புரட்சி தமிழரா?.. "துரோக தமிழர்.." இதுதான் எடப்பாடிக்கு சரியாக இருக்கும்.. டிடிவி தினகரன் விளாசல்!
மதுரை: மதுரையில் நேற்று நடந்த அதிமுக எழுச்சி மாநாட்டில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு புரட்சி தமிழர் என்ற புதிய பட்டம் கொடுக்கப்பட்டது. இந்த நிலையில், எடப்பாடி பழனிசாமிக்கு துரோகத் தமிழர் என்ற பட்டம் தான் சரியாக இருக்கும் என டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
அதிமுக மாநில மாநாடு இன்று மதுரையில் நடைபெற்றது. அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி நடத்தும் முதல் பிரம்மாண்ட கூட்டம் இது என்பதால் தமிழக அரசியலிலும் இந்த மாநில மாநாடு முக்கியத்துவம் பெற்றது. மதுரை வலையங்குளம் ரிங்ரோட்டில் இந்த மாநாடு நடைபெற்றது. சுமார் 63 ஏக்கரில் பிரம்மாண்ட மாநாட்டு பந்தல் அமைத்து இந்த மாநாடு நடைபெற்றது. ஏராளமான தொண்டர்கள் இந்த மாநாட்டில் பங்கேற்றனர்.

மாநாட்டில் பங்கேற்க நேற்று முதலே அதிமுக தொண்டர்கள் மாநிலம் முழுவதும் இருந்து மதுரை நோக்கி புறப்பட்டனர். சென்னையில் இருந்து சிறப்பு ரயிலிலும் அதிமுகவினர் புறப்பட்டு சென்றனர். அதேபோல், வேன், கார்கள் என நேற்று மாலை முதலே அணிவகுத்து சென்றனர். இன்று காலை முதல் மாநாடு தொடங்கியது. அதிமுக மாநாட்டில் ஒன்றரை லட்சம் பேர் இருப்பதற்கான நாற்காலிகள் போடப்பட்டு இருந்தன.
லட்சக்கணக்கான தொண்டர்கள் குவிந்து இருந்த நிலையில், காலை முதல் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. ரோபோ சங்கர், மதுரை முத்து, ராஜலட்சுமி - செந்தில் உள்ளிடோர் பங்கேற்றனர். அதிமுக மாநாட்டில் 32 தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன. முன்னதாக எடப்பாடி பழனிசாமிக்கு " புரட்சிதமிழர்" என்றபட்டம் வழங்கப்பட்டுள்ளது. சர்வ சமய பெரியோர்கள் இந்த பட்டத்தை எடப்பாடி பழனிசாமிக்கு கொடுத்ததாக அதிமுக நிர்வாகி வைகை செல்வன் அறிவித்தார்.
மேடையிலேயே புரட்சி தமிழர் என வைகை செல்வன் மூன்று முறை உச்சரித்தார். மேலும் இந்த பட்டத்திலேயே இனி அதிமுகவினர் அழைக்க வேண்டும் என்று வைகை செல்வன் கோரிக்கை விடுத்தார். எடப்பாடி பழனிசாமிக்கு புரட்சி தமிழர் என்று பட்டம் கொடுக்கப்பட்ட நிலையில், அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் எடப்பாடி பழனிசாமிக்கு துரோக தமிழர் என்ற பட்டம் தான் சரியாக இருக்கும் என்று பேசினார்.

இது தொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்து டிடிவி தினகரன் கூறியதாவது:- துரோக தமிழர் என்று பட்டம் கொடுத்திருக்கலாம்.. துரோகத்துக்கு எடுத்துக்காட்டான தமிழர் என்ற பட்டம் வேண்டும் என்றால் அவருக்கு கொடுத்திருக்கலாம். அவர் என்ன புரட்சி செய்தார்.
காலில் விழுந்து பதவி வாங்கிவிட்டு பதவி கொடுத்தவர்களுக்கே துரோகம் செய்தவர் தான் பழனிசாமி. தன்னை ஆட்சியில் தொடர்ந்து நீட்டிக்க வைத்த ஓ பன்னீர் செல்வத்திற்கும் துரோகம் செய்தவர்தான் அவர்.. துரோகத்தாலும், பண பலத்தாலும், கட்சியை கபளீகரம் செய்து வைத்தவர் தான் அவர்.. அதற்கு தான் அவர் புரட்சி செய்துள்ளார். இது வெட்கக்கேடானது... இவ்வாறு டிடிவி தினகரன் கூறினார்.












Click it and Unblock the Notifications