சொரிமுத்து அய்யனார் கோவில்.. பக்தர்கள் பிக்னிக் போவது போல் செல்கின்றனர்.. சென்னை மதுரை ஐகோர்ட் கிளை
மதுரை: சொரிமுத்து அய்யனார் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் ஏதோ பிக்னிக் ஸ்பாட்டுக்கு செல்வது போல் செல்கின்றனர் என்றும் அடுத்த ஆண்டு கோயிலுக்கு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பக்தர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
திருநெல்வேலி மாவட்டம் காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. ஆடி, தை அமாவாசை போன்ற முக்கிய தினங்களில் இந்த கோவிலுக்கு அதிக அளவில் பக்தர்கள் வருகை தருகிறார்கள். குறிப்பாக ஆடி அமாவாசை, மஹாளய அமாவாசை, தை அமாவாசை போன்ற விசேஷ நாட்களில் ஆயிரகணக்கான பக்தர்கள் வருகை தருகிறார்கள். காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவிலில் ஆடி அமாவாசை திருவிழா 15 நாட்கள் கொண்டாப்படும்.

ஆடி அமாவாசைக்கு 7 நாட்களுக்கு முன்பும், ஆடி அமாவாசைக்குப் பிறகு 7 நாட்களும் கொண்டாடப்படுகிறது. திருநெல்வேலி மாவட்டத்தில் பாபநாசத்துக்கும் காரையார் அணைக்கும் இடையே உள்ள அடர்ந்த காட்டில் முண்டந்துறை காப்புக் காட்டில் அமைந்துள்ளது. இக்கோவிலுக்கு திருநெல்வேலி மாவட்டம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் வந்து செல்கின்றனர்.
இந்த நிலையில், தான், திருநெல்வேலியை சேர்ந்த சாவித்திரி என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில், புலிகள் காப்பகமாக விளங்கும் வனப்பகுதியில் சொரிமுத்து அய்யனார் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு ஆடி, தை அமாவாசை போன்ற முக்கிய தினங்களில் அதிக எண்ணிக்கையில் பக்தர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள்.
கோவிலுக்கு வரும் பக்தர்கள் அப்பகுதியில் கூடாரங்கள் அமைத்து தங்குகின்றனர். அது மட்டும் இன்றி அரசு தடை செய்த பொருட்களை பயன்படுத்துகிண்றனர். இதனால், சுற்றுச்சூழல் பாதிப்பும் ஏற்படுகிறது. ஆகவே, குறிப்பிட்ட அளவிலான எண்ணிக்கையில் மட்டுமே பக்தர்களை அனுமதிக்க உத்தரவிட வேண்டும்" என்று கூறப்பட்டு இருந்தது. இந்த மனு நீதிபதிகள் எஸ்.எஸ். சுந்தர், பரதசக்கரவர்த்தி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, சொரிமுத்து அய்யனார் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் ஏதோ பிக்னிக் ஸ்பாட்டுக்கு செல்வது போல் செல்கின்றனர் என்று நீதிபதிகள் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தினர். மேலும், முன்பு எல்லாம் தீ பந்தங்கள் ஏந்தி செல்வதை வழக்கமாக கொண்டிருந்தனர். ஆனால் தற்போது அதிக ஒளி பாய்ச்சும் வகையிலான விளக்குகளுடன் கூடிய வாகனங்களில் பயணம் செய்கின்றனர். இரவு நேரங்களில் கூட வன விலங்குகள் வெளியே வர பயப்படுகின்றன.
சொரிமுத்து அய்யனார் கோயிலுக்கு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பக்தர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும் கடந்த ஆண்டே நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. எனினும், அதனை மீறி அதிகளவிலான பக்தர்களை அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்கள். எனவே இந்த ஆண்டு விழாவின் போது குறிப்பிட்ட அளவு பக்தர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும் என்று உத்தரவிட்டதோடு, தமிழக அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர். மேலும் இந்த வழக்கை 4 வாரத்திற்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.












Click it and Unblock the Notifications