அண்ணன் செல்லூர் ராஜூ சொல்றதை எல்லாம் கேட்டோமா சிரித்தோமானு இருக்கணும்! நோ சீரியஸ்! துரை வைகோ கிண்டல்
மதுரை: அண்ணன் செல்லூர் ராஜு சொல்வதெல்லாம் கேட்டு சிரித்துக் கொண்டு அப்படியே விட்டுவிட வேண்டும் என மதிமுக கழகச் செயலாளர் துரை வைகோ கிண்டல் செய்துள்ளார்.
Recommended Video
மதிமுக மாமன்ற உறுப்பினர் இல்ல விழாவில் கலந்து கொள்வதற்காக மதுரை வந்திருந்தார் துரை வைகோ. அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
எந்த இயக்கங்களில் சலசலப்பு இல்லாமல் இருக்கிறது. அரசியல் கட்சிகள் என்றால் சலசலப்பு இருக்கத்தான் செய்யும். முறையாக பொதுக் குழுவை கூட்டி பொதுக்குழு உறுப்பினர்கள் 1500 பேரில் 1300 க்கும் மேற்பட்டோர், இரண்டு தணிக்கைக் குழு உறுப்பினர்கள், தலைமைக் கழக செயலாளர் என அனைவரையும் கூட்டி ஒருமனதாக தேர்வு செய்தனர்.

ஒழுங்கு நடவடிக்கை
அதேபோல கட்சிக்கு இழுக்கு ஏற்படும் வகையில் செயல்படும் நபர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க பொதுச் செயலாளருக்கு அதிகாரம் வழங்கப்பட்டது. என்னை தேர்ந்தெடுக்கப்பட்டது தொடர்பாக நிறைய கேள்விகளுக்கு பதில் சொல்லியாகிவிட்டது. கட்சியை பலப்படுத்துவதற்காக சென்னையில் இருந்து கன்னியாகுமரி வரை மாவட்ட கூட்டங்களை கூட்டுவது, கட்சியின் அமைப்பு தேர்தல் நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது. அது தொடர்பான பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.

இளைஞர்கள் கட்சி
அதேபோல கட்சியை பலப்படுத்த இளைஞர்களை கட்சியில் இணைப்பது தொடர்பாக மாவட்டம்தோறும் சுற்றுப்பயணம் செய்வது என முடிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல கட்சியின் பலம், பலவீனம் போன்றவற்றை ஆராய்ந்து என்னென்ன பணிகளை எப்படி செய்ய வேண்டும் என்பது குறித்து மாவட்ட அளவில் ஆலோசனை நடைபெற்று வருகிறது.

வேர்களைத் தேடி
வேர்களைத் தேடி என்ற தலைப்பில் இயக்கத்தின் அனைத்து தொண்டர்களையும் சந்தித்து கட்சியை பலப்படுத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது. அடுத்த மாதம் முதல் கட்சியை பலப்படுத்த மாவட்ட கூட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.

பாஜக அண்ணாமலை
பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை தமிழக அரசு மீது தொடர்ச்சியாக கூறி வரும் புகார் குறித்த கேள்விக்கு, தமிழக பாஜக தலைவராக நியமிக்கப்பட்டுள்ள அண்ணாமலை அவரது பணியை செய்து வருகிறார். அவர் எதிர்க்கட்சி என்பதால் குறைகளைதான் சொல்ல முடியும். அதைத்தான் செய்து வருகிறார்.

உரிய ஆதாரம்
ஆனாலும் சொல்லக் கூடிய குறைகளுக்கு உரிய ஆதாரம் இருக்க வேண்டும். எதிர்க்கட்சியைச் சார்ந்தவர்கள் குறை நிறைகளை முறையாக சொல்ல வேண்டும். தற்போது தமிழக முதல்வர் துபாய் சென்று இருக்கிறார். வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்காக வெளிநாடு சென்றிருக்கிறார். அதன் மூலம் தமிழகத்தில் தொழிற்சாலையில் உருவாக்கி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு தருவதற்காக சென்றிருக்கிறார்.

அதிமுக ஆட்சி
அதனையும் அவர் கொச்சைப்படுத்தி சொல்லி இருப்பது வேதனையான விஷயம். கடந்த அதிமுக ஆட்சியில் 438 கோடி ரூபாய் மதிப்பில் பேருந்து நிலையம் கட்டுவது தொடர்பான மிகப் பெரிய ஊழல் நடைபெற்றுள்ளது. இதுபோன்ற பல ஊழல் குற்றச்சாட்டுகள் அதிமுக மீது தொடர்ந்து வந்துள்ளது.

தோழமை கட்சி
அவர்களுடைய தோழமைக் கட்சியான அண்ணாமலை அது பற்றி கூறுவது கிடையாது. தற்போது தமிழகத்தில் நடைபெற்று வரக் கூடிய திமுக அரசு சிறப்பாக செயல்பட்டதால் தான் நடந்து முடிந்த ஊரக மற்றும் நகர்ப்புற தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது. அது ஒரு நல்லாட்சிக்கான சான்றிதழாக தான் பார்க்க வேண்டியுள்ளது.

திமுக வாக்குறுதிகள்
திமுக அரசு தேர்தலின்போது அறிவித்த வாக்குறுதிகளில் 500க்கும் மேற்பட்ட வாக்குறுதிகளில் 200-க்கும் மேற்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றி உள்ளனர். அதுமட்டுமல்ல திமுக ஆட்சிக்கு வந்த காலத்தில் கொரோனாவின் இரண்டாவது அலை மிகக் கடுமையாக இருந்த சூழ்நிலை, அதுமட்டுமல்லாது வெள்ளம் ஏற்பட்டு அதனால் கோடிக்கணக்கான ரூபாய் இழப்பு ஏற்பட்ட சூழலில் ஆட்சிக்கு வந்தனர்.

10 ஆண்டு கால அதிமுக ஆட்சி
அவை அனைத்தையும் சீராக வெற்றிகரமாக செயல்படுத்தினார். 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியின் சீர்கேட்டால் கஜானா முழுமையாக காலியாக இருந்த சூழ்நிலையில் திமுக பதவியேற்றது. ஒன்பது மாத ஆட்சியில் சிறந்த ஒரு சிறப்பான ஆட்சியை திமுக வழங்கியுள்ளது. அதற்காகத்தான் நகர்ப்புற தேர்தலில் மக்கள் நற்சான்றிதழ் வழங்கியுள்ளனர்.

செல்லூர் ராஜூ
பாஜக தலைவர் அண்ணாமலை சொல்லக்கூடிய புகார்களை சாதாரணமாக எடுக்கக் கூடாது. அவற்றைக் கவனிக்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜ் கூறியது பற்றி கேட்டதற்கு, அண்ணன் செல்லூர் ராஜூ சொல்வதை எல்லாம் கேட்டுக் கொண்டு சிரித்துக் கொள்ள வேண்டும். சீரியஸாக எடுத்துக் கொள்ளக் கூடாது என்றார்.












Click it and Unblock the Notifications