தமிழகத்தில் ராமராஜ்ஜியம்.. திமுக - காங்கிரஸ்தான் எல்லாத்துக்கும் காரணம்.. சொல்கிறார் செல்லூர் ராஜு.!
மதுரை : எம்ஜிஆர் ஜெயலலிதா வழியில் அதிமுக ராமராஜ்ஜியத்தை கொடுக்கும் எனவும், பெட்ரோல் டீசல் விலை உயர்வுக்கு காரணம் மத்தியில் முன்னதாக ஆட்சியில் இருந்த காங்கிரஸ் - திமுக கூட்டணி தான் காரணம் என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியுள்ளார்.
Recommended Video
மதுரை கோரிப்பாளையம் பகுதில் உள்ள அதிமுக கட்சி அலுவலகத்தில் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
அப்போது , வரும் 5ம் தேதி அதிமுக சார்பில் சொத்து வரி உயர்வுக்கு எதிராக போராட்டம் நடத்தவிருப்பது குறித்து அதிமுக மூத்த நிர்வாகியும் முன்னாள் அமைச்சருமான செல்லூர் ராஜூ செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

சொத்து வரி உயர்வு
அப்போது பேசிய அவர், " சொத்து வரி உயர்வை எதிர்த்து அதிமுக சார்பில் 5-ஆம் தேதி போராட்டம் நடைபெற உள்ளது. வாக்களித்த மக்களுக்கு எந்த அரசாங்கமும் இந்த அளவுக்கு துரோகம் செய்தது கிடையாது. திமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்து பொங்கல் தொகுப்பு,பொங்கல் பரிசு இவை எதுவும் இல்லாமல் செய்துவிட்டனர். மேலும் அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட மக்கள் நலத்திட்டங்கள் அனைத்தும் புறக்கணிக்கப்பட்டு விட்டன. அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட அம்மா மினி கிளினிக் திட்டம், அம்மா குடிநீர் திட்டம் மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி திட்டம் இவை தொடர்ந்து நடைபெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

விலைவாசி விஷம்
தமிழகத்தில் தற்போது ஊரக நகர்ப்புற தேர்தல்கள் முடிந்து மக்கள் பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில் சொத்து வரி உயர்வு என்பது மாவட்ட, மாநகர எல்லைக்குள் மக்கள் பிரதிநிதிகள் முடிவு செய்ய வேண்டிய நிலையில், அதிகாரத்தை அரசு தன் கையில் எடுத்துக்கொண்டு இந்த முடிவை அறிவித்துள்ளது முற்றிலும் தவறானது. திமுக அரசு கடந்த 11 மாத காலமாக மக்களுக்கு விரோதமான செயல்களையே செய்து கொண்டுள்ளது. திமுக ஆட்சியில் விலைவாசி விஷம் போல் ஏறிவிட்டது பெட்ரோல் டீசல் விலையை மூன்று ரூபாய் குறைப்பதாக ஏதோ கண்துடைப்புக்காக கூறினார்கள்.

வரியை உயர்த்தியது சரியா?
கொரானா காலகட்டத்தில் 150 சதவீதம் சொத்து வரியை உயர்த்தியது சரியா? பெட்ரோல் டீசல் விலையை உயர்த்துவதற்கு மத்திய அரசு காரணம் சொன்னார்கள் இவர்கள் என்ன காரணம் சொன்னார்கள். ஊரக நகர்புற பிரதிநிதிகள் மாநகராட்சி கூட்டங்களில் வரிவிதிப்பு தீர்மானங்களை நிறைவேற்றி அதையே மக்களுக்கு பரிசாக கொடுக்க போகிறார்கள். பெட்ரோல் டீசல் விலையை உயர்த்துவது மத்திய அரசு கிடையாது திமுக-காங்கிரஸ் கூட்டணியின் போது தான் பெட்ரோல் டீசல் விலையை உயர்த்த தனி அமைப்பு தொடங்கப்பட்டு அந்த அமைப்பு தான் பெட்ரோல் டீசல் விலையை உயர்த்தி வருகின்றனர். மத்திய அரசு விலையை உயர்த்தவில்லை.

கேலி கிண்டல் செய்ய மாட்டார்களா?
திமுக அரசின் சொத்து வரி உயர்வை அதன் கூட்டணி கட்சிகளும் கடுமையாக எதிர்த்துள்ளனர். கூரை ஏறி கோழி பிடிக்க தெரியாதவன் வானத்தில் ஏறி வைகுண்டம் போகிறேன் என்பது போலத்தான் 2024 திமுக அதன் கூட்டணிகள் நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றிபெறும் என கூறுவது. ஸ்டாலின் செய்யமாட்டேன் என சொல்லிவிட்டு அங்கே என்ன செய்தார் என தெரியும். முதல்வர் ஸ்டாலின் டெல்லி போவதற்கு முன் ஆர்.எஸ் பாரதி ஒன்றிய அரசு எனக் கூறிய நிலையில் மத்திய அரசு என கூறினார். இனிமேல் தான் திமுக பற்றி தெரியும். எங்கள் முதலமைச்சர் பழனிச்சாமி வெளிநாடு போனால் கிண்டல் செய்வது ஆனால் ஸ்டாலின் குடும்பத்தோடு வெளிநாடு செல்வது இதையெல்லாம் கேலி கிண்டல் செய்ய மாட்டார்களா என அவருக்குத் தெரியாதா?

தமிழகத்தில் ராமராஜ்ஜியம்
ராமராஜ்ஜியத்தை நோக்கி இந்தியா முன்னேறுவதாக தமிழக ஆளுநர் பேசியது குறித்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் செல்லூர் ராஜு, பத்தாண்டு காலம் தமிழகத்தில் அதிமுக நடத்தியது தான் ராமராஜ்ஜியம். எம்ஜிஆர் நடத்தியது ராமராஜ்யம். அதிமுக ஆட்சியில் மக்கள் சுபிட்சமாக மகிழ்ச்சியாக இருந்தார்கள் அதுதான் ராமராஜ்யம் அதைத்தான் ஆளுநர் சொல்லியிருப்பார் என நினைக்கிறேன். திமுக ஆட்சியால் தமிழகம் கலியுகம் ஆக மாறிவிட்டது. விரைவில் தமிழகம் ராமராஜ்யம் ஆக மாறும். எம்ஜிஆர் ஜெயலலிதா வழியில் ராம ராஜ்ஜியத்தை அதிமுக கொடுக்கும் என பேசினார்.












Click it and Unblock the Notifications