கொரோனா சிகிச்சை மருந்து தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை தேவை - டாக்டர் சரவணன் எம்எல்ஏ
மதுரை: கொரோனா நோய்க்கு ஐ.சி.எம்.ஆர் பரிந்துரைத்துள்ள உயிர்காக்கும் மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதால் நோயாளிகளை உடனடியாக குணப்படுத்த அனைத்து மருந்துகளும் அதிகமாக கொள்முதல் செய்யப்பட்டு தட்டுப்பாடின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சுகாதாரத்துறை செயலர் ஜெ.ராதாகிருஷ்ணனிடம் திருப்பரங்குன்றம் தொகுதி எம்எல்ஏ டாக்டர் சரவணன் மனு அளித்திருக்கிறார்.
கொரோனா சிகிச்சை முகாம்களை ஆய்வு செய்ய மதுரை வந்த தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ஜெ. இராதாகிருஷ்ணன் ஐஏஎஸ் அவர்களை திருப்பரங்குன்றம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர்.பா.சரவணன் எம்எல்ஏ இன்று நேரில் சந்தித்து மனு கொடுத்தார்.
அந்த மனுவில், இந்தியாவில் ஜனவரி மாதம் முதல் ஐந்து மாதங்களாக கொரோனா வைரஸ் தொற்று மக்களிடம் பரவி, இன்று தமிழகத்தில் மூன்றாம் நிலையான சமூகப்பரவல் ஏற்பட்டு நோய் தொற்று அதிகரித்து கொண்டு வருகிறது.
இந்நிலையில் தமிழக அரசும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துக்கொண்டு தான் வருகிறது. ஆனால் தற்பொழுது சென்னையைப் போன்றே மதுரையிலும் நோய்த்தொற்று மிகவேகமாக அதிகரித்துக்கொண்டே செல்கிறது. அதன் காரணமாக மதுரை மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தலின்படி பல தனியார் மருத்துவமனைகள் முன்வந்து கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வருகின்றன.
கொரோனாவைப் பார்த்து பீதி வேண்டாம்... ஓராண்டு மாஸ்க் அணிவது கட்டாயம் என்கிறார் ராதாகிருஷ்ணன்
இருப்பினும் கொரோனா நோய்க்கு ஐ.சி.எம்.ஆர் பரிந்துரைத்துள்ள REMDISIVIR, TOCILIZUMAB , FAVIPIRAVIR போன்ற மிக முக்கிய உயிர் காக்கும் மருந்துகள் மிகுந்த தட்டுப்பாடாகவே இருக்கின்றன. அவ்வாறு இருக்கும் பட்சத்தில் தமிழக அரசு கொண்டு வந்துள்ள கேர் சென்டருக்கும் மருத்துவமனைக்கும் சிகிச்சை அளிப்பதில் பெருமளவு வித்தியாசம் இன்றி போக வாய்ப்புள்ளது.
எனவே தீவிர நோயாளிகளை மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கும் நோக்கம் முழுவதுமாக நிறைவேறவும், நோயாளிகளை உடனடியாக குணப்படுத்தவும் மேற்கூறிய அனைத்து மருந்துகளும் அதிகமாக கொள்முதல் செய்யபட்டு தட்டுப்பாடு இன்றி கிடைக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஒரு மருத்துவராகவும், சட்டமன்ற உறுப்பினராகவும் கேட்டுக்கொள்கிறேன் என்று டாக்டர் சரவணன் தனது மனுவில் தெரிவித்துள்ளார்.