மதுரை வந்த முதல்வர்.. பிரம்மாண்ட பேனாவை பரிசளித்த தொண்டர்கள்.. ஆச்சரியமடைந்த மு.க.ஸ்டாலின்!
மதுரை வந்த மு.க.ஸ்டாலினுக்கு திமுகவினர் பிரம்மாண்ட பேனாவை பரிசளித்துள்ளனர்.
மதுரை: "கள ஆய்வில் முதலமைச்சர்" திட்டத்தின் 3வது கட்டமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை, தேனி ஆகிய 5 மாவட்டங்களில் திட்டப் பணிகளை ஆய்வு செய்து வருகிறார். இதற்காக சென்னையில் இருந்து மதுரை விமான நிலையத்திற்கு வந்த மு.க.ஸ்டாலினுக்கு, திமுக தொண்டர்கள் பேனாவை பரிசாக அளித்தது பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு சென்னை மெரினா கடற்கரையில் அண்ணா நினைவிட வளாகத்தில் 2.23 ஏக்கர் பரப்பளவில் தமிழ்நாடு அரசு சார்பில் நினைவிடம் கட்டப்பட்டு வருகிறது.
இந்த பணிகள் ஒருபுறம் நடந்து கொண்டிருக்க, கடலில் ரூ.81 கோடி செலவில் 134 அடி உயரத்துக்கு பிரமாண்ட 'பேனா' நினைவுச் சின்னம் அமைக்க தமிழக அரசு திட்டமிட்டது.

பேனா நினைவு சின்னம்
இந்த பிரமாண்ட நினைவு சின்னத்துக்கு முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் பேனா நினைவு சின்னம் என்று பெயரிடப்பட்டு உள்ளது. இந்த நினைவு சின்னம் அமைக்க மத்திய அரசின் கடலோர ஒழுங்குமுறை ஆணையம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் அனுமதி பெற விண்ணப்பிக்கப்பட்டது. இதில் மத்திய அரசின் முதற்கட்ட அனுமதி கிடைத்ததை தொடர்ந்து அடுத்த கட்டமாக பொதுமக்களின் கருத்துக் கேட்பு கூட்டம் கடந்த ஜனவரி 31ம் தேதி நடைபெற்றது.

கருத்துக் கேட்பு கூட்டம்
இந்த கருத்துக் கேட்பு கூட்டத்தில், பேனா நினைவு சின்னம் அமைத்தால் 13 மீனவ கிராம மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்றும், பேனா நினைவு சின்னம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்றும், அதனை கடலில் வைப்பதற்கே எதிர்க்கிறோம் என்றும் தெரிவிக்கப்ப்பட்டது. இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசியலில் பேனா நினைவு சின்னம் விவகாரம் விவாதத்தை ஏற்படுத்தியது.

மதுரை வந்த மு.க.ஸ்டாலின்
இந்த நிலையில் "கள ஆய்வில் முதலமைச்சர்" திட்டத்தின் கீழ் ஆய்வு நடத்துவதற்காக 3வது கட்டமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மதுரை வந்தார். இந்த இரு நாட்களில் மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை, தேனி ஆகிய 5 மாவட்டங்களில் திட்டப் பணிகளை ஆய்வு செய்கிறார். இதற்காக மதுரை வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திமுக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

பரிசாக அளிக்கப்பட்ட பேனா
பின்னர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை அமைச்சர் மூர்த்தி, பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், தங்கம் தென்னரசு, ஐ.பெரியசாமி உள்ளிட்டோர் வரவேற்றனர். அப்போது யாரும் எதிர்பார்க்காத வகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பிரம்மாண்ட பேனா பரிசளிக்கப்பட்டது. இது திமுக தொண்டர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியது.












Click it and Unblock the Notifications