மதுரையில் மாஜி ராணுவ வீரர் சரமாரி துப்பாக்கி சூடு.. சமாதானம் செய்யப்போனவர் வயிற்றில் பாய்ந்த குண்டு!
மதுரை: மதுரை அருகே திருமங்கலம் பகுதியில் பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சனையில் முன்னாள் ராணுவ வீரர் துப்பாக்கியால் ஒருவர் சுட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. துப்பாக்கியை வைத்து மிரட்டிய போது, திடீரென முன்னாள் ராணுவ வீரர் சரமாரியாக சுடத் தொடங்கியுள்ளார். இதில் மோதலை விளக்க சென்ற ஒருவரும், அருகில் விளையாடி கொண்டிருந்த சிறுவனுக்கும் காயம் ஏற்பட்டுள்ளது.
மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்த கூட கோவில் பாறைகுளம் பகுதியைச் சேர்ந்தவர் மாரிசாமி. முன்னாள் ராணுவ வீரர் இவர், அதே பகுதியில் பைனான்ஸ் தொழில் செய்து வந்துள்ளார். இந்த சூழலில், அதே பகுதியைச் சேர்ந்த உறவினரான மணிகண்டன் என்பவருக்கு வட்டிக்கு பணம் கொடுத்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையில் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக பிரச்சனை இருந்துள்ளது.

இந்நிலையில் முன்னாள் ராணுவ வீரர் மாரிச்சாமிக்கும், உறவினர் மணிகண்டனுக்கும் இன்று காலையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் வாக்குவாதம் கைகலப்பான நிலையில் மாரிசாமி கையில் வைத்திருந்த கைத்துப்பாக்கியை எடுத்து மணிகண்டனை மிரட்ட தொடங்கி இருக்கிறார். அப்போது ஏதும் அசம்பாவிதம் நடந்துவிடக் கூடாது என்று மணிகண்டனின் சகோதரர் உதயகுமார் சமாதானம் செய்ய சென்றுள்ளார்.
அப்போது மாரிசாமி கையில் வைத்திருந்த துப்பாக்கியால் ஆவேசமான சுட்டுள்ளார். அப்போது துப்பாக்கி குண்டு உதயகுமாரின் வயிற்றுப் பகுதியில் பாய்ந்துள்ளது. மேலும் சரமாரியாக மாரிசாமி சுட்டபோது, அருகில் விளையாடிக் கொண்டிருந்த கிஷோர் என்ற 14 வயது சிறுவனான பள்ளி மாணவனும் தோள்பட்டையில் காயம் ஏற்பட்டுள்ளது.
இதன்பின் உடனடியாக அருகில் இருந்தவர்கள் இருவரையும் மீட்டு திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு உதயகுமாருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். பள்ளி மாணவன் லேசான காயத்துடன் தப்பித்தார். இதனால் அந்த பகுதியே பரபரப்பாகியது.
இதனைத் தொடர்ந்து உடனடியாக போலீசாருக்கு அப்பகுதி மக்கள் தகவல் கொடுத்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த பாறைகுளம் போலீசார், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து மாரிசாமி இடம் விசாரணை செய்து வருகின்றனர். மேலும் மாரிச்சாமி வைத்திருந்தது சிறிய ரக துப்பாக்கியா அல்லது ஏர்கன் வகையை சேர்ந்ததா என்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications