அனுமதி இல்லை.. மதுரையில் தடுக்கப்பட்ட CRPF படையினர்! டக்கென சென்னைக்கு போன அலர்ட்: டோட்டல் கன்ட்ரோல்
சென்னை: திண்டுக்கல்லில் அமலாக்கத்துறை அதிகாரி லஞ்சம் வாங்கி பிடிபட்ட நிலையில், அமலாக்கத்துறையின் மதுரை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சி.ஆர்.பி.எஃப் படையினருக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், சென்னையில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தை சி.ஆர்.பிஎ.ஃப் படையினர் கட்டுப்பாட்டில் எடுத்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அரசு மருத்துவரை மிரட்டி லஞ்சம் பெற்ற அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி கைது செய்யப்பட்ட விவகாரத்தில் மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு துறையினர் விடிய விடிய தீவிர சோதனை நடத்தினர். லஞ்சப் பணத்துடன் தப்ப முயன்று, கைதான ED அதிகாரி அங்கித் திவாரி அறையில் பல்வேறு முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்ட நிலையில், லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

திண்டுக்கல் அரசு மருத்துவரான சுரேஷ் பாபுவிடம் 20 லட்சம் லஞ்சம் வாங்கிய போது கைது செய்யப்பட்ட அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரியிடம் 15 மணி நேரம் தொடர்ந்து விசாரணை நடத்திய திண்டுக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணையை முடித்து திண்டுக்கல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். லஞ்சம் பெற்ற போது கையும் களவுமாக சிக்கிய அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி இது போன்று பல நபர்களை மிரட்டி, கோடிக்கணக்கில் பணம் வசூலித்து சக அதிகாரிகளுக்கு பங்கு பிரித்து கொடுத்துள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
டாக்டர் சுரேஷ் பாபு மீதான வழக்கை தூசு தட்டாமல் இருப்பதற்காக மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் பணிபுரியும் அங்கித் திவாரி உள்ளிட்ட அதிகாரிகள் தங்களுக்கு ரூ.1 கோடி முதல் ரூ.3 கோடி வரை லஞ்சம் தர வேண்டும் என பேரம் பேசி மிரட்டியுள்ளனர். இதனால் பயந்து போன டாக்டர் சுரேஷ் பாபு முதலில் ரூ.20 லட்சத்தை அங்கித் திவாரியிடம் கொடுத்துள்ளார். அடுத்தக்கட்டமாக தர வேண்டிய லஞ்சப் பணத்தை கேட்டு சுரேஷ் பாபுவுக்கு அமலாக்கத்துறையினர் குடைச்சல் கொடுத்துள்ளனர். இதையடுத்து சுரேஷ் பாபு, இதுகுறித்து தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் அளித்தார். இதையடுத்து, அங்கித் திவாரியை பொறி வைத்துப் பிடித்தனர்.
வெளியவே நில்லுங்க..சிஆர்பிஎப்-க்கு மதுரை ED ஆபிஸில் அனுமதி மறுத்த தமிழக போலீஸ்! நள்ளிரவில் பரபரப்பு
அதன் தொடர்ச்சியாக, மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் துணை ராணுவத்தினரின் பாதுகாப்பை மீறி லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இதில் பல ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வந்த நிலையில், அலுவலக பாதுகாப்புக்காக வரவழைக்கப்பட்ட மத்திய ரிசர்வ் போலீஸ் படையினருக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
"உரிய அனுமதி பெற்ற பின்னரே சி.ஆர்.பி.எஃப் படையினர் உள்ளே செல்ல அனுமதிக்கப்படுவார்கள்" என்று தமிழ்நாடு காவல்துறை திட்டவட்டமாக தெரிவித்தது. வழக்கமாக அமலாக்கத்துறை சோதனைகளின்போது சி.ஆர்.பி.எஃப் படையினர் பாதுகாப்பு பணிக்காக வரவழைக்கப்படுவார்கள். இந்நிலையில், அமலாக்கத்துறை அலுவலகத்தில் நடந்த மாநில லஞ்ச ஒழிப்புத்துறையினரின் சோதனையின்போது, சி.ஆர்.பி.எஃப் படையினரையே தமிழக போலீசார் அனுமதிக்க மறுத்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
மேலும், இந்த விவகாரம் தொடர்பாக அடுத்ததாக சென்னை நுங்கம்பாக்கத்தில் அமைந்துள்ள சாஸ்திரி பவனில் இருக்கும் அமலாக்கத்துறை அலுவலகத்தில் சோதனை நடத்த லஞ்ச ஒழிப்பு போலீசார் திட்டமிட்டிருந்தனர். இதையடுத்து இன்று இரவோடு இரவாக சாஸ்திரி பவனுக்கு நூற்றுக்கணக்கில் வந்த சிஆர்பிஎப் துணை ராணுவப் படையினர், அந்தக் கட்டிடம் முழுவதையும் தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்தனர்.
எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் இந்த நடவடிக்கையை சிஆர்பிஎப் படையினர் எடுத்திருப்பது பல்வேறு சந்தேகங்களை கிளப்பியுள்ளது. லஞ்ச ஒழிப்பு போலீசார் சென்னையில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தை சோதனையிடுவதை தடுக்கும் வகையிலேயே இதுபோன்ற நடவடிக்கையை சிஆர்பிஎப் படையினர் எடுத்திருப்பதாக விமர்சனங்களும் கிளம்பியுள்ளன.












Click it and Unblock the Notifications