இடஒதுக்கீடு சீட் 2169.. ஆனால் நிரப்பப்பட்டது வெறும் 6! மான்சுக் மாண்டவியாவுக்கு சு.வெங்கடேசன் கடிதம்
மதுரை: மருத்துவப் படிப்பில் ஓபிசி பிரிவினருக்கான 27% இடஒதுக்கீடு இந்த ஆண்டே செல்லும் என கடந்த ஆண்டு உச்சநீதிமன்றம் அறிவித்த நிலையில், நடப்பாண்டில் வெறும் 6 ஓபிசி பிரிவு மாணவர்களுக்கு மட்டுமே இடம் வழங்கப்பட்டுள்ளது என்று சிபிஎம் எம்பி சு.வெங்கடேசன் விமர்சித்துள்ளார்.
இதன் மூலம் இடஒதுக்கீடு கோட்பாடு அப்பட்டமாக மீறப்பட்டுள்ளதாகவும், OBC , SC , ST அனுமதி குறித்த முழு விவரங்களை வெளியிட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியாவுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தை டிவிட்டரில் பகிர்ந்துள்ளார்.

கடிதம்
கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது, "அகில இந்திய மருத்துவக் கல்லூரி அனுமதி இடங்களுக்கான (AIQ) ஓபிசி இட ஒதுக்கீட்டில் விதிமீறல் நடந்திருப்பதாக செய்திகள் வந்துள்ளன. இட ஒதுக்கீடு இடங்கள் என்றாலே பொதுப் போட்டியில் (Open Competition) இடங்கள் நிரப்பப்பட்ட பின்னர் இட ஒதுக்கீடு இடங்கள் நிரப்பப்படும் என்பதே. அதாவது பொதுப் போட்டியில் அனுமதி பெறுகிற ஓபிசி, எஸ்சி, எஸ்டி பிரிவினர் இட ஒதுக்கீடு எண்ணிக்கையில் கழிக்கப்பட மாட்டார்கள். இது இட ஒதுக்கீடு கோட்பாட்டின் அடிச்சுவடி. உச்சநீதிமன்ற தீர்ப்புகள், அரசின் வழி காட்டல்கள் பல முறை தெளிவுபடுத்தப்பட்ட வழி முறை.

கேள்வி
ஆனால் மருத்துவ இளநிலை பட்டப் படிப்பு அகில இந்திய இடங்களுக்கான அனுமதியில் இந்த கோட்பாடு அப்பட்டமாக மீறப்பட்டுள்ளது எனத் தெரிகிறது. ஓபிசி மருத்துவ இளங்கலை இட ஒதுக்கீடு இடங்கள் 2169. நிரப்பப்பட்ட ஓபிசி இடங்களோ ஆறு மட்டுமே. பொதுப் போட்டியில் தேர்வான 2163 ஓபிசி மாணவர் எண்ணிக்கை, இட ஒதுக்கீடு அனுமதியாக கணக்கு வைக்கப்பட்டு விட்டதா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஒன்றிய அரசின் சுகாதார அமைச்சர் மாண்புமிகு மான்சுக் மாண்டவியாவுக்கு கடிதம் எழுதியுள்ளேன்.

இட ஒதுக்கீடு
ஒன்றிய அரசுக்கு ஒப்படைக்கப்பட்ட மொத்த மருத்துவ இளங்கலைப் பட்ட காலியிடங்கள் எவ்வளவு? ஓபிசி, எஸ்சி, எஸ்டி இட ஒதுக்கீட்டில் நிரப்பப்பட வேண்டிய இடங்களின் எண்ணிக்கை பிரிவு வாரியாக என்ன? பொதுப் போட்டியில் தேர்வான ஓபிசி, எஸ்சி, எஸ்டி மாணவர்கள் எண்ணிக்கை பிரிவு வாரியாக என்ன? ஓபிசி, எஸ்சி, எஸ்டி இட ஒதுக்கீடு வாயிலாக அனுமதிக்கப்பட்டு இருப்பவர்கள் (பொதுப் போட்டியில் இடம் பெற்ற இப்பிரிவினர் நீங்கலாக) பிரிவு வாரி எவ்வளவு?

ஆய்வு
பொதுப் போட்டியின் வாயிலாக அனுமதி பெற்ற ஓபிசி, எஸ்சி, எஸ்டி மாணவர்கள், ஓபிசி, எஸ்சி, எஸ்டி இட ஒதுக்கீடு எண்ணிக்கை கணக்கிலும் சேர்க்கப்பட்டு உள்ளனரா? ஆம் எனில் எத்தனை? முழு விவரங்களை வெளியிடுமாறு கோரியுள்ளேன். இட ஒதுக்கீடு மீறல் நடந்திருந்தால் பாதிக்கப்பட்ட, அனுமதி மறுக்கப்பட்ட ஓபிசி மாணவர்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும். எஸ்சி, எஸ்டி மாணவர் அனுமதியிலும் இக்கோட்பாடு மீறப்பட்டுள்ளதா என்பதை ஆய்வு செய்ய வேண்டும்.

கோட்பாடு மீறல்
மருத்துவக் கல்வி அனுமதிகளில் ஓபிசி இட ஒதுக்கீடு என்பது ஒன்றிய அரசால் மறுக்கப்பட்டு போராடி, நீதிமன்றங்களில் வாதாடி பெறப்பட்ட ஒன்று. அதில் தமிழகம் முன்னின்றது. ஆனால் இன்றும் அதை சிதைக்கிற முயற்சிகள் தொடர்கின்றன. இதை அனுமதிக்க இயலாது." என்று கூறியுள்ளார். மாநில மற்றும் மத்திய மருத்துவக் கல்லூரிகளில் அகில இந்திய ஒதுக்கீட்டின்படி இளநிலை படிப்புகளுக்கு 15%, முதுநிலை படிப்புகளுக்கு 50 சதவிகிதமும் இடங்கள் ஒதுக்கப்பட்டன. ஆனால் ஓபிசி பிரிவினருக்கு இடஒதுக்கீடு இல்லாமல் இருந்தது. இது தொடர்பாக பல்வேறு அரசியல் கட்சிகளும் குரல் எழுப்பின வந்தன.

வழக்கு பின்னணி
இந்நிலையில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் முக்கிய அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டது. அதன்படி, மருத்துவ படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டில் ஓபிசி பிரிவினருக்கு 27 சதவிகிதமும், பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கு 10 சதவிகிதமும் இடஒதுக்கீடு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் இந்த அறிவிப்பை நடப்பாண்டு முதல் அமல்படுத்த வேண்டும் என திமுக வழக்கு தொடுத்திருந்தது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் திமுகவுக்கு ஆதரவாக தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பின்படி இளங்கலை மற்றும் முதுகலைப் படிப்புகளில் 4,000 இடங்கள் கிடைக்கும் என்று சொல்லப்பட்டது. ஆனால் இந்த ஆண்டு வெறும் 6 இடங்கள் மட்டுமே பூர்த்தி செய்யப்பட்டிருப்பது குறித்து சிபிஎம் கேள்வியெழுப்பியுள்ளது.












Click it and Unblock the Notifications