தூங்கா நகரில் படுஜோராக நடக்கும் பணிகள்.. அடையாளம் தெரியாமல் மாறப்போகும் மதுரை ரேஸ்கோர்ஸ் ஸ்டேடியம்!
மதுரை: நடப்பாண்டு டிசம்பர் மாதம் தமிழ்நாட்டில் ஜூனியர் ஹாக்கி உலகக்கோப்பை நடக்கவுள்ளது. சென்னை மற்றும் மதுரை மாவட்டங்களில் இந்த போட்டிகளை நடத்த தமிழக அரசு முடிவு செய்துள்ள நிலையில், அதற்கான ஆயத்த பணிகளை முடுக்கிவிட்டுள்ளது. குறிப்பாக மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் பார்வையாளர்கள் அமர்ந்து போட்டிகளை பார்ப்பதற்கான கேலரி கட்டுமான பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
ஹாக்கி உலகக்கோப்பை
நடப்பாண்டு டிசம்பர் மாதம் தமிழ்நாட்டில் ஜூனியர் ஹாக்கி உலகக்கோப்பை தொடர் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நவ.28 முதல் டிச.10 வரை இந்த தொடர் சென்னை மற்றும் மதுரை ஆகிய நகரங்களில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த தொடரில் உலகம் முழுவதும் இருந்து 24 நாடுகள் பங்கேற்க உள்ளன. இதனை சிறப்பாக நடத்த தமிழக அரசு தயாராகி வருகிறது.

ரேஸ்கோர்ஸ் மைதானம்
சென்னையில் மேயர் ராதாகிருஷ்ணன் மைதானத்திலும், மதுரையில் ரேஸ்கோர்ஸ் மைதானத்திலும் போட்டிகள் நடக்கவுள்ளன. மதுரையில் சர்வதேச தரத்திலான ஹாக்கி அரங்குகள் இருந்தாலும், பார்வையாளர்கள் அமர்ந்து பார்க்கும் வகையில் கேலரி, வீரர்களுக்கான ஓய்வறை உள்ளிட்ட வசதிகள் கிடையாது. இதுவரை மதுரையில் 2 முறை தேசிய அளவிலான ஹாக்கி போட்டிகள் நடத்தப்பட்டுள்ளன.
தமிழக அரசு மும்முரம்
முதல்முறையாக சர்வதேச தொடர் நடத்தப்படுவதால் மதுரை ரேஸ்கோர்ஸில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. அதற்காக மட்டும் ரூ.55 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மதுரையில் உள்ள ஹாக்கி அரங்கில் செயற்கை டர்ப் அமைக்கப்பட்டு நீண்ட காலமாகிவிட்டது. இதனால் புதிய டர்ப் அமைக்கப்பட உள்ளது.
கேலரி பணிகள்
அதேபோல் ஹாக்கி அரங்கையொட்டி கீழ் தளத்தில் வீரர்களுக்கு ஓய்வறை, உடைமாற்றும் அறை, முதலுதவி அறை, அலுவலர்களுக்கான அறைகள் அமைக்கப்பட உள்ளன. அதேபோல் ஹாக்கி அரங்கின் மேல்தளத்தில் இரு பிரிவாக ஆயிரம் பேர் அமரும் வகையில் கேலரி அமைக்கப்பட உள்ளது. விஐபி-க்களுக்கு என்று தனி கேலரியும் அமைக்கப்பட உள்ளது.
எப்போது முடியும்?
இதற்கான அஸ்திவாரம் அமைக்கும் பணிகள் தொடங்கி மும்முரமாக நடந்து வருகிறது. இந்த நவம்பர் மாதத்திற்குள் இந்த பணிகளை முடிக்க தமிழக அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. ஜூனியர் ஹாக்கி உலகக்கோப்பை தொடரில் பங்கேற்க வரும் வீரர்கள் தங்குவதற்கு ஹோட்டல்களில் ஏற்பாடு செய்யப்படும் என்று தெரிய வந்துள்ளது. இந்த தொடரில் சுமார் 40 போட்டிகள் வரை மதுரையில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.












Click it and Unblock the Notifications