CISF வீரர்களுடன்.. திருப்பரங்குன்றம் மலை மீது.. தீப தூணில் தீபம் ஏற்ற மதுரை உயர்நீதிமன்ற அமர்வு உத்தரவு!
மதுரை: திருப்பரங்குன்றம் மலை மீது இருக்கும் சிக்கந்தர் தர்கா அருகே உள்ள தீப தூணில் கார்த்திகை தீபம் ஏற்றபட வேண்டும் என்று மதுரை உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவிட்டிருந்தார். ஆனால், தீபம் ஏற்றப்படாத நிலையில், CISF வீரர்கள் கூட்டிக் கொண்டு தீபம் ஏற்ற மனுதாரர் ராம ரவிக்குமாருக்கு நீதிபதி உத்தரவிட்டிருக்கிறார்.
முருகனின் அறுபடை வீடுகளில் முதல் வீடாக இருப்பது திருப்பரங்குன்றம் மலை. இந்த மலையின் மீது உள்ள உச்சி பிள்ளையார் கோயில் அருகே கடந்த 40 ஆண்டுகளாக கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டு வருகிறது.

ஆனால், இரண்டாம் உலகப் போருக்கு முன்னர் வரை, சிக்கந்தர் தர்காவுக்கு வெறும் 15 மீட்டர் தூரத்தில் உள்ள தீப தூணில், கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டு வந்தது என்றும், எனவே இந்த ஆண்டு முதல் இந்த தூணில் தீபம் ஏற்றப்பட வேண்டும் எனவும் இந்துத்துவா அமைப்பை சேர்ந்த ராம ரவிக்குமார் உள்ளிட்டோர் மதுரை உயர் நீதிமன்றத்தை அணுகி இருந்தனர். இந்த வழக்கு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
இந்து சமய அறநிலையத்துறை தரப்பில் ஆஜராகியிருந்த வழக்கறிஞர், சிக்கந்தர் தர்காவுக்கு பக்கத்தில் இருக்கும் தூணில் தீபம் ஏற்றப்படவில்லை. காலங்காலமாக உச்சி பிள்ளையார் கோவில் அருகேதான் தீபம் ஏற்றப்பட்டு வருகிறது. இந்த ஆண்டும் அதே இடத்தில் தீபம் ஏற்றப்படும். எனவே ராம ரவிக்குமார் தரப்பு மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று வாதாடி இருந்தார். மட்டுமல்லாது இந்துத்துவா அமைப்பினர் சொல்லும் தீப தூண் என்பது தொல்லியல்துறையின் மைல்கல் என்றும் சொல்லப்படுகிறது.
இப்படி இருக்கையில், நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் மலையில் நேரடியாக ஆய்வு மேற்கொண்டு, தீப தூணில் கார்த்திகை தீபம் திருநாளில் (டிச.3) தீபம் ஏற்ற டிச.1ம் தேதி உத்தரவிட்டிருந்தார். ஆனால், வழக்கமாக தீபம் ஏற்றும் இடத்தில் மட்டுமே தீபம் ஏற்றுவதற்கான ஏற்பாடுகள் தீவிரமடைந்திருந்தன. எனவே, மனுதாரர்கள் தரப்பில் மீண்டும் நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது. அதில், தீபம் ஏற்றப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டது.
வழக்கு விசாரணையை மாலை 6.5 மணிக்கு ஏற்பதாகவும், அதுவரை தீபம் ஏற்ற நேரம் வழங்குவதாகவும் நீதிபதி கூறியிருந்தார். ஆனால், தீபம் ஏற்றப்படவில்லை. இதனையடுத்து நீதிமன்றத்தில் பாதுகாப்பு பணியில் உள்ள CISF வீரர்கள் கூட்டிக்கொண்டு 10 பேருடன் தீபம் ஏற்ற மனுதாரர் ராம ரவிக்குமாருக்கு நீதிபதி உத்தரவிட்டிருக்கிறார். ஆனால் அதற்குள் கோயிலுக்கு வெளியே கூடியிருந்த இந்துத்துவா அமைப்பினர் போராட்டத்தில் இறங்கினர். கோயிலுக்குள் தங்களை அனுமதிக்க வேண்டும் என்று தடுப்புகளை உடைத்து கொண்டு முன்னேறினர். இதனால் 2 காவலர்களுக்கு காயம் ஏற்பட்டது. இதனையடுத்து 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது.












Click it and Unblock the Notifications