மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அருகே பயங்கர தீ.. பிளாஸ்டிக் கடையில் இருந்து கிளம்பிய கரும்புகை! பரபர!
மதுரை: மதுரை தெற்கு மாசி வீதியில் மீனாட்சி அம்மன் கோயில் அருகே உள்ள பிளாஸ்டிக் கடையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டு, அதனால் கரும்புகை சூழ்ந்தது, தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டு தீ பரவலைக் கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அருகே தெற்கு மாசி வீதியில் பிளாஸ்டிக் பொருள்கள் விற்பனை கடை ஒன்று இயங்கி வருகிறது. இந்த கடை சுமார் 30 வருடங்களுக்கு மேலாக அந்த இடத்தில் இயங்கி வருவதாக கூறப்படுகிறது. கேரளாவை பூர்வீகமாக கொண்ட ஒருவர் இந்தக் கடையை நடத்தி வருகிறார்.

தரைத்தளத்தில் பிளாஸ்டிக் விற்பனை கடையும் மேல்தளத்தில் குடோனும் உள்ளன. இந்நிலையில் இந்த பிளாஸ்டிக் கடையில் இன்று காலை திடீரென தீப்பிடித்தது. காற்றின் வேகம் காரணமாக தீ அடுத்தடுத்த கடைகளுக்கும் வேகமாகப் பரவியது. தீ வேகமாகப் பரவி, அப்பகுதி முழுக்க கரும்புகை சூழ்ந்தது.
தகவல் அறிந்து, தீயணைப்பு வண்டிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தன. திடீர் நகர், அனுப்பானடி, தல்லாகுளம், உள்ளிட்ட பகுதிகளில் இருந்து விரைந்த 5 தீயணைப்பு வண்டிகள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டன. நீண்ட போராட்டத்திற்குப் பிறகு தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. தீ விபத்துக்கான காரணம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.

எப்போதும் மக்கள் நெரிசல் மிகுந்த மீனாட்சி அம்மன் கோவில் பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தீ விபத்து காரணமாக தெற்கு மாசி வீதியில் போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டு வாகனங்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டன.
கடந்த 2 ஆண்டுகளாக மீனாட்சி அம்மன் கோவிலைச் சுற்றியுள்ள பழமையான கட்டிடங்களில் அடிக்கடி தீ விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன. மதுரை மாநகராட்சி சார்பாக பழமையான கட்டடங்கள் கண்டறியப்பட்டு ஏற்கனவே நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications