அதிமுக மாநாடு.. உண்ணாவிரதப் போராட்ட தேதியை மாற்றிய திமுக.. மதுரையில் 23ல் உண்ணாவிரதம்
மதுரை: நீட் தேர்வுக்கு எதிரான உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் தேதியை திமுக மாற்றியுள்ளது. தமிழ்நாட்டில் ஆகஸ்ட் 20ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை உண்ணாவிரதப் போராட்டம் நடத்தும் திமுக மதுரையில் மட்டும் வரும் 23ஆம் தேதிக்கு உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என அறிவித்துள்ளது.
நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 6 மாத காலமே உள்ள நிலையில், தேர்தல் பணிகளை அரசியல் கட்சிகள் தொடங்கியுள்ளன. சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு அதிமுகவில் இரட்டை தலைமை அகற்றப்பட்டு ஒற்றை தலைமையானது கொண்டு வரப்பட்டுள்ளது. அதன் படி அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார். தனது அதிகாரத்தையும் தனது செல்வாக்கையும் தொண்டர்களுக்கு மட்டுமில்லாமல் எதிர்கட்சிகளுக்கு காட்ட வேண்டிய நெருக்கடி ஏற்பட்டுள்ளதால் அதிமுக மாநில மாநாட்டிற்கு எடப்பாடி பழனிசாமி அழைப்பு விடுத்துள்ளார்.

சுமார் 4 மாத காலத்திற்கு முன்பே ஆகஸ்ட் 20 ஆம் தேதி மதுரையில் மாநாடு நடத்த திட்டமிடப்பட்டது. இதற்கான பணிகளை அதிமுகவினர் தீவிரமாக இறங்கியுள்ளனர். 25 லட்சம் பேரை ஒரே இடத்தில் திரட்டும் வகையில் பிரம்மாண்டமாக பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.
திமுக இளைஞரணி சார்பில் ஆகஸ்ட் 20ஆம் தேதி உண்ணாவிரதப் போராட்டத்தை அறிவித்தது. நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி திமுகவினர் சார்பாக உண்ணாவிரதப் போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. திமுக இளைஞரணி, மாணவரணி சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் இது அதிமுக மாநாடு குறித்த செய்திகள் ஊடகங்களில் அதிகம் வெளியாகக் கூடாது என்பதற்காக போட்டிக்காக அறிவிக்கப்பட்ட போராட்டம் என்று அதிமுகவினர் குற்றம் சாட்டினர். மதுரையில் அதிமுக மாநாடு நடைபெறும் நிலையில் திமுகவின் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றால் கூட்ட நெரிசல் ஏற்படும் என்று கூறப்பட்டது.
இந்த நிலையில் திமுக போராட்டம் நடைபெறும் தேதி மாற்றப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் நாளை போராட்டம் நடைபெறும் நிலையில் மதுரையில் மட்டும் வரும் 23ஆம் தேதி உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications