தமிழகத்தில் முடங்கும் சிலிண்டர் விநியோகம்.. வேலைநிறுத்தம் அறிவித்த டெலிவரிமேன்.. மக்களே கவனம்
மதுரை: குறைந்தபட்ச ஊதியத்தை முழுமையாக வழங்குவது, அகவிலைப்படியை உயர்த்தி வழங்குவது உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து தமிழகத்தில் சமையல் எரிவாயு விநியோகம் செய்யும் அனைத்து சிலிண்டர் டெலிவரிமேன் தொழிற்சங்கம் சார்பில் மாநிலம் முழுவதும் அக்டோபர் 26ம் தேதி வேலைநிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளதால் சிலிண்டர் விநியோகம் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் தொழிலாளர்களின் உரிமைகளை நிலைநாட்டும் வகையில் தொழிற்சங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. பல்வேறு தொழிற்சாலைகள், நிறுவனங்கள், ஆட்டோ, லாரி ஓட்டுனர்கள் என்று ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியே தொழிற்சங்கம் உள்ளது.

தொழிலாளர்களின் உரிமைகள் பறிக்கப்படும்போது இந்த சம்பந்தப்பட்ட நிர்வாகத்திடம் தொழிலாளர்கள் சார்பில் அவர்களுக்கு தேவையான சலுகைகளை பெற்று கொடுக்கும் வகையில் தொழிற்சங்கங்கள் செயல்பட்டு வருகின்றன.
அந்த வகையில் தான் தமிழகத்தில் சிலிண்டர் விநியோகம் செய்யும் டெலிவரிமேன் தொழிற்சங்கம் திடீர் வேலைநிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ளது. அதாவது தமிழகம் முழுவதும் இந்தியன், எச்பி, பாரத் கியாஸ் ஏஜென்சி நிறுவனங்களில் இருந்து மக்கள் அதிகளவில் சிலிண்டர்களை வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். இந்த ஏஜென்சிகளின் கீழ் சிலிண்டர் டெலிவரி செய்யும் டெலிவரிமென், மெக்கானிக், டிரைவர்கள், குடோன் கீப்பர், லோடுமேன்கள், பணியாளர் உள்ளிட்டவர்களை உள்ளட்டவர்கள் தான் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.
அதாவது சட்டப்படி குறைந்தபட்ச ஊதியம் வழங்குவது, அகவிலைப்படி உயர்வு, தீபாவளி போனஸாக ரூ.12 ஆயிரம் + விடுமுறையுடன் கூடிய ஒருநாள் சம்பளம், அரசு விடுமுறை நாட்களுக்கு சம்பளத்துடன் விடுப்பு உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி வரும் 26ம் தேதி வேலைநிறுத்த போராட்டத்தை அனைத்து எல்பிஜி சிலிண்டர் டெலிவரிமென் தொழிற்சங்கம் அறிவித்துள்ளது. இதனால் தமிழகத்தில் சிலிண்டர் விநியோகம் பாதிக்கப்பட உள்ளது.
இதுபற்றி மதுரையில் தொழிற்சங்கத்தை சேர்ந்தவர்கள் கூறுகையில், ‛‛ஏஜென்சிகள் தொழிலாளர்களுக்கு உரிய ஊதியம் வழங்குவதில்லை. பலருக்கும் ஊதியம் சரியாக கிடைப்பது இல்லை. இதுபற்றி ஏஜென்சிகளிடம் கேட்டால் பணியை விட்டு நிற்கும்படி கூறுகின்றனர். இதனால் தொழிலாளர்களின் நலன் கருதி அக்டோபர் 26ஆம் தேதி தமிழகம் முழுவதும் ஒருநாள் அடையாள வேலை நிறுத்த போராட்டம் நடைபெற உள்ளது. இதில் முடிவு கிடைக்க வேண்டும். இல்லாவிட்டால் தொடர்ந்து வேலை நிறுத்த போராட்டம் நடத்தப்படும்" என்றனர்.












Click it and Unblock the Notifications