இலவச மின் இணைப்பு.. மதுரை மின்வாரிய அதிகாரிகளுக்கே ஷாக் தந்த விவசாயி.. அசிங்கமா போச்சு
மதுரை: மதுரை மாவட்டம் மேலூரில் விவசாய இலவச மின் இணைப்புக்கு ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மின்வாரிய பொறியாளர் மற்றும் ஆய்வாளர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
விவசாய மின் இணைப்பு என்பது தமிழகத்தில் சாதாரண மற்றும் சுயநிதிப் பிரிவில் வழங்கப்படுகிறது. இதில், சாதாரணப் பிரிவில் மின்சாரம், மின் வழித்தட செலவு இலவசம் ஆகும். சுயநிதி பிரிவில் மின்சாரம் மட்டும் இலவசம், மின் வழித்தட செலவை விவசாயிகள் ஏற்க வேண்டும். சுயநிதிப் பிரிவில் மின் இணைப்பு பெற ரூ.10 ஆயிரம், ரூ.25 ஆயிரம், ரூ.50 ஆயிரம் என 3 வகைகளில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

அதே நேரம் தட்கல் முறையில் மின் இணைப்பு பெற 5 குதிரை திறன்(ஹெச்.பி) உள்ள மின் மோட்டாருக்கு இணைப்பு வழங்க ரூ.2.50 லட்சம், 7.50 குதிரைதிறனுக்கு ரூ.2.75 லட்சம், 10 குதிரை திறனுக்கு ரூ.3 லட்சம், 15 குதிரை திறனுக்கு ரூ.4 லட்சம் என கட்டணம் மின் வாரியத்தில் வசூலிக்கப்படுகிறது.
இந்நிலையில் விவசாயிகளுக்கு இலவச மின்சாரத்தை பொறுத்தவரை ஒவ்வொரு ஆண்டும், எவ்வளவு பேருக்கு இலவச மின்சாரம் வழங்கலாம் என்பதை தமிழக அரசுதான் தீர்மானிக்கும். அதற்குத் தகுந்தவாறு, விண்ணப்பங்களின் பதிவு அடிப்படையில் இலவச மின் இணைப்பு வழங்கப்படும். தேவைப்படும் சான்றுகளுடன், சம்பந்தப்பட்ட பகுதியின் மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும். அங்கு, பதிவுக் கட்டணமாக 50 ரூபாய் செலுத்தினால், பதிவு எண் மற்றும் தேதி குறிப்பிடப்பட்ட உரிய ஒப்புகை அட்டை வழங்குவார்கள். பதிவு மூப்பு அடிப்படையில், இலவச மின்சார இணைப்பு வழங்கப்படும்.
இந்நிலையில் மதுரை மாவட்டம் மேலூர் சேக்கிப்பட்டி அருகே ஆலம்பட்டியை சேர்ந்தவர் ராஜேஷ் என்ற விவசாயி தனது நிலத்தில் உள்ள மோட்டார் பம்பு செட்டுக்கு இலவச மின் இணைப்பு வழங்க கேட்டு, மேலூரில் திருவாதவூர் ரோட்டில் உள்ள மேலூர் மேற்கு வட்ட மின்வாரிய அலுவலகத்தில் விண்ணப்பித்து இருந்தார். இலவச மின் இணைப்பு வழங்க ரூ.20 ஆயிரம் லஞ்சம் தரவேண்டும் என்றும், அதில் முன்பணமாக ரூ.10 ஆயிரம் தருமாறு ராஜேஷிடம் கேட்டதாக கூறப்படுகிறது.
லஞ்சம் கொடுக்க விரும்பாத ராஜேஷ், மதுரையில் உள்ள லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் அளித்தார். லஞ்ச ஒழிப்பு போலீசாரின் ஆலோசனைப்படி, ரசாயன பவுடர் தடவிய ரூ.10 ஆயிரத்துக்கான நோட்டுகளுடன், மேலூரில் மேற்கு வட்ட மின்வாரிய அலுவலகத்துக்கு ராஜேஷ் சென்றார்.
அங்கு உதவி செயற்பொறியாளர் ஓசானம் ஜோனி மற்றும் மின் வணிக ஆய்வாளர் பாண்டியராஜன் ஆகியோரிடம் லஞ்ச பணத்தை கொடுத்தார். அப்போது அங்கு மறைந்து நின்றிருந்த மதுரை லஞ்ச ஒழிப்பு போலீசார் , ஓசானம் ஜோனி, பாண்டியராஜன் ஆகிய இருவரையும் கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர். மேலும் இருவரிடமும் லஞ்ச ஒழிப்பு போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications