வருமான வரி துறை பெயரை சொல்லி.. வாழ்நாள் முழுக்க செட்டில் ஆகும் அளவுக்கு வருமானம் பார்த்த விக்னேஷ்
மதுரை: மதுரை, திண்டுக்கல், தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள தொழில் அதிபர்களுக்கு வருமான வரி அதிகாரி என்று ஃபோனில் அழைக்கும் விக்னேஷ்குமார் பல லட்சம் கறந்துள்ளார். வருமான வரித்துறையில் மாற்று டிரைவராக சில நாள் வண்டி ஓட்டியவர் வாழ்நாள் முழுக்க செட்டில் ஆகும் அளவுக்கு வருமானம் பார்த்துள்ளார்.
வருமான வரி அதிகாரி, அமலாக்கத்துறை அதிகாரி, சிபிஐ அதிகாரி என்று யார் சொன்னாலும் நம்பாதீர்கள். அப்படி யாராவது உங்களை பணம் கேட்டு மிரட்டினால் உடனடியாக புகார் அளிப்பது நல்லது. சிலர் வருமான வரி அதிகாரி, அமலாக்கத்துறை அதிகாரி, சிபிஐ அதிகாரி என்று பொய் சொல்லி போலி ஐடி கார்டுகளை உருவாக்கி சுகபோமாக வாழ்ந்து வருகிறார்கள். தொழில் அதிபர்களை மிரட்டி பணம பறிக்கும் இந்த வகை ஆட்களை கண்டுபிடிக்க ஒரே வழி, தலைமை அலுவலகத்திற்கோ அல்லது குறிப்பிட்ட அலுவலகத்திற்கோ அழைத்து உண்மையை அறிவது தான் சரியாக இருக்கும். ஏனெனில் திண்டுக்கல்காரர் ஒருவர் வருமான வரித்துறை மேல் பழிபோட்டு வசூல் வேட்டை நடத்தி உள்ளார். கடைசியில் உண்மை தெரிய வந்துள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் நாட்டாண்மைக்கார தெரு பகுதியைச் சேர்ந்த 40 வயதாகும் விக்னேஷ்குமார், மதுரை நகரி பகுதியில் உள்ள மறுவாழ்வு மையத்தில் வேலை செய்து வந்தார். நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலின்போது, மாற்று டிரைவராக வருமானவரி துறையின் புலனாய்வு பிரிவில் வேலை செய்திருக்கிறார். அதன்பின்னர் தென்மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் தொழில் அதிபர்கள், வணிக நிறுவனங்களில், தன்னை வருமானவரி அதிகாரி என்று கூறி அறிமுகமாகி இருக்கிறார்.
இந்த பழக்கத்தை வைத்து, மதுரை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் பல தொழில் அதிபர்கள், நிறுவன உரிமையாளர்களிடம் வருமானவரித்துறை சோதனை வருவதாகவும், எனக்கு பணம் கொடுத்தால் அந்த நடவடிக்கையை தடுத்து நிறுத்துவதாகவும் கூறி மிரட்டி உள்ளார். இதனால் பயந்து போன தொழில் அதிபர்களிடம் பணத்தை வசூலித்து மோசடி செய்துள்ளார். இதற்கிடையே மதுரை விளக்குத்தூண் பகுதியில் உள்ள நகைக்கடைகளிலும் போலி வருமான வரி அதிகாரி விக்னேஷ்குமார் மோசடியில் ஈடுபட்டுள்ளார்.
இது தொடர்பாக வருமானவரித்துறை அலுவலகத்திற்கு புகார்கள் வந்தன. இதையடுத்து மதுரை வருமானவரி புலனாய்வு பிரிவு அதிகாரிகள், விளக்குத்தூண் போலீசில் புகார் அளித்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்ததில் விக்னேஷ்குமார், இவ்வாறு பல இடங்களில் லட்சக்கணக்கில் பணம் வசூலித்து மோசடியில் ஈடுபட்டதாக கண்டுபிடிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து, அவரை கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications