வேங்கைவயல் விவகாரம்: “நீதிமன்றத்தை அரசியல் மேடையாக்க வேண்டாம்” ஐகோர்ட் கிளை எச்சரிக்கை!
மதுரை: வேங்கைவயல் விவகாரத்தில் நீதிமன்றங்களை அரசியல் மேடையாக்க வேண்டாம். அறிவியல் பூர்வமான விசாரணை நடத்தப்பட்டு, உரிய ஆதாரங்களுடன் குற்றப்பத்திரிகை அரசுத் தரப்பால் தாக்கல் செய்யப்பட்டுள்ளது என உயர் நீதிமன்ற மதுரை கிளை கருத்து தெரிவித்துள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் வேங்கை வயல் கிராமத்தில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட சம்பவத்தில் அண்மையில் சிபிசிஐடி போலீசார் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தனர். இந்தச் சம்பவத்தில் மூன்று நபர்கள் தொடர்புடையவர்கள் என குறிப்பிடப்பட்டதோடு அவர்கள் தொடர்பான வீடியோக்கள் மற்றும் ஆடியோக்களும் வெளியாகி இருந்தது.

ஐகோர்ட் கிளையில் விசாரணை
திருமங்கலத்தை சேர்ந்த கண்ணன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், "கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் 26 ஆம் தேதி புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய மேல்நிலை குடிநீர் தொட்டியில் மனித கழிவு கலக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
ஆனால், விசாரனையில் எந்த முன்னேற்றமும் இல்லை. இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களை உடனடியாக கைது செய்து தீவிர நடவடிக்கை எடுக்க கோரி ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி வழங்கும்படி உத்தரவிட வேண்டும்" எனத் கோரி இருந்தார்.
தமிழக அரசு வாதம்
நேற்று நீதிபதி நிர்மல் குமார் முன்பாக இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது தமிழ்நாடு அரசின் தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஹசன் முகமது ஜின்னா ஆஜராகி வாதிட்டார். "வேங்கைவயல் விவகாரம் சாதிய மோதல் அல்லது அரசியல் காழ்ப்புணர்ச்சியோ கிடையாது. இருவருக்கு இடையே ஏற்பட்ட தனிமனித பிரச்னை.
கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் புலன் விசாரணை செய்து விசாரணை நீதிமன்றத்தில் தற்போது குற்றப் பத்திரிக்கையும் தாக்கல் செய்து மூன்று நபர்களை குற்றவாளிகளாக சேர்த்துள்ளனர்.
இந்த வழக்கைப் பொறுத்தவரை சிபிசிஐடி போலீசார், மொத்தம் 389 சாட்சிகளிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர், 196 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டு அதில் உள்ள எண்கள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மேலும் 87 டவர் லொகேஷனில் ஆய்வு செய்து அதில் உள்ள புள்ளி விவரங்கள் எடுக்கப்பட்டதன் அடிப்படையில் 31 நபர்களிடம் டி.என்.ஏ பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது.
அறிவியல் பூர்வமாக உறுதியானது
மேலும் இந்த வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட மொபைல் போன்களில் அழிக்கப்பட்ட புகைப்படம், வீடியோ ஆதாரங்கள் நிபுணர் குழுக்களால் மீட்கப்பட்டு அறிவியல் ஆய்வக அறிக்கைக்கு அனுப்பப்பட்டது. அதேபோல் குடிநீர் தொட்டியிலிருந்து குற்றவாளிகள் எடுத்த செல்ஃபி புகைப்படங்கள் அங்கிருந்து தொடர்பு கொண்ட மொபைல் போன் எண்கள் என அனைத்தும் ஆய்வுக்கு எடுக்கப்பட்டது. இந்த வழக்கில் குற்றவாளிகள் மற்ற நபர்களிடம் பேசிய ஆடியோக்கள், சம்பந்தப்பட்ட நபர்களிடம் குரல் மாதிரிகள் எடுக்கப்பட்டு அனைத்தும் அறிவியல் பூர்வமாக ஆய்வு செய்து அனைத்தும் உண்மையானது என உறுதி செய்யப்பட்டது.
குற்றம் சாட்டப்பட்ட நபர்கள் தண்ணீர் தொட்டிக்கு ஏறும் வரை அதில் எந்தவிதமான கழிவுகளும் கலக்கவில்லை என்பதும் ஆய்வில் உறுதி செய்யப்பட்டது. சரியாக 7.35 மணிக்கு மேல்தான் கழிவு கலக்கப்பட்டுள்ளது. கழிவு கலக்கப்பட்ட தண்ணீர் யாருக்கும் விநியோகம் செய்யப்படவில்லை என்பதும் ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
குறிப்பாக இந்த வழக்கில் குற்றவாளிகளிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட மொபைல் போனிலிருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்கள் நேரம் வாரியாக ஆய்வு செய்யப்பட்டு உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது இந்த வழக்கு தீவிர புலனாய்வு விசாரணை முடித்து விசாரணை நீதிமன்றத்தில் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது." என அரசு குற்றவியல் தலைமை வழக்கறிஞர் தெரிவித்தார்.
அரசியல் மேடையாக்க வேண்டாம் - நீதிபதி
இதையடுத்து இன்று மீண்டும் விசாரணை நடைபெற்றது. அப்போது, வேங்கைவயல் விவகாரத்தில் நீதிமன்றங்களை அரசியல் மேடையாக்க வேண்டாம், அறிவியல் பூர்வமான விசாரணை நடத்தப்பட்டு, உரிய ஆதாரங்களுடன் குற்றப்பத்திரிகை அரசுத் தரப்பால் தாக்கல் செய்யப்பட்டுள்ளது என உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி தெரிவித்தார்.
வேங்கை வயல் விவகாரத்தில் ஏற்கனவே பல போராட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுவிட்டதால் இனி போராட்டம் நடத்துவது தேவையற்றது எனக்கூறிய நீதிபதி நிர்மல் குமார், போராட்டம் நடத்த அனுமதி கோரிய வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார்.












Click it and Unblock the Notifications