3 மாதங்களாக மார்ச்சுவரியில் ஆகாஷ் உடல்..நீதிமன்ற உத்தரவால் 102வது நாளில் தகனம்! உறவினர்கள் அஞ்சலி
மதுரை: சிவகங்கை இளைஞர் ஆகாஷ் டெலிசன் மரண விவகாரத்தில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. மதுரை உயர்நீதிமன்றக் கிளை வழங்கிய உத்தரவின் அடிப்படையில், கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த ஆகாஷின் உடல் அரசு அதிகாரிகள் முன்னிலையில் இன்று தகனம் செய்யப்பட்டது. அவரது உடலுக்கு தாயார் உள்ளிட்ட உறவினர்கள் இறுதி அஞ்சலி செலுத்தினர்.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரையைச் சேர்ந்த ஆகாஷ் டெலிசன், கொலை முயற்சி வழக்கு ஒன்றில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டிருந்தார். கைது செய்யப்பட்ட சில நாட்களிலேயே அவர் உயிரிழந்த சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்த மரணம் சாதாரண மரணமா? அல்லது காவல் துறையினர் அடித்ததால் ஏற்பட்ட மரணமா? என்ற கேள்வி அப்போது பெரிய விவாதமாக மாறியது. குறிப்பாக நீதிமன்ற நடுவர் முன்பு ஆகாஷ் அளித்ததாக கூறப்பட்ட வாக்குமூலம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
அதில், காவல்துறையினர் தன்னை தாக்கியதாகவும், தனது காலை உடைத்ததாகவும் அவர் கூறியிருந்ததாக தகவல்கள் வெளியானது. இதையடுத்து பல்வேறு அரசியல் கட்சிகள், மனித உரிமை அமைப்புகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் இந்த விவகாரத்தில் போராட்டத்தைத் தொடங்கினர். ஆகாஷ் மரணம் காவல் மரணமாக கருதப்பட வேண்டும் என்றும், சம்பந்தப்பட்ட காவல்துறையினர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கைகள் எழுந்தன.
ஆகாஷ் உயிரிழந்ததைத் தொடர்ந்து அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தங்கள் மகனின் மரணத்திற்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும், குற்றவாளிகள் கைது செய்யப்பட வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர். மேலும், நீதி கிடைக்கும் வரை உடலை பெற்றுக்கொள்ள மாட்டோம் என்று உறுதியாக அறிவித்தனர். இதன் காரணமாக கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக ஆகாஷின் உடல் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை பிணவறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், ஆகாஷின் தந்தை ராஜேஷ்கண்ணன் மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், தனது மகனின் மரணத்திற்கு காரணமானவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருந்தார். அதோடு, சம்பந்தப்பட்ட காவல்துறையினர் மீது எஸ்சி - எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டிருந்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி விக்டோரியா கௌரி, விசாரணையை விரைவாக முடித்து இறுதி அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று ஏற்கனவே உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில் வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தரப்பில் முன்வைக்கப்பட்ட பல கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து கருத்து தெரிவித்த நீதிபதி, "இறந்தவரின் உடலை இவ்வளவு காலம் பெறாமல் இருப்பது ஏற்கத்தக்கதல்ல. இறந்தவருக்கு உரிய மரியாதை செய்யப்பட வேண்டும். பெற்றோர் உடலை பெற்றுக்கொள்ள வேண்டும்" என்று தெரிவித்தார்.
மேலும், உடலை பெற்றுக்கொள்ள மறுத்தால் அரசு மற்றும் காவல்துறை இணைந்து சட்டப்படி அடக்கம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டிய சூழல் ஏற்படும் என்றும் நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்தது. ஆனால் நீதிமன்றத்தின் கருத்துக்குப் பிறகும் ஆகாஷின் பெற்றோர் தங்களது நிலைப்பாட்டில் மாற்றமில்லை என்று தெரிவித்துள்ளனர். "எங்கள் மகனின் மரணத்திற்கு காரணமானவர்கள் முழுமையாக தண்டிக்கப்பட வேண்டும். எங்களுக்கு நீதி கிடைக்க வேண்டும். அதுவரை எங்களது போராட்டம் தொடரும்" என்ற மனநிலையிலேயே அவர்கள் இருந்ததாக கூறப்படுகிறது.
இந்த சூழலில், ஆகாஷின் உடலை அரசு அதிகாரிகள் முன்னிலையில் கண்ணியமான முறையில் அடக்கம் செய்ய மதுரை உயர்நீதிமன்றக் கிளை அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி மதுரை மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையர், ராஜாஜி அரசு மருத்துவமனை முதல்வர் மற்றும் பிற அதிகாரிகள் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டது.
இதனையடுத்து இன்று உயர் நிதிமன்றம் உத்தரவுப்படி மதுரை ஆர்டிஓ கருணாகரன், சிவகங்கை ஆர்டிஓ ஜெபி கிரீசியா, சிவகங்கை ADSP சுகுமார் ஆகியேர் முன்னிலையால் மதுரை தத்தனேரி எரிவூட்டு மைதானத்திற்கு ஆகாஷ் உடல் தகனம் செய்யப்பட்டது. ஆகாஷ் டெலிசனின் தந்தை ராஜேஷ் கண்ணன் மற்றும் தாயார் ஆனந்தி மற்றும் சகோதரி ஆகியோர் இறுதி அஞ்சலி செலுத்தினர். ஆகாஷ் மரணமடைந்து 102 நாளில் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
-
4 தொகுதிகள் இடைத்தேர்தல் அறிவிப்புக்கு தடை கோரி வழக்கு.. ராஜினாமா செய்த எம்.எல்.ஏக்களுக்கு சிக்கல்! -
மதுரையில் வேலை.. சமுதாய வங்கி ஒருங்கிணைப்பாளர் பணி.. 127 பணியிடங்கள்! 12 ஆம் வகுப்பு தகுதி தான்! -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம்












Click it and Unblock the Notifications