மகளிர் தினத்தன்று கண்ணீர் விட்ட மதுரை சின்னப்பிள்ளை.. வீடியோவில் கூறியது என்ன?
மதுரை: மதுரை சின்னப்பிள்ளை தனது வீடியோவில் கண்ணீர் மல்க கூறியது என்ன தெரியுமா?
மதுரை மாவட்டம் அழகர் கோயில் செல்லும் சாலையில் அப்பன் திருப்பதி அருகே உள்ளது பில்லுசேரி கிராமம். இந்த ஊரைச் சேர்ந்த பெருமாளின் மனைவி சின்னப்பிள்ளை, கிராமத்தில் உள்ள பெண்களை ஒருங்கிணைத்து விவசாய வேலைகளுக்காக அழைத்து சென்று வேலை முடிந்ததும் அவர்களுக்கான ஊதியத்தை நில உரிமையாளர்களிடம் இருந்து மொத்தமாக வாங்கி ஒவ்வொருவருக்கும் பிரித்து கொடுத்தார்.

இவரும் விவசாய கூலித் தொழிலாளிதான். மதுரை சின்னப்பிள்ளையின் சேமிப்புகளை நிதி நிறுவனங்கள் ஏமாற்றிக் கொண்டு ஓடிவிட்டதால் விரக்தியில் இருந்த மூதாட்டிக்கு களஞ்சியம் என்ற சுய உதவிக் குழுதான் நம்பிக்கையை கொடுத்தது.
தன்னை போன்ற ஏழை எளிய மக்களையும் அடித்தட்டு பெண்களையும் சிறு சிறு குழுக்களாக இயங்க வலியுறுத்தி தொடர் பிரச்சாரம் செய்தவர் சின்னப்பிள்ளை. வறுமை, கந்துவட்டி கொடுமை உள்ளிட்ட சமூக அவலங்களில் இருந்து மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக வெளியே வரக் காரணமும் சின்னப்பிள்ளைதான்.
கடந்த 2001 -ஆம் ஆண்டு ஸ்ரீ சக்தி விருதுக்கு பிறகுதான் இவரது பில்லுசேரி கிராமத்திற்கு சாலை வசதியும் பேருந்து வசதியும் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் குடிசை வீடுகளை கான்கிரீட் வீடுகளாகக் கட்டித் தருவதற்கு சின்னப்பிள்ளையே முன்னின்று முயற்சி மேற்கொண்டார்.
இப்படி ஊருக்கெல்லாம் ஓடி ஓடி உழைத்த சின்னப்பிள்ளை தனது மகன் சின்னதம்பியின் வீட்டில் ஒண்டிக் குடித்தனம் செய்து வருகிறார். தனக்கென இதுவரை சொந்த வீடு இல்லை என்பதுதான் வேதனைக்குரிய விஷயமாக உள்ளது. இதுகுறித்து சின்னப்பிள்ளை தனது வீடியோவில் கூறியிருப்பதாவது: இரண்டு ஆண்டுக்கு முன் ஒரு 10 பேர் என் வீட்டுக்கு வந்து மோடி திட்டத்துல வீடு கட்டித் தருவோம் என சொல்லிவிட்டு போனாங்க.
ஆனால் அது குறித்து எந்த தகவலும் வரவில்லை. ஒரு நாள் மேலூர் தாசில்தார் வந்து அப்பன் திருப்பதி பக்கத்துல வீடு கட்ட இடம் ஒதுக்கியிருக்குனு கூறி பட்டாவை கொடுத்தார்கள். அவங்க சொல்லி 2 ஆண்டுகளானது. ஆனாலும் வீடு கட்டி தரவே இல்லை. எனக்கு வீடு கட்டித் தாங்கன்னு நான் கேட்கவில்லை. அவர்களா வந்தாங்க, கொடுத்தாங்க, இப்ப எங்க போனாங்கன்னு தெரியலை.
மாத்தூர் தலைவரிடமும் போய் கேட்டேன். அவரும் பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் இன்னும் பணம் ஒதுக்கலை. அது ஒதுக்கினதும் வீடு கட்டி தரோம்னு சொன்னார். எனவே எனக்கு ஒரு வீடு கட்டி தர வேண்டும் என தமிழக அரசிடம் கண்ணீர் மல்க சின்னப்பிள்ளை கோரிக்கை விடுத்திருந்தார்.












Click it and Unblock the Notifications