நகைச்சுவை நடிகராக மாறி வருகிறார் ஸ்டாலின்... அமைச்சர் செல்லூர் ராஜூ சொல்கிறார்
மதுரை: திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் நகைச்சுவை நடிகராக மாறி கொண்டே வருவதாக அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அரசு மருத்துவமனையில் ரூ1.50 கோடி மதிப்பீட்டில் 40 படுக்கைகள் கொண்ட கூடுதல் கட்டிடம் கட்டும் கால்கோல் விழா நடைபெற்றது.
இவ்விழாவில் தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ சட்டமன்ற உறுப்பினர்கள் மாவட்ட ஆட்சியர் நடராஜன் ஆகியோர் கலந்துகொண்டு துவக்கி வைத்தனர்.
தேர்தல் நேரத்தில் முடிவு
பின்னர், செய்தியாளர்களை சந்தித்த கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு பேசியதாவது: அமைச்சர்களை பொறுத்த வரைக்கும் யார் வேண்டுமானாலும் அரசியல் கருத்துக்கள் பேசலாம். ஆனால் கூட்டணி குறித்து ஆட்சி மன்ற குழுக்கள் மற்றும் தலைமை தான் முடிவெடுக்கும் அதுவும் தேர்தல் நேரத்தில் தான் முடிவு எடுக்கப்படும்.,
தற்போது வரை தனித்து
40 தொகுதிகளிலும் அதிமுக தனித்து நிற்பது போல் தான் தற்போது வரை பணியாற்றி வருகிறோம். 40 தொகுதிக்கும் விருப்ப மனுக்கள் வரவேற்கப்படுகிறது என்ற அறிவிப்பை தமிழக முதல்வர் அறிவித்து இருக்கிறார். தனித்து நிற்பதா கூட்டணி வைப்பதா என்பது தேர்தல் நேரத்தில் தான் தெரியும்.
நகைச்சுவை ஸ்டாலின்
ஸ்டாலின் அவர்கள் பேசுவது நகைச்சுவையாக இருக்கிறது. ஊர், ஊராக சென்று ஸ்டாலின் அவர்கள் உளறிக் கொண்டிருக்கிறார். எம்ஜிஆர் இருக்கும் வரை 14 ஆண்டுகள் வனவாசம் சென்றது தான் திமுக தான். துணை முதல்வராக ஸ்டாலின் இருந்த போது எந்த ஒரு ஊருக்கும் சென்று மக்கள் குறைகளை கேட்கவில்லை.
மிக சிறப்பான பட்ஜெட்
கலைஞர் வழியிலேயே ஸ்டாலினும் மக்களிடத்தில் தற்போது வரை பொய்யாக பேசிக் கொண்டு வருகிறார். திமுக ஆளுங்கட்சியாக வந்தால் குடும்பத்தை மட்டுமே நினைக்கும் ஒரு கட்சியாக மாறும். இதுதான் மக்கள் கூறும் கருத்து. மத்திய அரசின் பட்ஜெட் என்னுடைய பார்வையில் மிக சிறப்பாக வந்துள்ளது.
45 மாதங்களுக்குள் எய்ம்ஸ்
எய்ம்ஸ் மருத்துவமனை குறித்த கேள்விக்கு? பதிலளித்த அவர், 45 மாதங்களுக்குள் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டி முடிக்கப்பட்டு மக்கள் சேவைக்கு வரும். எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் அவர்கள் நகைச்சுவை நடிகராக மாறி வருகிறார்.
அரசு மெத்தனம் காட்டாது
மேலும், மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் வருவதற்கு முன் கோவில் பழைய நிலைமைக்குத் திரும்பும். மீனாட்சி அம்மன் கோவிலை பொறுத்தமட்டில் அதிமுக அரசு மெத்தனம் காட்டாது என்று தெரிவித்தார்.