“பரபர ஆடியோ”.. சிபிஐ விசாரணை வேண்டும்.. இல்லையேல் திமுக அரசு பதவி விலகணும்.. அதிமுக ‘மாஜி’ சீற்றம்!
மதுரை : "நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கூறிய 30 ஆயிரம் கோடி ஊழல் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரிந்துரை செய்ய வேண்டும். இல்லையென்றால் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு ராஜினாமா செய்ய வேண்டும்" என அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் பேசியுள்ளார்.
தமிழ்நாடு நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், முதல்வர் மு.க.ஸ்டாலினின் மருமகன் சபரீசன் ஆகியோர் குறித்துப் பேசியதாக வெளியான ஒரு ஆடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை சமூக வலைதளங்களில் பகிர்ந்த அந்த ஆடியோ ஜோடிக்கப்பட்டது என்று அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் விளக்கம் அளித்தார்.

இந்நிலையில் இந்த ஆடியோ விவகாரம் பற்றி செய்தியாளர்களிடம் பேசிய ஆர்.பி.உதயகுமார், அதிமுக ஆட்சியில் கொண்டு வந்த பல்வேறு திட்டங்களை திமுக அரசு நிறுத்திவிட்டது. தமிழ்நாட்டு மக்களுக்கு விடியல் தருவோம் என்று ஸ்டாலின் கூறினார். ஆனால் இன்றைக்கு 30,000 கோடியை கொள்ளையடித்து அந்த பணத்தை எப்படி மாற்றுவது என உதயநிதிக்கும், சபரீசனுக்கும் தெரியவில்லை. நான் இதைச் சொல்லவில்லை தமிழ்நாடு அரசின் நிதி அமைச்சராக இருக்கிற பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் சொல்லியிருக்கிறார்.
சீதை தர்மபத்தினி என்றாலும், ராவணன் கடத்திச் சென்ற காரணத்தினாலே, சீதை தீக்குளித்து தான் பத்தினி என்று உலகத்திற்கு தர்மத்தை நிலைநாட்டியது போல, திராவிட முன்னேற்றக் கழகம் சீதை போன்று பத்தினியாக இல்லை என்றாலும் கூட, இன்றைக்கு உண்மைத் தன்மையை உலகிற்குச் செல்ல வேண்டிய தார்மீக பொறுப்பு திமுக அரசின் முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களுக்கு உண்டு.
எனவே நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கூறிய 30 ஆயிரம் கோடி ஊழல் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரிந்துரை செய்ய வேண்டும். சிபிஐ விசாரணைக்கு அவர்கள் பரிந்துரை செய்யவில்லை என்றால் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு ராஜினாமா செய்ய வேண்டும்" என வலியுறுத்தினார்.











Click it and Unblock the Notifications