மதுரையிலேயே தொகுதிப் பங்கீட்டை முடிக்க அதிமுக - பாஜக பிளான்.. ஹோட்டலில் திரண்ட NDA தலைகள்!
மதுரை: தமிழக சட்டசபை தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றன. தேசிய ஜனநாயக கூட்டணியின் 2வது கட்ட பிரசார கூட்டம் இன்று மதுரையில் நடைபெறுகிறது. பிரதமர் மோடி தலைமையில் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட கூட்டணி தலைவர்கள் பங்கேற்கின்றனர். இதற்கிடையே, இன்று அதிமுக - பாஜக இடையே தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
பிரதமர் மோடி 2 நாள் தமிழக பயணமாக நேற்று சென்னை வந்தார். அதன் பிறகு பிரதமர் நரேந்திர மோடி, கார் மூலம் கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு புறப்பட்டுச் சென்றார். இன்று காலையில் புதுச்சேரி புறப்பட்டுச் சென்றுள்ள பிரதமர் மோடி. அதன்பின்னர் அங்கிருந்து, தஞ்சாவூர் வந்து அங்கிருந்து மதுரை வருகிறார். தொடர்ந்து திருப்பரங்குன்றம் கோயிலுக்குச் சென்று வழிபடுகிறார்.

மதுரையில் இன்று மாலை நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார். பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி, அன்புமணி, டிடிவி தினகரன், ஜான் பாண்டியன், ஏ.சி.சண்முகம், பாரிவேந்தர் உள்ளிட்ட கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பங்கேற்கின்றனர். இதையடுத்து, மதுரையில் இன்று கூட்டணி தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
திமுக கூட்டணியில் புயல் வேகத்தில் கூட்டணி பங்கீடுகள் நடைபெற்று வரும் நிலையில், அதிமுகவில் கூட்டணியை ஓரளவு உறுதி செய்த பிறகு தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையே நடத்தவில்லை. அன்புமணி தலைமையிலான பாமக, அமமுக மற்றும் சிறிய கட்சிகளை பாஜகவே முன்னின்று பேசி அழைத்து வந்தது.
அதேபோல ராமதாஸ் உடனும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. ஆனால் கூட்டணி குறித்து எடப்பாடி பழனிசாமி எந்தக் கட்சியுடனும் பேச்சுவார்த்தை நடத்தவில்லை. இதனால் கடந்த வாரம் சென்னை வருவதாக இருந்த மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தனது பயணத்தை ரத்து செய்திருந்தார். இந்நிலையில்தான் பிரதமர் மோடி, 2 நாள் பயணமாக நேற்று சென்னை வந்துள்ளார். இன்று மதுரை பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்.
இந்தநிலையில், எடப்பாடி பழனிசாமி, வேலுமணி, தங்கமணி, கே.பி.முனுசாமி ஆகியோர் இன்று மதுரை வந்துள்ளனர். மத்திய அமைச்சர் பியூஸ் கோயலை சந்தித்துப் பேசி வருகின்றனர். அப்போது தொகுதிப் பங்கீடு குறித்து ஆலோசனை நடத்துகின்றனர். டிடிவி தினகரன், அன்புமணி ஆகியோரும் மதுரை வந்துள்ள நிலையில் அவர்களுடனும் இன்று தொகுதி பங்கீடு ஆலோசனை நடத்தப்படுகிறது.
இன்று இரவும், கூட்டணி கட்சிகளுடன் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையை நடத்துகின்றனர். வரும் மார்ச் 6 ஆம் தேதிக்குள் கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளும் போட்டியிடும் தொகுதிகளின் எண்ணிக்கையை அறிவிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications