அதிகாலையிலேயே ஷாக்.. மதுரையில் மகளிர் விடுதியில் தீ விபத்து.. 2 பெண்கள் பலியான சோகம்!
மதுரை: மதுரையில் கட்ராபாளையம் அருகே உள்ள பெண்கள் தங்கும் விடுதியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்தில் சிக்கி இரண்டு பெண்கள் உயிரிழந்தனர். மேலும் சிலர் மூச்சுத்திணறல், உடல்நலக்குறைவு காரணமாக ஆஸ்பத்திரியில் சிகிச்சையில் உள்ளனர். அதிகாலை 4.30 மணியளவில் பிரிட்ஜ் வெடித்து தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

மதுரை மாவட்டம் கட்ரபாளையம் அருகே பெண்கள் தங்கும் விடுதி ஒன்று உள்ளது. இந்த பெண்கள் விடுதியில் 100-க்கும் மேற்பட்ட பெண்கள் தங்கியிருந்தனர். இந்த நிலையில் இன்று அதிகாலையில் இந்த விடுதியில் தீ விபத்து ஏற்பட்டது. அனைவரும் ஆழ்ந்து தூங்கிக்க்கொண்டிருக்கும் நேரத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த விடுதியில் உள்ள பழைய பிரிட்ஜில் இருந்து தான் தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. கரும்புகை வெளியேறி சில நிமிடங்களில் அறை முழுவதும் தீப்பிடித்து எரிந்தது. கரும்புகையுடன் தீப்பிடித்து எரிந்ததால் ஆழ்ந்து தூங்கிக்கொண்டிருந்தவர்கள் திடுக்கிட்டு எழுந்தனர். ஒருசிலர் தப்பி வெளியே வந்து இது குறித்து தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் கொடுத்தனர்.

எனினும் ஒருசிலர் உள்ளே சிக்கிக்கொண்டனர். இதையடுத்து தீயணைப்பு வீரர்கள் 2 வாகனங்களில் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். மேலும் தீ விபத்தில் சிக்கியவர்களை மீட்டு உடனடியாக ராஜாஜி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி 2 பெண்கள் உயிரிழந்தனர். பரிமளா சவுந்தரி, சரண்யா ஆகிய 2 பெண்கள் உயிரிழந்தனர்.

மேலும் சிலர் மூச்சுத்திணறல் மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தங்கும் விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தினால் அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்துள்ளது. போலீசாரும் அப்பகுதிக்கு வந்து எப்படி தீ விபத்து ஏற்பட்டது என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். தங்கும் விடுதியில் ஏற்பட்ட தீவிபத்தில் 2 பெண்கள் உயிரிழந்தது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.













Click it and Unblock the Notifications