4, 5 டைரக்டர் தப்பு தப்பாக படம் எடுக்குறாங்க! இனி பிராமணர்களை திட்ட முடியாது.. மோகன் ஜி பேச்சு!
மதுரை: தமிழ் சினிமாவில் 4, 5 இயக்குனர்கள் குறிப்பிட்ட சமூகங்கள் குறித்து தவறாக சித்தரித்து படம் எடுப்பதாகவும், இனி பிரமாணர்களை திட்ட முடியாத சூழல் உருவாகி இருப்பதாக கூறியுள்ளார் இயக்குனர் மோகன் ஜி. மேலும் பேட் கேர்ள் படம் குறித்த தனது விமர்சனம் ஒரு இயக்கமாகவே மாறி இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
அனுராக் காஷ்யப், இயக்குனர் வெற்றிமாறன் இணைந்து கிராஸ் ரூட் பிலிம் கம்பெனி மூலம், பேட் கேர்ள் என்ற படத்தை தயாரித்துள்ளனர். வெற்றிமாறனிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய வர்ஷா பாரத் இப்படத்தை இயக்கியுள்ளார்.

அஞ்சலி சிவராமன், சாந்தி பிரியா, ஹ்ரிது ஹருண், டிஜே அருணாசலம் மற்றும் சரண்யா ரவிச்சந்திரன் ஆகியோ நடித்துள்ள இப்படத்தின் டீசர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் வெளியானது. இயக்குனர் வெற்றிமாறன் உள்ளிட்டோர் டீசரை வெளியிட்டனர்.
பள்ளியில் படிக்கும் டீன் ஏஜ் பருவ பெண்ணின் ஆசைகள், எதிர்பார்ப்புகள், முதல் காதல், முதல் முத்தம் என இளமை கனவுகளையும் பெற்றோரின் கட்டுப்பாடு அவர்களை விட்டு பிரிந்து தனியாக வாழும் வாழ்க்கை, அவளது காதல் தேர்வுகள் என ஒரு இளம் பெண்ணின் வாழ்க்கையை குறித்து விவரிப்பதாக படம் எடுக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில் குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒரு பெண் எப்படி வேண்டுமானாலும் வாழலாம் என படம் எடுக்கப்பட்டு இருப்பதாகவும், படத்தில் பிராமண சமுதாயத்தை சேர்ந்த பெண்ணாக அவர் சித்தரிக்கப்பட்டு இருப்பதாக சிலர் விமர்சனங்களையும் முன்வைத்து வருகின்றனர்.
இதற்கிடையே படத்தை பாராட்டிய இயக்குனர் பா.ரஞ்சித், பேட் கேர்ள்-ஐ பார்க்க நேர்ந்தது, இது உண்மையிலேயே தைரியமான மற்றும் புத்துணர்ச்சியூட்டும் படம்! இப்படிப்பட்ட துணிச்சலான கதையை ஆதரித்ததற்காக இயக்குனர் வெற்றிமாறன் மகத்தான பெருமைக்கு உரியவர். அஞ்சலி சிவராமன் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார் என கூறியிருந்தார்.
அதற்கு பதிலடி கொடுத்திருந்து திரவுபதி உள்ளிட்ட படங்களை இயக்கிய மோகன் ஜி, ஒரு பிராமணப் பெண்ணின் தனிப்பட்ட வாழ்க்கையை சித்தரிப்பது இந்த குலத்திற்கு எப்போதும் தைரியமான மற்றும் புத்துணர்ச்சியூட்டும் படம். வெற்றிமாறன், அனுராக் காஷ்யப் & கோவிடம் இன்னும் என்ன எதிர்பார்க்க முடியும். இது போன்ற படங்களை உங்கள் சொந்த சாதிப் பெண்களுடன் முயற்சி செய்து, முதலில் உங்கள் சொந்த குடும்பத்தாரிடம் காட்டவும்" என காட்டமாக கூறியிருந்தார்.
இந்நிலையில், பேட் கேர்ள் படம் குறித்த தனது விமர்சனம் ஒரு இயக்கமாகவே மாறி இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் இந்து முன்னணி சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர்," பிராமணர்களை தொடர்ந்து தாக்கிக் கொண்டுதான் இருக்கிறார்கள். பேட் கேர்ள் திரைப்படம் குறித்து முதலில் நான் ட்வீட் போட்ட போது இவ்வளவு பெரிய ஆதரவு கிடைக்கும் என நான் எதிர்பார்க்கவில்லை.
பிராமணர்களுக்கு ஆதரவாக இதுவரை யாரும் குரல் எழுப்பவில்லை. பிராமணர்களை அவர்கள் திட்டுவார்கள். அதனை பிராமணர்களே கேள்வி கேட்க மாட்டார்கள் என நினைத்தேன். ஆனால் இந்த முறை இந்தப் பிரச்சனையில் ஒரு எழுச்சி உருவாகி அது மிகப்பெரிய ஒரு இயக்கமாகவே மாறி உள்ளது. இனிமேல் இதற்கு முன்னர் பிராமணர்களை திட்டுவது இருக்காது.
பிராமணர்களை மட்டுமல்ல பொதுவாகவே ஒரு சமூகத்தை குற்றவாளிகளாக காட்ட வேண்டும் என 4, 5 இயக்குனர்கள் திட்டமிடுகிறார்கள். நடக்காத பிரச்சனையை காட்டினால் படம் ஓடிவிடும் என்று நினைப்பில் அவர்கள் படம் இயக்குகிறார்கள். அதற்கு தற்போது கடிவாளம் வந்துள்ளது. இந்த படம் ரிலீஸ் ஆகும்போது தெரியும். அதில் உள்ள பிரச்சனையை ஒத்துக் கொள்கிறார்களளா? அல்லது சரி செய்கிறார்களா என்று தெரியும்.
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தமிழக அரசு நேரடியாக தலையிடவில்லை என சொல்லுகிறார்கள். ஆனால் வீட்டு காவலில் முக்கிய தலைவர்கள் வைக்கப்பட்டிருக்கிறார்கள். செல்போனில் தொடர்பு கொண்டு திருப்பரங்குன்றம் செல்லக்கூடாது என்கிறார்கள். எனக்கும் கூட அழைப்புகள் வந்தது. சென்னையில் இருந்து வரக் கூடாது என என்னையும் சொன்னார்கள். இது நேரடியான தொடர்புதான். எதிரில் இருப்பவர்கள் அவர்கள் உரிமையை பேசும்போது எங்கள் உரிமையை பேச எங்களுக்கும் உரிமை உள்ளது" என்றார்.












Click it and Unblock the Notifications