''நீட்டை ஒழிப்பதாக ஓட்டு வாங்கிவிட்டு.. மக்களிடம் கையெழுத்து வாங்கி திமுக நாடகம்'' -டாக்டர் சரவணன்
மதுரை: நீட் தேர்வை ஒழிப்பதற்கு முதல் கையெழுத்து போடுவோம் என்று சொன்ன திமுக, தற்போது நீட்டுக்கு எதிராக மக்களிடம் கையெழுத்து இயக்கம் என்ற கபட நாடகத்தை அரங்கேற்றி வருவதாக அதிமுக மருத்துவரணி இணைச் செயலாளர் டாக்டர் சரவணன் சாடியுள்ளார்.
மதுரையில் நடைபெற்ற அதிமுக 52ஆம் ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது;

பச்சை பொய்: ''திமுக 520 தேர்தல் வாக்குறுதியை கொடுத்தது. ஆனால் எதையும் நிறைவேற்றவில்லை. ஆனால் 100 சதவீதம் நிறைவேற்றிவிட்டடாக ஒரு முதலமைச்சரே பச்சை பொய் கூறுகிறார். திமுக ஆட்சியில் கடுமையான வேதனைகளை மக்கள் அனுபவித்து வருகிறார்கள். என்றைக்கு இந்த ஆட்சி வீட்டுக்குப் போகும், எடப்பாடியார் ஆட்சி என்றைக்கு தமிழகத்தில் மலரும் என்று மக்கள் நாட்களை எண்ணி வருகிறார்கள்.''
பா.சிதம்பரம் மனைவி நளினி: ''கடந்த 2010ம் ஆண்டில் திமுக அங்கம் வகித்த காங்கிரஸ் கூட்டணி ஆட்சி மத்தியில் இருந்த பொழுது தான் நீட் என்ற விஷ விதை விதைக்கப்பட்டது. எல்லா மாநிலங்களும் எதிர்த்த பொழுது நீதிமன்றத்தில், திமுக கூட்டணி கட்சியை சேர்ந்த முன்னாள் அமைச்சர் பா.சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரம் வாதாடி நீட்டை கட்டாயம் ஆக்கினார் என்பதை திமுக மறுக்க முடியுமா?''
காங்கிரஸ் விதைத்த விதை: ''நீட் தேர்வுக்கான முன்னெடுப்புகளை காங்கிரஸ் அரசு முன்னெடுத்த போது ,மத்திய சுகாதார அமைச்சராக குலாம் நபி ஆசாத்தும், இணை அமைச்சராக திமுகவை சேர்ந்த காந்திசெல்வனும் இருந்தார்கள். அதனை தொடர்ந்து மத்தியில் பாரதிய ஜனதா ஆட்சிக்கு வந்த பிறகு நீட்டை சட்டமாக்கிய போது, தமிழகத்திற்கு ஓராண்டு விலக்கு பெற்றுத் தந்தார் அம்மா. அதற்குப் பிறகு சட்டமாக்கப்பட்ட நீட்டை தவிர்க்க முடியாத காரணத்தினால் எல்லா மாநிலங்களும் அமல்படுத்தப்பட்ட போது தமிழகத்திலும் அது நடைமுறைக்கு வந்தது. ''
7.5% இட ஒதுக்கீடு: ''ஆனாலும் அம்மாவின் வழியில் எடப்பாடியார் தொடர்ந்து நீட்டுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொண்டார். சட்டமன்றத்தில் இரண்டு முறை நீட்டுக்கு எதிராக சிறப்பு தீர்மானத்தை நிறைவேற்றி அதை ஜனாதிபதி ஒப்புதலுக்கு அனுப்பினார். மேலும் நீட் தேர்வை எதிர்கொள்ள தமிழக அரசின் சார்பில் நீட் தேர்வு சிறப்பு பயிற்சி மையங்களை அமைத்தார். அதன் மூலம் அதிக அளவில் நீட் தேர்வில் தமிழக மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். மேலும் அரசு பள்ளி மாணவர்களின் மருத்துவ படிப்பை நனவாக்கும் வண்ணம் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டினை சட்டமாக இயற்றினார்.''
29 மாதங்கள்: ''இதன் மூலம் ஆண்டு தோறும் 660 அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவ படிப்பு பயன்பெற்றுள்ளனர். இதற்கு முன்பு அரசு பள்ளியில் வெறும் 6 மாணவர்கள் தான் மருத்துவ படிப்பு பெற்றனர். அதேபோல் தென் மாவட்டத்தின் தலைநகரம் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டினார். அதனை தொடர்ந்து ஒரே ஆண்டில் 11 மருத்துவக் கல்லூரி உருவாக்கினார். இதன் மூலம் தமிழகத்திற்கு கூடுதலாக 1,650 மருத்துவ இடங்களை உருவாக்கினார். ஆனால் இந்த 29 மாதத்தில் ஒரு மருத்துவக் கல்லூரியை கூட திமுக உருவாக்கவில்லை.''
ரத்து செய்ய முடியவில்லை: ''கடந்த சட்டமன்றத் தேர்தலில் போது நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வை ஒரே கையெழுத்திட்டு ரத்து செய்வோம் அந்த ரகசியம் எங்களுக்கு தெரியும் என்று ஸ்டாலினும் அவரது மகன் உதயநிதியும் பிரச்சாரம் செய்தனர். இதனை தொடர்ந்து ஆட்சிக்கு வந்த திமுக, எடப்பாடியார் நீட்டுக்கு எதிராக சட்டமன்றத்திற்கு என்ன தீர்மானம் நிறைவேற்றினாரோ, அதை நிறைவேற்றினார்களே தவிர வேறு எதையும் செய்யவில்லை. இந்த 29 மாதத்தில் நீட்டை திமுக அரசால் ரத்து செய்ய முடியவில்லை.''
2.5% இட ஒதுக்கீடு என்னாச்சு?: ''இதன் மூலம் மாணவர்கள் தற்கொலை எண்ணிக்கை அதிகரித்துத்தான் வருகிறது. அதேபோல் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 7.5 சதவீதத்துடன் சேர்த்து கூடுதலாக 2.5 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கப்படும் என்று தேர்தல் வாக்குறுதியில் கூறினார்கள். இதுவரை 29 மாதங்கள் ஆகிறது அதை செயல்படுத்தபடவில்லை. நீட் தேர்வு ரத்து பற்றி மக்கள் திமுகவுக்கு எதிராக கேள்வி கணைகளை எழுப்பி வருகிறார்கள். இதை திசை திருப்பும் வகையில், தங்களின் தவறை மறைக்க முதலில் உண்ணாவிரதம் இருந்தார்கள்.''
''தற்போது 50 நாட்களில் 50 லட்சம் பேர்களிடம் நீட் தேர்வு ரத்து குறித்து கையெழுத்தை வாங்க திமுக கபட நாடகத்தை அரங்கேற்று வருகிறது.
இந்த நாடகத்தை மக்கள் ஒருபோதும் நம்ப மாட்டார்கள்.''












Click it and Unblock the Notifications