மிட்டாய் காட்டி இழுக்குறாங்க.. ஓபிஎஸ் புரட்சிப் பயணம் போகும்போது இருக்கு.. ஆர்பி உதயகுமார் தாக்கு!
மதுரை : பெரியகுளத்தில் தங்கி ஆள் பிடிக்கும் வேலையை ஓபிஎஸ் செய்து வருகிறார். என்ன செய்தாலும் இறுதி வெற்றி பழனிசாமிக்குதான் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
அதிமுக தலைமை அலுவலகத்தில் அத்துமீறிய ஓபிஎஸ் மீது திருட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக ஈபிஎஸ் அணியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விமர்சித்திருந்தார்.
அதற்கு பதில் அளித்த ஓ.பன்னீர்செல்வம், தலைமைக் கழகம் எனது வீடு. நான் திருடிச் சென்று விட்டேன் என்று சொல்கிறார்கள். என் வீட்டில் நான் திருடுவேனா? எனக் கேள்வி எழுப்பியிருந்தார்.

ஜெயலலிதா கனவை நனவாக்கியவர்
இந்தநிலையில் மதுரையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்களைச் சந்தித்தார் .அப்போது அவர் பேசுகையில், ஜெயலலிதாவின் கனவுகளை எல்லாம் எடப்பாடி பழனிசாமி நனவாக்கியவர், எவ்வளவோ சோதனைகளை சாதனையாக மாற்றியவர் எடப்பாடி பழனிசாமி. சுயநலமிக்கவர்களிடம் இருந்து அதிமுகவை மீட்டவர். அதிமுகவின் கிளை கழகம் முதல் தலைமை கழகம் வரை ஒட்டுமொத்த அதிமுகவும், அதிமுக தொண்டர்களும் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக உள்ளனர்.

எத்தனை முறை சொன்னாலும்
எடப்பாடி பழனிசாமிக்கு 99 சதவீத அதிமுகவினர் ஆதரவு தெரிவித்து உள்ளனர். 66 அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களில் 63 அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு அளித்துள்ளனர். ஓ.பன்னீர்செல்வத்துக்கு எத்தனை முறை சொன்னாலும் புரியாததை போல அதிமுக தொண்டர்கள் தன்னைத் தான் ஆதரிக்கிறார்கள் என ஓபிஎஸ் வாய்ப்பாடு பாடி வருகிறார்.

பண்பை இழந்துவிட்டார்
அதிமுகவுக்கு தலைமையேற்கும் பண்பை ஓ.பி.எஸ் இழந்து விட்டார். சொந்த வீட்டில் திருடினாலும் திருட்டு திருட்டு தான். அதிமுக அலுவலகம் தொண்டர்களின் சொத்து, அப்படிப்பட்ட சொத்தை ஓபிஎஸ் திருடி இருக்கிறார். ஓபிஎஸ் பொதுக்குழுவவில் பங்கேற்க முடியாததற்கு காரணம் போக்குவரத்து நெரிசல் என குழந்தைத்தனமான பதிலை சொல்கிறார்.

நாடகப் பேச்சு
பெரியகுளத்தில் தங்கி தனக்கு ஆட்கள் பிடிக்கும் வேலையை ஓபிஎஸ் செய்து வருகிறார். என்ன நடந்தாலும் இறுதி வெற்றி எடப்பாடி பழனிசாமிக்கு தான். ஓபிஎஸ் நிராயுத பாணியாக இருப்பதால் அவ்வப்போது புலம்பி வருகிறார். அதிமுக தலைமை பதவி மீது எனக்கு ஆசையில்லை என ஓபிஎஸ் நாடகப் பேச்சாக பேசி வருகிறார். ஓபிஎஸ்ஸின் நாடக பேச்சு மக்களிடம் எடுபடாது.

இறுதி அத்தியாயம்
அதிமுகவையும், அதிமுக அரசையும் வலுப்படுத்த எடப்பாடி பழனிசாமி எடுத்த நடவடிக்கைகளுக்கு ஓ.பன்னீர்செல்வம் முட்டுக்கட்டையாக இருந்தார். ஈபிஎஸ் அதிமுகவுக்கு பலமாக இருக்கிறார், ஓபிஎஸ் பலவீனமாக இருக்கிறார். ஓ.பன்னீர்செல்வம் தனது இறுதி அத்தியாயத்தில் இருக்கிறார்.

சித்து விளையாட்டு
2001ல் ஓபிஎஸ் முதலமைச்சர் ஆனது உழைப்புக்கு கிடைத்தது என சொல்கிறார். ஆனால் எதனால் ஓபிஎஸ்க்கு முதல்வர் பதவி கிடைத்தது என ஒன்றரைக் கோடி தொண்டர்களுக்கு தெரியும், திரும்ப திரும்ப ஓபிஎஸ் முதலமைச்சர் ஆனது குறித்த சித்து விளையாட்டு என்ன என்பது யாருக்கும் தெரியவில்லை. சசிகலா, டி.டி.வியை அழைத்ததன் மூலம் ஓபிஎஸ்ஸின் நிலைப்பாட்டு மாற்றத்திற்கு என்ன காரணம் என தெரியவில்லை.

மிட்டாய் காட்டி
எம்.எல்.ஏ அய்யப்பன் ஓபிஎஸ்ஸிடம் சென்றது தவறான வழி. குழந்தையை மிட்டாயை காண்பித்து அழைத்துச் செல்வது போல எம்.எல்.ஏ அய்யப்பன் அழைத்து செல்லப்பட்டுள்ளார். காலம் வரும், உண்மை நிலவரத்தை ஓபிஎஸ் பக்கம் உள்ளவர்கள் அறிவார்கள். உண்மையான நிலவரத்தை ஓபிஎஸ் புரட்சிப் பயணம் செல்லும் போது தான் அறிவார். ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஒரு விதமான பதட்டம் இருக்கத்தான் செய்கிறது. ஓபிஎஸ் புலி வருகிறது எனச் சொல்லி வருகிறார், அது புலியா? பூனையா? என்பது பின்னரே தெரிய வரும்" எனத் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications