முத்துராமலிங்க தேவர் குரு பூஜை.. தங்க கவசத்திற்கு உரிமை கோரி ஓபிஎஸ் தரப்பு மனு
மதுரை: பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரின் குரு பூஜை விழாவில் அவருக்கு அணிவிக்கப்படும் தங்க கவசத்திற்கு ஓபிஎஸ் தரப்பு உரிமை கோரி மனு அளித்துள்ளதால் பரபரப்பு எழுந்துள்ளது.
பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சிலைக்கு அதிமுக சார்பில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 2014 ஆம் ஆண்டு 3.7 கோடி ரூபாயில் 13 கிலோ எடை கொண்ட தங்க கவசத்தை அளித்திருந்தார்.
அந்த கவசம் மதுரை அண்ணாநகரில் உள்ள தனியார் வங்கி லாக்கரில் வைத்து பாதுகாக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் முத்துராமலிங்க தேவரின் குரு பூஜை விழாவின் போது வங்கிக்கு நேரில் வந்து அதிமுக பொருளாளர் கவசத்தை பெற்று அதை தேவர் நினைவிட பொறுப்பாளர்களிடம் ஒப்படைப்பது வழக்கம்.

பூஜை
பின்னர் பூஜை முடிந்த பின்னர் அந்த கவசத்தை திரும்ப பெற்று வங்கியில் ஒப்படைத்துவிடுவர். அதிமுகவில் ஓபிஎஸ் பொருளாளராக இருந்த வரையில் அவர்தான் தங்க கவசத்தை பெறுவார், பூஜை முடிந்தவுடன் வங்கியில் ஒப்படைத்துவிடுவார். ஆனால் அதிமுகவில் ஒற்றை தலைமை பிரச்சினை எழுந்ததால் அதற்கு ஒப்புதல் தராத ஓபிஎஸ், கட்சியிலிருந்து பொருளாளர் பதவியிலிருந்தும் நீக்கப்பட்டார்.

திண்டுக்கல் சீனிவாசன்
அவருக்கு பதிலாக திண்டுக்கல் சீனிவாசனை பொருளாளராக நியமித்தார். தேவரின் குரு பூஜை விழா வரும் 28,29, 30 ஆகிய தேதிகளில் கொண்டாடப்படும். இதையொட்டி கடந்த செப்டம்பர் 16 ஆம் தேதி தங்க கவசத்திற்கு உரிமை கோரி வங்கி நிர்வாகத்திடம் எழுத்துப்பூர்வமாக திண்டுக்கல் சீனிவாசன் கடிதம் எழுதியுள்ளார்.

தங்க கவசம்
இந்த நிலையில் தங்க கவசத்திற்கு உரிமை கோரி ஓபிஎஸ் தரப்பும் வங்கி நிர்வாகத்திடம் கடிதம் கொடுத்துள்ளது. ஓபிஎஸ் ஆதரவாளரான மாநிலங்களவை எம்பி தர்மர், மதுரை வங்கி நிர்வாகத்திடம் தங்க கவசத்திற்கு உரிமை கோரி மனு தாக்கல் செய்துள்ளார்.

மனுதாக்கல்
இரு தரப்பினரும் மனு தாக்கல் செய்துள்ளதால் கவசத்தை யாரிடம் ஒப்படைப்பது என்பது குறித்து வங்கி நிர்வாகம் குழப்பத்தில் உள்ளது. தங்க கவசத்தை எப்படியாவது பெற்று தனது அதிகாரத்தை நிலை நிறுத்த வேண்டும் என ஓபிஎஸ் தரப்பும், எடப்பாடி பழனிசாமி தரப்பும் முனைப்பு காட்டி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications