'பருத்தி மூட்டை குடோன்லயே இருந்திருக்கலாம்'.. மதுரை- நத்தம் சாலையில் சுங்க கட்டணம் இவ்வளவா?
மதுரை: மதுரையில் இருந்து திருச்சிக்கு நத்தம் 4 வழி சாலை வழியாக பயணிப்பவர்களுக்கு சுங்க கட்டணம் வசூலிக்கப்படுகிறது. காருக்கு 180 ரூபாயும், லாரிக்கு 660 ரூபாயும் கட்டணம் வசூலிக்கப்படுவதால் வாகன ஓட்டிகள் கலக்கம் அடைந்துள்ளனர். திண்டுக்கல் செல்ல இந்த சாலை பயன்படுத்தியவர்கள் நொந்துபோனார்கள்.
மதுரை மாநகரில் மீனாட்சி அம்மன் கோயில் எவ்வளவு பிரபலமோ அதே அளவிற்கு சுங்கச்சாவடிகளும் பிரபலம். மதுரையை சுற்றிலும் சுங்கச்சாவடிகள் பிரபலம். மற்ற ஊர்களில் எல்லாம் நகருக்கு வெளியில் சுங்கச்சாவடி இருக்கும். மதுரை நகருக்குள்ளேயே கப்பலூரில் சுங்கச்சாவடி இருக்கிறது. அந்த அளவிற்கு வாகனங்களில் சுங்கச்சாவடிகள் வசூல் வேட்டை நடத்துகின்றன.

மதுரையின் மிகப்பெரிய பாலம் என்ற அடையாளத்துடன் மதுரை நத்தம் நான்கு வழிச்சாலை போடப்பட்டிருக்கிறது. மத்திய அரசின் பாரத்மாலா பரியோஜனா திட்டத்தின் கீழ் மதுரை மாநகர் தல்லாக்குளத்தில் இருந்து, நத்தம், துவரங்குறிச்சி, திருச்சி வழியாக சென்னை செல்வதற்கு நான்கு வழிச்சாலை போடப்பட்டுள்ளது. திண்டுக்கல்லுக்கு வாடிப்பட்டி, கொடைரோடு வழியாக போகாமல் நத்தம் வழியாகவும் போக முடியும். ரூ.1,744 கோடியில் மதுரை - நத்தம் நான்கு வழிச்சாலை புதிதாக போடப்பட்டிருக்கிறது.
இந்த புதிய சாலை எப்படி போடப்பட்டிருக்கிறது என்றால், துவரங்குறிச்சியில் இருந்து நத்தம் வரை 25.5 கி.மீ தூரத்திற்கும். நத்தத்தில் இருந்து மதுரை வரை 35.5 கி.மீ தூரத்திற்கும் நான்கு வழிச்சாலை போடப்பட்டுள்ளது. சுமார் 7 கிலோ மீட்டர் தூரம் மதுரையில் மேம்பாலத்துடன் செல்லும் இந்த சாலையில் திருச்சி மற்றும் திண்டுக்கல் செல்ல பயண நேரம் வெகுவாக குறைந்தது. இதன் காரணமாக சென்னையில் இருந்து மதுரைக்கு வரும் வாகனங்கள் திருச்சியில் இருந்து துவரங்குறிச்சி, கொட்டாம்பட்டி, மேலூர் வழியாக மதுரைக்கு வந்தன. அதேபோல் மதுரை ஆரப்பாளையம், கொடைரோடு வழியாக திண்டுக்கல் சென்ற பலர், அந்த சாலைகளை தவிர்த்து, மதுரை-நத்தம் நான்கு வழிச்சாலையில் பயணித்தார்கள். இப்படி பயணிக்க காரணமும் இருக்கிறது. சாலை அமைத்ததில் இருந்து சுங்ககட்டணம் வசூலிக்கப்படவில்லை. இதன் காரணமாக கடந்த சில மாதங்களாக நத்தம் சாலையில் திண்டுக்கல் மற்றும் திருச்சி செல்வோர் ஆர்வமுடன் பயணித்தனர்.
இதனிடையே மதுரை நத்தம் நான்கு வழிச்சாலையில் சுங்க கட்டணம் வசூலிக்க தொடங்கியுள்ளது தேசிய நெடுஞ்சாலை ஆணையம்.. மதுரை நத்தம் சுங்கச்சாவடியில் ஒரு முறை சென்று வர கார் மற்றும் டிராக்டருக்கு ரூ.180 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. மினி வேன், டெம்போ டிராவல்ஸ் வாகனத்திற்கு ரூ.290 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. பஸ் மற்றும் நான்கு சக்கர சிறிய ரக கண்டெய்னருக்கு ரூ.605 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இதேபோல் ஆறு சக்கர கண்டெய்னருக்கு 660 ரூபாயும் 8 சக்கர கண்டெய்னருக்கு ரூ.1155 கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்திலேயே அதிக கட்டணம் வசூல் செய்யும் சுங்கச்சாவடி என்ற பெருமையை மதுரை நத்தம் சாலை சுங்கச்சாவடி பெற்றிருப்பதாக வாகன ஓட்டிகள் புலம்பியபடி சென்றார்கள். இதுநாள் வரை சுங்கச்சாவடியில் கட்டணம் செலுத்தாமல் சென்ற கார் ஒட்டுநர்கள், லாரி ஒட்டுநர்கள் திடீரென சுங்க கட்டணம் வசூலிக்கப்பட்டது ஒருபுறம் எனில், சுங்க கட்டணம் தாருமாறாக இருந்ததார்ல டோல்கேட் ஊழியர்களுடன் சண்டையும் போட்டனர். என்கிட்ட அவ்வளவு பணம் இல்லையா என்று பல வாகன ஓட்டிகள் கவலையுடன் நின்றனர்.
நத்தம் வழியாக திண்டுக்கல் செல்ல முயன்றவர்களும் வசமாக சிக்கி கொண்டார்கள், மொத்தமாக 180, 290 என்ற கட்டணத்தை கேட்டவுடன் ஆடிப்போன பலர், வேறு வழியில்லாமல் கொடைரோடு வழியாக மதுரை-திண்டுக்கல் நான்கு வழிச்சாலையில் பயணிக்க தொடங்கி உள்ளார்கள். அதேபோல் திருச்சிக்கு நத்தம் வழியாக சென்றவர்கள், மேலூர் சுங்கச்சாவடி வழியாக வழக்கம் போல் பயணிக்க தொடங்கிவிட்டனர். ஏனெனில் மேலூர் வழியாக சென்றால் கட்டணம் மிக குறைவு.
மதுரை நத்தம் சாலை என்பது மதுரை உள்ளிட்ட தென்மாவட்ட மக்கள் பயணிக்க வேண்டும் என்பதற்காக போடப்பட்டது. ஆனால் மக்களால் பயன்படுத்தவே முடியாத அளவிற்கு சுங்க கட்டணம் வசூலிக்கப்படுவது மதுரை மக்களிடையே கோபத்தை ஏற்படுத்தி உள்ளது.. நியாமற்ற முறையில் கட்டணம் வசூலிக்கப்படுவதாக வாகன ஓட்டிகள் குற்றம்சாட்டி உள்ளனர்.. அதிக சுங்க கட்டணம் காரணமாக மதுரை நத்தம் சாலையை புறக்கணித்து இனி வழக்கமான சாலையில் மக்கள் பயணிக்க தொடங்குவார்கள் என்பதால், அந்த சாலையால் எந்த பயனும் இல்லாத நிலை ஏற்படும் என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications