ஈரோட்டில் மினி பட்ஜெட்டை செலவு செய்த திமுக.. இது அதிமுகவுக்கு தோல்வியே அல்ல.. செல்லூர் ராஜூ பேட்டி!
ஈரோடு இடைத்தேர்தலில் திமுக மினி பட்ஜெட்டை செலவு செய்துள்ளதாக செல்லூர் ராஜூ விமர்சித்துள்ளார்.
மதுரை: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் ஒரு மினி பட்ஜெட்டை செலவு செய்து திமுக வெற்றிபெற்றுள்ளதாக அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ விமர்சித்துள்ளார். அதேபோல், பணத்தின் மூலம் திமுக வெற்றிபெற்றதாக கூறிய அவர், எடப்பாடி பழனிசாமியை நான்காம் தர பேச்சாளர் என்று விமர்சித்த முதல்வர் மு.க.ஸ்டாலினை கண்டிப்பதாக தெரிவித்துள்ளார்.
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா பிறந்தநாள் பொதுக்கூட்டம் விழா வரும் நாட்களில் நடத்த அதிமுக திட்டமிட்டு வருகிறது. இதுதொடர்பாக மதுரை மாநகர் அதிமுக வளர்ச்சி பணி குறித்து அதிமுக அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்து முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறுகையில், ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு மாவட்ட அளவில் பொதுக்கூட்டங்கள் நடத்த வேண்டும் என்று இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

செல்லூர் ராஜூ பேட்டி
அதன்படி மதுரை மாவட்ட அளவில் பொதுக்கூட்டம் நடத்த உள்ளோம். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுகவிற்கு பயந்து திமுகவின் 30 அமைச்சர்களையும் முழு நேரமாக பணியாற்ற வைத்து பரிசு பொருட்கள், பணம், இறைச்சி என்று அனைத்தையும் வாரி இறைத்து திமுக இந்த வெற்றியை பெற்றுள்ளது. இதனை சாதாரணமாக கிடைத்த வெற்றியாக கருத முடியாது. அதிமுகவை கண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பயந்துள்ளார். கடந்த 28 நாட்களாக 30 அமைச்சர்கள் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தனர்.

திமுக வெற்றி
ஈரோடு பொதுமக்களை கூடாரங்கள் அமைத்து அடைத்து வைத்து அவர்களுக்கு உணவும், காலை ஆயிரம், மாலை ஆயிரம் என பணம் வழங்கினர். ஞாயிற்றுக் கிழமைகளில் மட்டன், கோழிக்கறி வாங்கிக் கொடுத்து வெற்றிபெற்றுள்ளனர். பணத்தின் மூலம் திமுக வெற்றிபெற்றுள்ளது. இந்த தேர்தலில் தேர்தல் ஆணையம் கண்ணை மூடிக் கொண்டது. தேர்தல் ஆணையம் இருக்கிறதா? அதிகாரிகள் இருக்கிறார்களா? என்பதே தெரியவில்லை. மோசடியாக தேர்தல் நடைபெற்றுள்ளது.

புதிய ஃபார்முலா
திருமங்கலம் ஃபார்முலாவை கடந்து, ஈரோடு கிழக்கு தொகுதி ஃபார்முலா என்று மாறும் அளவிற்கு பணம் கொடுக்கப்பட்டுள்ளது. திமுக கொண்டாடும் அளவிற்கு இங்கு எதுவும் நடைபெறவில்லை. தேர்தல் ஆணையம் திமுகவிற்கும், ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கும் துணை நின்றது. இது எங்களின் பகிரங்க குற்றச்சாட்டு. இது தோல்வி அல்ல, வெற்றிவாய்ப்பை தவற விட்டுள்ளோம். விஸ்வாசம், நம்பிக்கை எல்லாம் திமுகவிற்கு கிடையாது. மதுரையில் உள்ள 10 தொகுதிகளில் ஒவ்வொரு தொகுதிக்கும் 10 கோரிக்கைகளை முதல்வர் கேட்டு பெற்றுள்ளார். அதன் பெயரில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மதுரை போக்குவரத்து
அதேபோல் ஸ்மார்ட் சிட்டி பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். மதுரையில் 24 மணி நேரமும் குடிநீர் வழங்கும் திட்டத்தை விரைவாக செயல்படுத்த வேண்டும். அதுமட்டுமல்லாமல் மதுரையில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது. அதனை கட்டுப்படுத்த பாலம் கட்டும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். தமிழ்நாட்டின் மினி பட்ஜெட்டை செலவு செய்து திமுக ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் வெற்றிபெற்றுள்ளது. ஈரோடு மக்களும் அனைத்தையும் பெற்றுக் கொண்டு விஸ்வாசத்துடன் திமுக கூட்டணிக்கு வாக்கு செலுத்தி உள்ளனர்.

இபிஎஸ் முடிவு
அதிமுக பெரிய வெற்றிகளையும், தோல்விகளையும் கண்டுள்ளது. வெற்றியடைந்தால் கொண்டாடவும், தோல்வியை கண்டு துவண்டு போனதும் இல்லை. முதல்வர் மு.க.ஸ்டாலின், அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை நான்காம் தர பேச்சாளர் என்று கூறியதை வன்மையாக கண்டிக்கிறோம் என்று தெரிவித்தார். தொடர்ந்து, அனைவரும் இணைந்து செயல்படுவோம் என்று ஓபிஎஸ் பேசியது குறித்த கேள்விக்கு, எடப்பாடி பழனிசாமி தான் முடிவு எடுப்பார் என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications