண்டநாள் காத்திருப்பை நிறைவேற்றிய முதல்வர் ஸ்டாலின்
மதுரை: மதுரை தமுக்கம் முதல் நெல்பேட்டை அண்ணா சிலை வரை ரூ.213.80 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் மேம்பாலத்தை தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். மதுரை மாநகரின் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் மக்களின் நீண்டகால காத்திருப்பு இன்று நிறைவேறியுள்ளது.
இந்தப் பாலத்துக்கு நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் மேம்பாலம் என முதல்வர் ஸ்டாலின் பெயர் சூட்டிய நிலையில், இன்று திறக்கப்பட்டது. இந்தப் பாலம் 61 தூண்கள், 62 கண்களுடன் கிட்டத்தட்ட 2 கி.மீ நீளத்தில் கட்டப்பட்டுள்ளது. பாலத்தின் ஏறுதளம் தமுக்கம் பகுதியில் தொடங்கி நெல்பேட்டை அண்ணா சிலை சந்திப்பில் இறங்கும் வகையில் கட்டப்பட்டுள்ளது.

ரூ.213 கோடியில் கட்டப்பட்டுள்ள இந்தப் புதிய பாலத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று திறந்து வைத்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு அர்ப்பணித்தார். இந்தப் பாலம் திறக்கப்பட்டதன் மூலம் கோரிப்பாளையம், யானைக்கல், தமுக்கம் உள்ளிட்ட பகுதிகளில் பீக் ஹவர் நேரங்களில் நீண்ட நேரம் வாகனங்கள் நின்று செல்லும் நிலை இனி இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், திருமங்கலத்தில் நடைபெற்ற அரசு விழாவில் நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை சார்பில் திருமங்கலம் - கள்ளிக்குடி ரயில் நிலையங்களுக்கு இடையே ரயில்வே கடவிற்கு மாற்றாக 38 கோடியே 81 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள வீரபாண்டிய கட்டபொம்மன் சாலை மேம்பாலத்தையும் திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்.
இதையடுத்து, சிவகங்கையில் புதிதாக அமைக்கப்பட்ட மருது சகோதரர்களின் உருவச் சிலைகளை காணொலிக் காட்சி வாயிலாக முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து, மதுரை ஸ்ரீமீனாட்சி அரசு மகளிர் கல்லூரியில் மேம்படுத்தப்பட்ட கணினி ஆய்வகத்தைத் தொடங்கி வைத்தார்.
பிறகு, அங்கிருந்து வண்டியூர் சென்ற முதல்வர் ஸ்டாலின், சீரமைக்கப்பட்ட வண்டியூர் கண்மாய் பூங்கா, ஆங்குரன் அறிவியல் மையம், பேரூராட்சிகளின் புதிய அலுவலகக் கட்டடம், 867 ஊரகக் குடியிருப்புகளுக்கான கூட்டுக் குடிநீர்த் திட்டம் ஆகியவற்றை மக்கள் பயன்பாட்டுக்கு அர்ப்பணித்தார். அதைத்தொடர்ந்து திமுக வாக்குச்சாவடி முகவர்கள் மாநாட்டில் பங்கேற்கிறார்.












Click it and Unblock the Notifications