இனி தெற்கும் தேயாது.. மொத்தமாய் மாற போகும் தென்னகத்தின் கலர்! இனி மதுரை தான் அடுத்த சென்னை! எப்படி?
மதுரை: சென்னையில் லோக்கல் ரயில் என்ற அழைக்கப்படும் மி்ன்சார ரயில் சேவையை மதுரையை மையமாகக் கொண்டு தென்மாவட்டங்களில் இயக்க வேண்டுமென கோரிக்கைகள் எழுந்துள்ளது. இந்நிலையில் தென் மாவட்டங்களில் மெமோ போன்ற ரயில்கள் இயக்க சாத்தியக் கூறுகள் குறித்து ஆராயப்படும் என ரயில்வே நிர்வாகம் கூறியிருப்பது மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
சென்னையைப் பொறுத்தவரையில் முக்கிய நகரங்களை இணைக்கும் வகையில், புறநகர் பகுதிகளில் மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதனால், பொதுமக்கள் போக்குவரத்து எளிதாகவும் இருக்கிறது. பலரும் நகர்பகுதிகளுக்கு வந்து செல்வது சுலபமாகி விடுகிறது.

இதன் அடிப்படையில், மதுரையை அடிப்படையாக கொண்டு திண்டுக்கல், தேனி, விருதுநகர், தென்காசி, நெல்லை என இயக்கப்பட்டால், இந்த நகரங்களுக்கு இடையிலான கிராமங்கள் பெருமளவில் பயனடைவதுடன், பஸ் போக்குவரத்தைவிட மிகக் குறைந்த செலவில் தங்களது பயணத்தை பொதுமக்கள் பெற முடியும்.
தற்போது பகல் நேர ரயில் சேவை இருந்தாலும், தற்போது அதிகரித்துள்ள மக்கள் தொகைக்கு ஏற்ற வண்ணம் இல்லை. தென் மாவட்டங்களின் நுழைவாயிலாக மதுரை உள்ளது. அதுமட்டுமன்றி, காய்கறியிலிருந்து பல்வேறு வகையான சந்தைகளுக்கு முக்கியமான இடமாகவும். சிறு, குறு மற்றும் பெருந்தொழில்களுக்கான நகரமாகவும் உள்ளது. அதேபோல், முருகனின் அறுபடை வீடுகளில் 4 படை வீடுகளில் தென்மாவட்டங்களில் வருகின்றன.
அதேபோல், கேரளாவின் சபரிமலைக்கு செல்வோர் தேனி வழியை பிரதமான பயன்படுத்துகி்ன்றனர். முருகன், ஐயப்பன் சீசன்களின் இப்பகுதிளில் படையெடுக்கும் பக்தர்களின் எண்ணிக்கை கூடுதல் சேவை தேவை என்பதை உணர்த்தும். சிவகாசியைப் பொறுத்தவரை பட்டாசு, அச்சுத்தொழில்; குறிப்பாக, இந்தியா முழுவதும் இங்கிருந்துதான் காலண்டர்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. ராஜபாளையத்தில் முழுவதும் நூற்பாலைகள், பஞ்சாலைகள் நிறைய உள்ளன.

தென்காசியில் மரத்தொழில்கள், சாத்தூர், கோவில்பட்டி தீப்பெட்டித் தொழிற்சாலைகள், கடலை மிட்டாய் போன்ற சிற்றுண்டி வகைகள் இங்கு உள்ளன. அதேபோன்று தூத்துக்குடியில் பெரும் தொழிற்சாலைகள் நிறைய உள்ளன. இதுபோன்ற மின்சார ரயில் சேவையால் சாமானியர்களின் பணம், நேரத்தை மிச்சமாகும். சுற்றுச்சூழல் மாசுபடுவதும் தவிர்க்கப்படும்.
இது குறித்து சமூக ஆர்வலரும், பேராசியருமான தமிழ்நாயகன் ஒன் இந்தியா தமிழிடம் பேசுகையில்," மதுரை மாவட்டத்தை தலைமையிடமாகக் கொண்டு தென் மாவட்டங்கள் செயல்படுகின்றன. தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, தேனி, திண்டுக்கல், பழநி உள்ளிட்ட நகரங்கள் அனைத்தும் 100 லிருந்து 150 கி.மீ.க்குள் உள்ளன. இப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் மதுரைக்குள் வந்தே ஆக வேண்டும். நிறைய தொழில் நிறுவனங்கள், மருத்துவ வசதிகள் ஆகியவற்றோடு உயர்நீதிமன்ற மதுரைக்கிளையும் இங்கேதான் உள்ளது. பல்வேறு வங்கிகளின் தலைமை அலுவலகங்கள் மதுரையில் உள்ளன. எனவே மின்சார ரயில் சேவை என்பது காலத்தின் தேவை. அதோடு, விபத்துகள் தவிர்க்கபடும். சுற்றுச்சூழல் மாசுபடுவது குறையும். நேரம் மிச்சமாகும். ரயில்வேக்கும் வருவாய் அதிகரிக்கும். குறி்ப்பாக, தென்மாவட்டங்கள் பொருளாதார ரீரியாக பெருவளர்ச்சியடையும்" என்றார்.
மேலும், மதுரை- விருதுநகா்- திருநெல்வேலி, மதுரை-விருதுநகா்-செங்கோட்டை, மதுரை-மானாமதுரை- பரமக்குடி, மதுரை-திண்டுக்கல்-திருச்சி, மதுரை-உசிலம்பட்டி-தேனி ஆகிய வழித்தடங்களில் இந்த மெமு ரயில்களை இயக்க வேண்டும் என எம்பி மாணிக்கம் தாகூரும் மத்திய அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அதில்," பிரதான வழித்தட மின்சார மல்டிபிள் யூனிட் (மெமு) ரயில்களை மதுரையில் இருந்து அருகில் உள்ள நகரங்கள் மற்றும் சிறு நகரங்களுக்கு இயக்குவதற்கான கோரிக்கை நீண்ட நாள்களாக நிலுவையில் இருந்து வருகிறது.
திருச்சி, திருவனந்தபுரம் ரயில்வே கோட்டங்களில் வெற்றிகரமாக செயல்பட்டபோதிலும், மதுரைக் கோட்டத்தில் இன்னும் இந்தச் சேவைகள் அமல்படுத்தப்படவில்லை. இந்த வழித்தடங்கள் ஏற்கெனவே மின்மயமாக்கப்பட்டுள்ளன. இதனால், இந்த மெமு ரயில்களை இயக்குவது ரயில்வே கோட்டத்திற்கு எளிதாகவும் இருக்கும்" என கூறியுள்ளார்.
இந்நிலையில் பலரும் இதே கோரிக்கையை எழுப்பி மத்திய அரசுக்கு கடிதங்களை, கோரிக்கை மனுக்களையும் வழங்கிய நிலையில், சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அரசு கூறியுள்ளது. இதனால் மக்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும், இது தொடர்பான ஆய்வு பணிகள் விரைவில் தொடங்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications