மதுரைக்கு வந்த மகிழ்ச்சி செய்தி.. விரைவில் மெட்ரோ ரயில் திட்டம்.. சாத்தியக்கூறு அறிக்கை ஒப்படைப்பு!
மதுரை: மதுரை மெட்ரோ ரயிலுக்கான "நகல் சாத்தியக் கூறு அறிக்கை" சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டில் திமுக ஆட்சி அமைந்ததில் இருந்து தென் மாவட்டங்களின் தொழில், கல்வி மற்றும் பாரம்பரிய வளர்ச்சிக்காக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் கலைஞர் நூலகம், டைடல் பார்க், ஜல்லிக்கட்டு அரங்கம் என்று பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதனால் மதுரையின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் வகையில் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பாக மதுரையில் அதிகரித்து வரும் வாகன பயன்பாட்டால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க சாலை வசதிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதிகரிக்கும் போக்குவரத்து நெரிசல்
அதில் காளவாசல், சொக்கிக்குளம் ஆகிய பகுதிகளில் புதிய மேம்பாலங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதேபோல் தல்லாகுளம் முதல் கோரிப்பாளையம் சந்திப்பு வரை புதிய மேம்பாலம் கட்டுவதற்கான திட்டப் பணிகள் நடந்து வருகின்றன. வைகை நதியின் இரு ஆற்றங்கரைகளிலும் புதிதாக 2வழி சாலை வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

பொதுமக்கள் கோரிக்கை
மதுரையில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலை குறைக்க அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டும் நெரிசல் குறைந்தபாடில்லை. இதனால் மக்கள் சரியான நேரத்தில் சரியான இடத்திற்கு செல்ல மெட்ரோ ரயில் சேவை கொண்டு வர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்து வந்தனர்.

மதுரை மெட்ரோ ரயில்
இந்த நிலையில் சட்டப்பேரவைக் கூட்டத்தொடரின் போது மதுரையில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்துவதற்கான முழுமையான சாத்தியக்கூறுகள் ஆராயும் ஆய்வறிக்கை தயார் செய்யப்படும் என்று நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்தார். இதனால் மெட்ரோ ரயில் திட்டத்தை மதுரை மாநகர் மட்டுமல்லாது உசிலம்பட்டி, மேலூர், திருமங்கலம் உள்ளிட்ட ஊரகப் பகுதிகளிலும் கொண்டு வர வேண்டும் என்று மக்கள் கோரிக்கை வைத்தனர்.

அறிக்கை ஒப்படைப்பு
இதனைத்தொடர்ந்து மதுரையில் மெட்ரோ திட்டம் கொண்டு வருவதற்கான சாத்தியக் கூறுகள் குறித்து ஆய்வு செய்வதற்கு பாலாஜி ரயில் ரோடு சிஸ்டம்ஸ் நிறுவனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டது. இந்த நிலையில் ஆய்வுப் பணிகள் முடிந்து, மதுரை மெட்ரோ ரயிலுக்கான "நகல் சாத்தியக் கூறு அறிக்கை" சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் வசம் தரப்பட்டுள்ளது. இதன் இறுதி அறிக்கை விரைவில் தமிழக அரசிடம் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சு.வெங்கடேசன் ட்வீட்
இதுகுறித்து மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தனது ட்விட்டர் பக்கத்தில், மதுரைக்கு இன்னொரு மகிழ்ச்சியான செய்தி. மதுரை மெட்ரோ ரயிலுக்கான "நகல் சாத்தியக் கூறு அறிக்கை" (Draft Feasibility Report) சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் வசம் தரப்பட்டுள்ளது. விரைவில் இறுதி அறிக்கை தமிழக அரசிடம் தரப்படும். மக்களின் நீண்ட நாள் கோரிக்கை. விரைவில் நிறைவேறட்டும் என்று பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications