சங்கரய்யாவுக்கு டாக்டர் பட்டம் மறுப்பு- ஆளுநர் ரவிக்கு கறுப்பு கொடி காட்டிய சிபிஎம்-100 பேர் கைது!
மதுரை: முதுபெரும் இடதுசாரித் தலைவரும் இந்திய விடுதலைப் போராட்ட வீரருமான சங்கரய்யாவுக்கு டாக்டர் பட்டம் வழங்க மறுத்த தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு மதுரையில் இன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கறுப்பு கொடி காட்டி போராட்டம் நடத்தினர். இப்போராட்டத்தில் ஈடுபட்ட 100க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

நாட்டின் விடுதலைப் போராட்ட வீரர், தமிழ்நாடு அரசால் தகைசால் தமிழர் விருது பெற்ற சங்கரய்யாவுக்கு மதுரை காமராசர் பல்கலைக் கழகம், டாக்டர் பட்டம் வழங்கி சிறப்பிக்க இருந்தது. ஆனால் இதற்கான கோப்புகளில் ஆளுநர் ஆர்.என்.ரவி கையெழுத்திட மறுத்தது பெரும் சர்ச்சையானது. ஆளுநர் ரவின் இந்த போக்குக்கு கடும் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டன.

இந்நிலையில் மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்தில் இன்று பட்டமளிப்பு விழா நடைபெற உள்ளது. இதில் ஆளுநர் ரவி பங்கேற்க உள்ளார். சங்கரய்யா விவகாரத்தில் ஆளுநரின் இந்த நிகழ்ச்சியை புறக்கணிப்பதாக தமிழ்நாடு அமைச்சர் பொன்முடி ஏற்கனவே அறிவித்திருந்தார். இது தொடர்பாக சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பொன்முடி, மதுரையில் நாளை நடைபெற உள்ள பட்டமளிப்பு விழாவைத் துணைவேந்தர் என்ற முறையில் புறக்கணிக்கிறேன். விடுதலைப்போராட்ட வீரர் சங்கரய்யாவிற்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்குவதற்கு ஆளுநர் மறுப்பு தெரிவிப்பதே இதற்குக் காரணம். சங்கரய்யாவிற்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்க வேண்டும் என தமிழ்நாடு அரசும், பல்கலைக்கழகத்தின் ஆட்சி மன்றமும் முடிவெடுத்து ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. ஆனால் ஆளுநர் ஆர்.என்.ரவி இந்த கோப்பில் கையெழுத்து இடாமல் இருக்கிறார். ஆளுநருக்கு சங்கரய்யா குறித்த வரலாறு தெரியவில்லை என்றால் கேட்டிருக்க வேண்டும் என்றார்.

மேலும் தந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டு 5 ஆண்டுகள் சிறையிலிருந்தவர் சங்கரய்யா. மேலும் பலபோராட்டங்கள் நடத்தி 4 ஆண்டுகள் சிறை என 9 ஆண்டுகள் சிறையிலிருந்துள்ளார். தனது 102 வயதிலும் மக்களுக்காக குரல் கொடுத்து வருகிறார். அவரை கவுரவிக்கும் விதமாகத் தமிழ்நாடு அரசால் தகைசால் தமிழர் விருது வழங்கியது. அவருக்குக் கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் இதற்கான கோப்பில் கையெழுத்துப் போட ஆளுநர் மறுத்துள்ளார். தமிழ்நாட்டு ஆளுநர் எந்த சட்டத்தையும் மதிப்பதில்லை. சமூக நீதி பேசுபவர்களை ஆளுநருக்குப் பிடிக்கவில்லை அதனால் தான் சங்கரய்யாவிற்கு டாக்டர் பட்டம் கொடுக்கக் கூடாது என்று நினைக்கிறார் எனவும் அமைச்சர் பொன்முடி சாடியிருந்தார்.

இந்த நிலையில் இன்று மதுரை வந்த ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக கறுப்பு கொடி போராட்டம் நடத்தினர் சிபிஎம் கட்சியினர். இதனையடுத்து ஆளுநர் ரவிக்கு கறுப்பு கொடி காட்டியதாக 100க்கும் மேற்பட்ட சிபிஎம் கட்சியினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.














Click it and Unblock the Notifications