மதுரை முருக பக்தர்கள் மாநாடு.. அண்ணாமலை மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு.. போலீஸ் நடவடிக்கை
மதுரை: மதுரையில் இந்து முன்னணி நடத்திய முருகன் மாநாடு தொடர்பாக அண்ணாமலை, காடேஸ்வர சுப்ரமணியம் உள்ளிட்டோர் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. மத உணர்வுளை புண்படுத்துதல், பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மதுரையில் ஜூன் 22ஆம் தேதி இந்து முன்னணி சார்பாக முருக பக்தர்கள் மாநாடு நடத்தப்பட்டது. இந்த மாநாட்டில் ஆந்திரா துணை முதல்வர் பவன் கல்யாண், தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அதேபோல் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் ஆர்பி உதயகுமார், செல்லூர் ராஜூ, கடம்பூர் ராஜூ உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

பெரியார், அண்ணா மீது கொச்சை விமர்சனம்
மாநாட்டில் இந்து முன்னணி சார்பாக ஒளிபரப்பப்பட்ட வீடியோவில் பெரியார் மற்றும் அண்ணா ஆகியோரை கொச்சையாக விமர்சனம் செய்திருந்தனர். ஆனாலும் அதிமுக நிர்வாகிகள் மாநாட்டை அமைதியாக வேடிக்கை பார்த்தனர். அதுமட்டுமல்லாமல் மாநாட்டில், குன்றம் குமரனுக்கே சொந்தம் என முருகன் மலைகளை காக்க வேண்டும்.
முருகன் மாநாடு தீர்மானங்கள்
தமிழகத்தில் உள்ள கோவில்களில் இருந்து இந்த சமய அறநிலைத்துறை வெளியேற வேண்டும், தேர்தல்களில் இந்துக்கள் ஒற்றுமையாக இருந்து இந்துக்களின் வாக்கு வங்கியை நிரூபிக்க வேண்டும் என்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதேபோல் அண்ணாமலை பேசுகையில், இந்து மக்களிடம் ஒற்றுமை வராது என்று அரசியல்வாதிகள் இங்கு அரசியல் செய்துகொண்டிருக்கிறார்கள்.
அண்ணாமலை பேச்சு
முதல் வீடான திருப்பரங்குன்றத்தில் பிரச்னை செய்தால் அனைத்து வீடுகளிலும் சூரசம்ஹாரம் செய்துவிட்டு, திருத்தணிக்கு அமைதியாக சென்றுவிடுவோம் என்று இந்த மாநாட்டின் மூலம் காட்டுகிறோம் என்று பேசினார். அதேபோல் முருக பக்தர்கள் மாநாட்டில் பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுத்த மோடி பாராட்டுகள் என்ற தீர்மானமும் சர்ச்சையானது.
சு.வெங்கடேசன் கேள்வி
இதுகுறித்து மதுரை எம்பி சு.வெங்கடேசன், திருப்பரங்குன்றம் மலையின் மீது இருப்பது சிக்கந்தர் தர்காவே அல்ல என்று வெளிப்படையாக மத பகைமையையும், வெறுப்பையும் உருவாக்கும் தீர்மானத்தை இந்து முன்னனி நிறைவேற்றி ஐந்து நாட்கள் ஆனநிலையில் இன்றுவரை தமிழ்நாடு காவல்துறை சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்காமல் இருப்பது ஏன்? என்று கேள்வி எழுப்பி இருந்தார்.
வழக்குப்பதிவு
இந்த நிலையில் மதுரையில் முருக பக்தர்கள் மாநாட்டில் பேசியது தொடர்பாக அண்ணாமலை, இந்து முன்னணி தலைவர் காடேஸ்வர சுப்ரமணியம் உள்ளிட்டோர் மீது மாநகரக் காவல்துறை 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மத ரீதியாக பேசி பகைமையை உருவாக்குதல், மத உணர்வுகளை புண்படுத்துதல், பொது அமைதிக்கு குந்தகம் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications