2 முறை எம்எல்ஏ! ஆனால் கடைசி வரை வாடகை வீடு! காலமானார் மக்கள் தொண்டர் நன்மாறன்!
மதுரை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான மகத்தான மக்கள் தொண்டர் நன்மாறன் (வயது 72) உடல்நலக் குறைவால் மதுரையில் இன்று காலமானார். நன்மாறன் மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
Recommended Video
2001,2006 சட்டசபை தேர்தல்களில் மதுரை கிழக்கு தொகுதியில் சி.பி.எம். வேட்பாளராகப் போட்டியிட்டு வென்றவர் நன்மாறன். மிக எளிமையான மனிதராக வாழ்ந்தவர். அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்களின் பெருமதிப்பையும் பெற்றவர்.
எம்.எல்.ஏ. பதவி மூலம் கிடைத்த ஊதியத்தை கட்சிப் பணிகளுக்கே கொடுத்தார். தமக்கு கட்சி கொடுத்த ரூ12,000-ல் மட்டுமே குடும்பத்துடன் வாழ்க்கையை நடத்தியவர் நன்மாறன். மதுரை ஆரப்பாளையத்தில் ரூ6,000-க்கான வாடகை வீட்டில்தான் கடைசி வரை வாழ்ந்தார்.

மகத்தான மக்கள் தொண்டர்
மக்களுக்காக 24 மணிநேரமும் உழைத்துக் கொண்டிருந்த மகத்தான மக்கள் தொண்டராக திகழ்ந்தார். மதுரையில் ஐடி பார்க், சென்னை உயர்நீதிமன்ற கிளை உள்ளிட்டவை உருவாக பெரும் பாடுபட்டவர். கடந்த ஆண்டு பேருந்து ஏற முயற்சித்த போது நன்மாறன் ஒரு செருப்பை தவறவிட்டார். அதை எடுக்க நன்மாறன் ஓடினார். ஆனால் பேருந்து நிற்காமல் சென்றது. இதை பார்த்த ஆட்டோ ஓட்டுநர் பாண்டியன், இது நன்மாறன் அய்யாவாச்சே..என பதறியபடி அவரை தமது ஆட்டோவில் ஏற்றிக் கொண்டார். அப்போதும் கூட என்னிடம் ரூ20 தானே இருக்கிறது என பதறியிருக்கிறார் நன்மாறன். அதை பற்றி கவலைப்படாதீர்கள் என்று சொன்னபடியே நன்மாறன் செல்ல வேண்டிய இடத்தில் கொண்டு போய்விட்டார் ஆட்டோ ஓட்டுநர் பாண்டி. அந்த அளவுக்கு எளிமையானவராக இருந்தார் நன்மாறன்.

வாடகை வீட்டுக்கு மனு
பிப்ரவரி மாதம் மதுரை ஆட்சியரிடம் நன்மாறன் ஒரு மனு கொடுத்திருந்தார். அந்த மனு அனைவரையும் அதிர்ச்சியுடன் திரும்பிப் பார்க்க வைத்தது. ராஜாக்கூர் பகுதியில் ஏழை எளிய மக்களுக்காக குடிசை மாற்று வாரியம் சார்பில் கட்டப்படுகிற வீடுகளில் ஒன்றை தமக்கு ஒதுக்க ஆவண செய்ய வேண்டும் என்பதுதான் அந்த மனு. அதையும் தமது மனைவி பெயரில் ஒதுக்கித் தாருங்கள் என கேட்டிருந்தார் நன்மாறன். தமிழகம் முழுவதும் நன்மாறனின் எளிமை வாழ்க்கை ஆச்சரியத்துடன் பேசப்பட்டது.

தொடர்ந்து பணி
தமது 72 வயதிலும் கட்சிப் பணிகள், இலக்கிய பணிகளில் தொய்வின்றி பயணித்தார். அரசு பேருந்துகளில்தான், ஷேர் ஆட்டோக்களில்தான் நன்மாறன் பயணம் மேற்கொண்டார்.

மாரடைப்பு- காலமானார்
நன்மாறனுக்கு நேற்று இரவு மாரடைப்பு ஏற்பட்டது. இதனையடுத்து மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி இன்று அவர் காலமானார். நன்மாறன் மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications