கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு..துறையை பற்றி ஒன்னும் தெரியவில்லை..சொல்கிறார் செல்லூர் ராஜூ
மதுரை: கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு துறையை பற்றி ஒன்றும் தெரியவில்லை என்று முன்னாள் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ குற்றம்சாட்டியுள்ளார்.
மதுரை காளவாசல் பகுதியில் உள்ள மேற்கு சட்டமன்ற அலுவலகத்தில் அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மாநில அரசு சரியில்லை
மதுரையில் கொரானாவால் தற்போதும் அசாதாரண சூழ்நிலை தான் உள்ளது. தடுப்பூசி போடுவதில் மக்கள் ஆர்வமாக இருந்தாலும்,எப்போது தடுப்பூசி கிடைக்கும் என மக்களுக்கும் தெரியவில்லை. மாவட்ட ஆட்சியருக்கும் தெரியவில்லை. சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் தெரியவில்லை. மக்கள் தினந்தோறும் அலைந்து வருகின்றனர். இதனை கண்டிக்கிறோம். தடுப்பூசி குறித்த சரியான அறிவிப்புகளை மாநில அரசு வெளியிடவில்லை.

டெல்லி போயிருக்கலாம்
இரண்டாம் டோஸ் போடுபவர்களுக்கான தடுப்பூசியூம் இல்லை. முதல் டோஸ் தடுப்பூசியும் இல்லை. முதல்வர் முகக்கவசம் எப்படி போடுவது? என கூறுகிறார். ஒருவருடத்திற்கு முன்பே முகக்கவசம் போட மக்களுக்கு தெரியும். தடுப்பூசி வாங்குவதில் சாணக்கியத்தனமாக பெற வேண்டும் என்ற நிலையை மக்களும், அதிமுகவும் எதிர்ப்பார்க்கின்றனர். தமிழக அரசு தடுப்பூசிகளை அதிகமாக பெற வேண்டும். தடுப்பூசிகளை பெற முதல்வரும், அமைச்சர்களும் ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. டெல்லிக்கு போயிருக்கலாம். தடுப்பூசியை கேட்டு வாங்கியிருக்கலாம்.

இறப்பு சான்றிதழ் கொடுக்கவில்லை
தடுப்பூசி பெற நடவடிக்கை எடுக்காமல் திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். கொரானாவால் இறந்தவர்களுக்கு பிரதமர் பத்து லட்சம் அறிவித்தார். முதல்வர் ஐந்து லட்சம் அறிவிக்கிறார். ஆனால் ஒரு கோடி ரூபாய் கொடுக்க வேண்டும் என சொன்னவர் ஸ்டாலின். கொரானாவால் இறந்தவர்களுக்கு சான்றிதழ் அளிக்க மறுக்கின்றனர். என் தொகுதியிலேயே நிறைய பேருக்கு இறப்பு சான்றிதழ் கொடுக்கவில்லை. என் தொகுதி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பணம் எப்படி பெற முடியும்?
கொரானாவால் இறந்தவர்களின் இறப்புச்சான்றிதழில் இறப்புக்கான காரணம் இடம்பெறாது என அரசு மருத்துவமனையில் போர்டு வைத்துள்ளனர். கொரானாவால் இறந்தவர்களின் இறப்புச்சான்றிதழ் விவகாரத்தில் முதல்வர் கவனம் செலுத்த வேண்டும். 5 லட்சம் கொடுப்பேன் என சொல்லிவிட்டு இறப்புக்கான காரணம் போடவிட்டால் எப்படி பணத்தை மக்கள் பெற முடியும்?

ஐ.பெரியசாமி மீது புகார்
ஐ.பெரியசாமிக்கு இன்னும் துறையை பற்றியே ஒன்றும் தெரியவில்லை. அவர் விருப்பம் இல்லாமல் அத்துறையில் உள்ளார். அந்த துறையை ஏற்றுக்கொள்ளவில்லை. மனவெறுப்பில் உள்ளதாக கூறுகின்றனர். இந்தியாவிலேயே தமிழகம் மட்டுமே கூட்டுறவு துறையை கணினி மயமாக்கி உள்ளது. கூட்டுறவு வங்கிகளில் கணினி மயமாக்கப்பட்டு அனைத்து கடன் விவரங்களும் பதிவு செய்யப்பட்டுள்ளது.என்ன கடன், யார் வாங்கியது என்ற விவரங்கள் உள்ளது. தவறு செய்தவர்கள் மீது அதிமுக ஆட்சியில் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

தெரிந்து பேசணும்
பயிர்க்கடன் இல்லாதவர்களுக்கு தள்ளுபடி செய்ய முடியாது. யார் எங்கேயும் தவறு செய்ய முடியாது. என் துறையை பற்றி பேசவும்,குறை கூறினால் அதற்கு பதில் சொல்லவும் நான் தயார்.கூட்டுறவு சங்கங்ளை திறம்பட நடத்தி வங்கிகளின் டெபாசிட்டை உயர்த்தினோம். ஒரு குறையை பற்றி குறை சொல்லும் போது தெரிந்து கொண்டு பேச வேண்டும். இவ்வாறு செல்லூர் ராஜூ தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications