"முதல்வருக்கு கருணை உள்ளம்.. எனது நெஞ்சார்ந்த நன்றி" உருகிய மதுரை மருத்துவ கல்லூரி டீன் ரத்னவேல்
மதுரை: சமஸ்கிருத மொழியில் உறுதிமொழி எடுத்த விவகாரத்தில் விசாரணைக்குப் பின்னர், மருத்துவக் கல்லூரி முதல்வராக மீண்டும் ரத்னவேல் பொறுப்பேற்றுக் கொண்டார்.
மதுரை மருத்துவக் கல்லூரியில் கடந்த சனிக்கிழமையன்று (ஏப்ரல் 30) முதலாம் ஆண்டு மாணவர்களை வரவேற்கும் நிகழ்ச்சி நடந்தது.
இந்த நிகழ்ச்சியின்போது, மாணவர்கள் மருத்துவ உடை அணிந்த பின்னர் 'ஹிப்போக்ரடிக்' உறுதிமொழியை வாசிக்க வேண்டும்.
சமஸ்கிருத உறுதிமொழி சர்ச்சை.. அன்றைய தினம் நடந்தது என்ன? மருத்துவக் கல்வி இயக்குநர் பரபர தகவல்
சமஸ்கிருத உறுதிமொழி
ஆனால், அதற்கு மாறாகச் சமஸ்கிருதத்தில் 'மகரிஷி சரக சபதம்' என்ற உறுதிமொழி எடுக்க வைக்கப்பட்டனர். இதுதொடர்பாக, தமிழ்நாடு மருத்துவக் கல்வி இயக்குநரகம் மூலம் மதுரை மருத்துவக் கல்லூரி முதல்வரிடம் விளக்கம் கேட்கப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகின. மருத்துவக் கல்லூரியின் மாணவர் சங்க நிர்வாகியின் தவறு காரணமாக இது நடந்ததாகக் கூறப்பட்டது. இதன் காரணமாகக் கல்லூரி முதல்வரைக் கட்டாயக் காத்திருப்பில் வைத்து மருத்துவக் கல்வி இயக்குநர் நாராயணபாபு உத்தரவிட்டுள்ளார்.
விசாரணை
இந்த விவகாரம் தொடர்பாக துறை ரீதியில் விசாரணை நடத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்காக மருத்துவக்கல்வி இயக்குநர் நாராயணபாபு தலைமையில், திருநெல்வேலி மருத்துவக்கல்லூரி முதல்வர் ரவிச்சந்திரன், துணை முதல்வர் சாந்தாராம் ஆகிய 3 பேர் கொண்ட குழுவும் அமைக்கப்பட்டது. இந்த விசாரணைக்குக் குழு கடந்த மே 3ஆம் தேதி ரத்தினவேல், பொறுப்பு முதல்வரும் துணை முதல்வருமான தனலெட்சுமி, மாணவர் பேரவை அமைப்பினரிடம் எழுத்துப்பூர்வ அறிக்கை பெற்றனர்.
விசாரணை
இணையத்தில் இருந்து மாணவர்கள் சமஸ்கிருத கருத்துக்கள் கொண்ட உறுதிமொழியைத் தவறுதலாகப் பதிவிறக்கம் செய்து, அதை உறுதி மொழியாக வாசித்துள்ளனர் என்றும் அதுவே இத்தவற்றுக்குக் காரணம் என்றும் இயக்குநர் நாராயணபாபு தெரிவித்தார். இதனிடையே நேற்று முன்தினம் மருத்துவக்கல்வி இயக்குநர் நாராயணபாபு ரத்னவேலிடம் நேரில் விசாரணை நடத்தினார்.
மீண்டும் டீன் பதவி
இந்நிலையில் நேற்று மருத்துவக் கல்லூரி முதல்வர் ரத்தினவேலுவின் பணியிட மாற்றம் செய்த உத்தரவை ரத்து செய்து சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் சட்டப்பேரவையில் அறிவிப்பு வெளியிட்டார். கொரானா காலத்தில் சிறப்பாக பணியாற்றியவர் என்றும் தவறுக்கு வருத்தம் தெரிவித்துவிட்டதால் முதலமைச்சரின் உத்தரவுப்படி மீண்டும் அதே பணியில் ஈடுபட உள்ளார் எனவும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்திருந்தார்.
எங்களுக்கு தெரியாது
இந்நிலையில், இன்று மதுரை மருத்துவக் கல்லூரி முதல்வராக மீண்டும் ரத்னவேல் பொறுப்பேற்றுக் கொண்டு தனது பணியைத் தொடங்கினார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய மதுரை மருத்துவக் கல்லூரி முதல்வர் ரத்னவேல், "முதலாம் ஆண்டு மருத்துவக் கல்லூரி மாணவர்கள் வரவேற்பு விழாவில் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்ட சமஸ்கிருத உறுதிமொழியை வாசித்தனர். நிர்வாகம், பேராசிரியர்களுக்குத் தெரியாமல் தாங்களாகவே வாசித்தனர்.
Recommended Video
முதல்வரின் கருணை உள்ளம்
தவறுதலாக நடந்ததாக மருத்துவத் துறை அமைச்சர் மற்றும் மருத்துவ கல்வி இயக்குநருக்கு வருத்தத்தைத் தெரிவித்தேன். மிகுந்த கருணை உள்ளத்தோடு என்னை மீண்டும் முதல்வராக அமர்த்தியுள்ளார் தமிழக முதல்வர். எனது பணியை அங்கீரகித்த தமிழக முதல்வருக்கும் மருத்துவத் துறை அமைச்சருக்கு நன்றி. இது எங்களுக்கு புதிய யுக்தியைக் கொடுத்துள்ளது. இன்னும் சிறப்பாக பணியை மேற்கொள்வோம்" என்று கூறினார்.